மூன்று விதமான படைப்புகள் இருக்கின்றன… வாழ்வியலின்
நிகழ்வுகளை அப்படியே எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சமாக கற்பனைகளை கலந்து படைக்கப்படும்
யதார்த்தமான படைப்புகள், (காதல், அங்காடித் தெரு, பரதேசி போல) யதார்த்தத்தின் சிறுதுளியான
கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதனைச் சுற்றி கற்பனைகளை பின்னுகின்ற படைப்புகள். இதனை
யதார்த்த பிரச்சனைகளுக்கு கற்பனையாக அல்லது கனவு நிலையில் இருந்து ஒரு தீர்வை சொல்லும்
திரைப்படங்கள் என்றும் கொள்ளலாம். (அவதார், இண்டர்ஸ்டெல்லர், கத்தி, இந்தியன் போல)
முழுக்க முழுக்க கற்பனைகளால் மட்டுமே கட்டப்படும் படைப்புகள்.. (இரண்டாம் உலகம், ஹாரி
பாட்டர், லார்ட் ஆப் த ரிங்க்ஸ் போல) இதில் இந்த திருடன் போலீஸ் இரண்டாவது வகைப்பாட்டில்
வருகிறது… திருடன் போலீஸ் மட்டும் அல்ல.. தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்கள் வருவது
இந்த இரண்டாவது வகைப்பாட்டின் கீழ்தான்…
என்னைப் பொறுத்தவரையில் இந்த மூன்றுவிதமான
படைப்புகளிலும் ஒவ்வொருவிதமான சிக்கல்கள் இருக்கின்றன.. எதுவுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை
அல்ல… ஆனாலும் தமிழ்சூழலில் அதிகமான அளவு படைக்கப்படும் படைப்புகள் இந்த இரண்டாவது
வகைப் படைப்புக்கள் தான் என்பதால் அது சார்ந்தே பேச விளைகிறேன்.. கற்பனை சார்ந்து படைக்கப்படும்
படைப்புக்களில் அந்த கற்பனை எப்படிப்பட்டது என்பது மிகமிக முக்கியம்… அந்தக் கற்பனை
அழகானதாகவோ, ஆச்சரியமானதாகவோ, சுவாரஸ்யமானதாகவோ, வசீகரமானதாகவோ அல்லது நம்மை யோசிக்க
தூண்டி முன்நகர்த்தும் கற்பனையாகவோ இருக்க வேண்டியது மிகமிக முக்கியம்… அப்படி இல்லாமல்
அர்த்தமற்ற, வறட்சியான கற்பனைகளை கொண்டு கட்டப்படும் திரைப்படங்கள் எந்தவிதமான தயவு
தாட்சண்யமும் இன்றி நிராகரிக்கப்படும் என்பது நிதர்சனம்..
\திருடன் போலீஸ் திரைப்படத்தின் ஒருவரிக்
கதையை இப்படிக் கூறலாம்.. நேர்மையான போலீஸ்காரராக இருந்த தன் தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை
நாயகன் சட்டத்தின் முன் நிறுத்துவது. இன்னும் ஒரு சாரார் இந்தப் படத்தின் ஒருவரிக்
கதையை இப்படிச் சொல்லலாம்.. ”உயிரோடு இருக்கும் போது தன் தந்தையின் அன்பையும் அக்கறையையும்
புரிந்துகொள்ளாத மகன், அவரது மரணத்துக்கு பின்னர் அதனை உணர்ந்து கொள்வது” ஆனால் இந்த
இரண்டாவது ஒருவரிக் கதையில் எனக்கு உடன்பாடு இல்லை.. ஏனென்றால் ஒருவரிக் கதையென்பது
படம் முடிவடையும் புள்ளிவரை தொடர்ந்து வருவதாக இருக்க வேண்டும்.. தன் தந்தையின் அன்பை
அவன் உணர்ந்து கொள்வதுதான் ஒருவரிக் கதை என்றால், படத்தின் இறுதிக்காட்சியில் தான்,
அவன் தன் தந்தையின் அன்பை உணர்ந்திருப்பான்… இங்கு அந்த அன்பை அவன் உணர்வது என்பது
படத்தின் பாதியிலேயே வந்துவிடுகிறது.. ஆக கதை அது அல்ல… முதலில் சொன்னது தான்… இரண்டாவது
சொன்ன ஒருவரிக்கதை, அந்த மையக்கதையை விளக்க துணையாக வந்திருக்கும் ஒரு கிளைக்கதை. அவ்வளவே…
சரி.. மேற்சொன்ன கதையில் கற்பனை எங்கிருக்கிறது..?
யதார்த்தம் எங்கிருக்கிறது என்று கேட்டால், காவல்துறையில் நேர்மையாக செயல்பட விரும்பும்
காவலர்களுக்கு உண்டாகும் நெருக்கடிகளும், சமயங்களில் அந்த நேர்மையால் அவர்கள் உயிரிழக்கும்
சம்பவங்களும் தான் யதார்த்தம்…. அப்படி இறந்து போன தன் தந்தையின் இறப்புக்கு காரணமானவர்களை
நாயகன் எப்படி சட்டத்துக்கு முன் நிறுத்துகிறான் என்பதில் தொடங்கி, அவர் தந்தை எப்படி
யாரால் இறந்து போகிறார்..? அவர்கள் எப்படிப்பட்ட நபர்கள், என்ன மாதிரியான தொழில் செய்பவர்கள்..?
