Saturday 6 September 2014

அமர காவியம்:

திருடுவது, கொலை செய்வது, கற்பழிப்பது இவையெல்லாம் கொடூரமானது. உணர்ந்திருக்கிறீர்களா…? உணராவிட்டாலும் ஒத்துக் கொள்வீர்கள் தானே..?? திருடுவது, கொலை செய்வது, கற்பழிப்பது இவை எல்லாம் புனிதமானது என்பதை உணரவும் முடியாது.. ஒத்துக்கொள்ளவும் முடியாது….? அப்படித்தானே..?? அன்பு செய்வது, விட்டுக் கொடுப்பது, உதவி செய்வது இவையெல்லாம் புனிதமானது என்பேன்.. அதையும் உணர்ந்தும் இருப்பீர்கள் ஒத்துக் கொள்ளவும் செய்வீர்கள்… அவைகளையே நான் கொடூரமானது என்று சொன்னால் அதை ஒத்துக்கொள்ளமாட்டீர்கள் தானே… சரி.. மேற்சொன்ன எல்லா சொற்களையும் எடுத்து விட்டு அந்த வெற்றிடங்களை காதலை இட்டு நிரப்புங்கள்… காதல் கொடூரமானது.. காதல் புனிதமானது… உணர்ந்திருக்கிறீர்களா..?? ஒத்துக் கொள்வீர்களா…??? வேறு வழியே இல்லை… இதை நீங்கள் உணர்ந்தால் மட்டுமே ஒத்துக்கொள்ள முடியும்…. அது எப்படி ஒரே செயல் எல்லாவற்றுக்குமானதாக ஆகி நிற்க முடியும்… இரண்டு எதிரெதிர் தளங்களில் இயங்கக்கூடியதாக ஒரே செயல் எப்படி இருக்க முடியும்… அதுதான் காதலின் மகத்துவம் என்றெல்லாம் நான் கொண்டாட விரும்பவில்லை… அதற்குள் ஒளிந்திருக்கும் ஒரு உளவியலையே நான் பார்க்க விரும்புகிறேன்…


மேற்சொன்ன செயல்களில் காதலை தவிர்த்து பிற எல்லா செயல்களையும் எடுத்துப் பாருங்கள்… அந்த செயல்கள் யாருக்கு செய்யப்படுகிறதோ அந்த மனிதர்களிடம் இருந்து அது பெரும்பாலும் (நன்கு கவனியுங்கள்.. பெரும்பாலும் தான்… அதில் விதிவிலக்குகள் உண்டு..) ஒரே மாதிரியான எதிர்வினைகளைத் தான் பெற்றுத் தரும்… புரியும் படி சொல்வதென்றால், உங்களை ஒருவன் கொலை செய்ய வருகிறான்… அல்லது கற்பழிக்க வருகிறான்… அல்லது திருட வருகிறான்… உங்களிடம் எதிர்வினையாக என்ன தோன்றும்… பெரும்பாலும் பயம் அல்லது கோபம் தான்…. உங்களுக்கு யாரோ உதவி செய்யவோ, அன்பு செலுத்தவோ அல்லது விட்டுக் கொடுக்கவோ முயன்றால், பெரும்பாலும் நீங்கள் என்ன எதிர்வினை தருவீர்கள்… திரும்ப அன்பு அல்லது மகிழ்ச்சியை தருவீர்கள்.. ஆனால் எனக்குத் தெரிந்தளவில் இரண்டே இரண்டு செயல்கள் மட்டும் தான் அது யாருக்கு நிகழ்த்தப்பட்டாலும் எல்லாவிதமான எதிர்வினைகளையும் நிகழ்த்துவதற்கான சாத்தியக் கூறுகளை தனக்குள்ளே கொண்டு இருக்கிறது… அவைகளில் மிக முக்கியமான ஒன்று காதல், மற்றொன்று காமம்… இவை இரண்டுமே என்ன என்று நம் சமூகத்தில் பெரும்பாலான மக்களுக்கு இன்றுவரை தெளிவாக தெரியாது… தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்புவது இல்லை.. காமத்துக்கான பிரிவு இது இல்லை என்பதால் அதை அப்படியே இங்கு கைவிட்டு விடலாம்… காதலுக்கு வருவோம்…