என படத்தில் வரும் மற்ற எல்லா சம்பவங்களுமே கற்பனைதான்.. ஆனால் அந்தக் கற்பனை ஒரு அபத்தமான,
அரை வேக்காட்டுத்தனமான கற்பனை என்பதால் படத்தின் இரண்டாம் பாதியில் நம்மால் கொஞ்சம்
கூட ஈடுகொடுத்து படம் பார்க்க முடியாமல் வெறுப்பை உமிழத் தொடங்குகிறோம்… ஆக இந்தப்
படக் குழுவினர் இந்த கற்பனையில் தோற்றதால், படத்தின் கதைகூட படத்தை காப்பாற்ற முடியாமல்
போய்விடுகிறது..
படத்தின் முதல்பாதியில் ஓரளவுக்கு படத்தின்
மீது இருந்த ஈடுபாடும், எதிர்பார்ப்பும், நல்ல அபிப்பிராயங்களும் பின்பாதி திரைப்படம்
ஓடத் தொடங்கியதும், அவைகளும் ஒவ்வொன்றாக ஓடத் தொடங்கி ஒரு புள்ளியில் காணாமலே போய்விடுகின்றன..
படத்தின் ஒரு கிளைச் சரடாக வரும் தந்தை மகனுக்கு இடையிலான பாசம், ஒரு கட்டத்தில் உண்மையாகவே
பகடி செய்யப்படும் பாவனையில் அரங்கேற்றப்பட்டு இருப்பதை எந்தக் கோணத்தில் இயக்குநர்
நகைச்சுவை என்று கருதினார் என்பதை நம்பவே முடியவில்லை.. அதுதவிர்த்து தொடர்ச்சியாக
முட்டாள்தனமான, கோமாளித்தனமான, பலவீனமான வில்லன்களை கொண்டு வெளிவந்திருக்கும் மூன்றாவது
திரைப்படம் இந்த திருடன் போலீஸ்.. இதற்கு முந்தையை இரண்டு படங்கள் முறையே “ஒரு ஊர்ல
ரெண்டு ராஜாவும், கத்தியும். ஆயிரக்கணக்கான வில்லன் ஹீரோ தமிழ் திரைப்படங்கள் எடுத்தப்
பின்னரும், ஒரு வில்லனின் கதாபாத்திரத்தை எப்படி செதுக்குவது என்பதில் நம் இயக்குநர்களுக்கு
இருக்கும் தெளிவின்மை என்னை ஆச்சரியப்படுத்துகிறது..
நேர்மையான கண்டிப்பான அதிகாரி போன்று வேடம்
போட்டுக் கொண்டே உள்குத்து வேலைகளில் ஈடுபடும் போலீஸ் உடையணிந்த திருடர்களை காட்டிய
போதும், காவல்துறையில் புதிதாக பணிக்கு சேர்ந்த போலீஸ் மற்றும் வயதாகியும் வேலையை தொடர்ந்து
கொண்டிருக்கும் போலீஸ் என அவர்களின் கஷ்ட நஷ்டங்களை அக்கறையோடு அட்டவணைப்படுத்திய போதும்,
நாம் நம் சிறுபிள்ளை பிராயத்தில் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றான இந்த திருடன் போலீஸ்
ரொம்பவே பிடித்தது.. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தொடங்கி, திரைப்படம் நாம் விளையாடிய
திருடன் போலீஸ் விளையாட்டைப் போலவே எப்போது மாறத் தொடங்கியதோ, அதற்குப் பின்னர் வந்த
எந்தக் காட்சியிலும் மனம் லயிக்கவே இல்லை.. ஒரு புள்ளியில் வெறுப்பு மேலிட எழுந்து
போய்விடலாமா…?? என்று என்னும் அளவுக்கு படம்
என்னை சோதித்தது என்று சொன்னால், அதில் மிகையில்லை..
தினேஷ்-க்கு குக்கூ திரைப்படத்துக்கு பிறகு
வந்திருக்கும் திரைப்படம்.. இதுவும் சொல்லிக் கொள்ளும்படியான திரைப்படமாக அமையால் போனது
துரதிஷ்டமே.. அவர் கதைத்தேர்வில் இன்னும் அதிக மெனக்கெடலுடன் கவனமாக இருப்பது நல்லது..
அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் அவரது தோற்றமும் உடல்மொழியும் சாதாரண கதாபாத்திரத்துக்கு
பொருந்திய அளவுக்கு போலீஸ் கதாபாத்திரத்துக்கு பொருந்தவே இல்லை என்பதையும் சொல்லியெ
ஆக வேண்டும்… இந்தத் திரைப்படத்தில் நாயகன் தினேஷை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்
ஐஸ்வர்யா… இவரைப் பற்றி சொல்லிக் கொள்ள இந்த ஒரு வரியை தவிர வேறு எதுவும் இல்லை.. விஜய்
சேதுபதி அவர்கள் சிறப்பு தோற்றத்தில் தோன்றினால் படம் வெற்றி பெற்றுவிடும் என்கின்ற
தப்பான அபிப்பிராயங்கள் இன்னும் வேறு ஏதேனும் இயக்குநர்களுக்கு இருந்தால், உங்கள் எண்ணங்களை
மாற்றிக் கொள்ளுங்கள்.. அவர் சிறப்புத் தோற்றத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடியும்
படம் ஓடவில்லை.. இசை யுவன் சங்கர் ராஜா.. ஏதோ ஒப்புக்கு ட்யூன் போட்டுக் கொடுத்திருப்பதை
போல் தெரிகிறது… எந்தப் பாடலிலும் பிண்ணனி இசையிலும் ஜீவனே இல்லை…
மொத்தத்தில் இந்த திருடன் போலீஸ் – சிறுபிள்ளைத்தனமான
விளையாட்டு..
No comments:
Post a Comment