ஒருவரிடம் மற்றொருவர் காதலை வெளிப்படுத்தும் போது எதிர்வினையாக அங்கு என்ன நிகழும் என்று உங்களால் அறுதியிட்டு சொல்ல முடியுமா..? என்று யோசியுங்கள்… அங்கு காதல் ஏற்றுக் கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும் என்பதல்ல நான் கேட்பது… அது உள்ளுக்குள் உங்களுக்கு ஏற்படுத்தும் உணர்வு என்ன என்பது தான் என் கேள்வி… அது உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கலாம்… துக்கத்தை கொடுக்கலாம்… பெருமையை கொடுக்கலாம், , வாழ்க்கை கொடுக்கலாம், திமிரை கொடுக்கலாம், ஏளனத்தை கொடுக்கலாம், பயத்தை கொடுக்கலாம், கோபத்தை கொடுக்கலாம், வாழ்க்கையை அழிக்கலாம், சண்டை சச்சரவுகளை கொடுக்கலாம், வலியை கொடுக்கலாம், சொர்க்கத்தை கொடுக்கலாம், நரகத்தை கொடுக்கலாம் சில சமயங்களில் மரணத்தையும் கொடுக்கலாம்… ஆக யாதுமாகி நிற்கிறது காதல்… ஏன்..?

முதல் பாராவில் நான் சொன்ன எல்லா செயல்களையும் மீண்டும் ஒரு முறை நினைத்துப் பாருங்கள்… அது யாருக்கு செய்ததாக இருந்தாலும் ஒன்று புனிதமானதாக இருக்கும் அல்லது கொடூரமானதாக இருக்கும்…. யாரை நீ அன்பு செய்தாலும் அது புனிதமானது தான்… அது போல யாரை நீ கொலை செய்தாலும் அது கொடூரமானது தான்… ஆனால் இந்த காதலும் காமமும் தான் இரண்டு தளங்களிலும் ஊசலாடிக் கொண்டே இருப்பவை… நீ காதல் செய்கிறாயா..?? அது யாரை என்று சொல், அது புனிதமானதா…? இல்லை கொடூரமானதா என்று நான் உனக்கு சொல்லுகிறேன் நீ காமம் செய்கிறாயா..? யாருடன் என்று சொல்.. அது புனிதமா..? இல்லை கொடூரமா என்பதை நான் உனக்கு சொல்லுகிறேன் என்பது தான் இங்கு நாம் எழுதாமல் வைத்திருக்கும் விதி… அதனால் தான் இந்த இரண்டும் புனிதத்தின் பக்கமும் கொடூரத்தின் பக்கமும் மாறி மாறி போய் வந்து கொண்டு இருக்கின்றன…

அமர காவியம் என்று டைட்டிலை போட்டு விட்டு, படத்தைப் பற்றி ஒரு வரி கூட எழுதாமல், எங்களுக்கு எதற்கு இவ்வளவு பெரிய முன்னுரையை எழுதிக் கொண்டு இருக்கிறாய் என்று கேட்கிறீர்களா…? காரணமாகத்தான்…. படத்தின் மையமே க்ளைமாக்ஸ் தான்… அதை என்னால் உடைத்து விடவும் முடியாது… அதைப் பற்றிப் பேசாமல் என்னால் பதிவு எழுதவும் முடியாது.. அதனால் தான் அவ்வளவு பெரிய காதல் கட்டுரை… க்ளைமாக்ஸில் ஏன் அப்படி நடந்தது என்பதற்கான பதில் அந்த கட்டுரையில் இருக்கிறது.. சரி கதைக்கு போவோம்…

திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தின் பதிவை எழுதும் போதே நான் குறிப்பிட்டு இருந்தேன்… உருகி உருகி ஒரு காதல் படம் பார்த்து வெகுநாட்கள் ஆயிற்று என்று.. அந்த ஏக்கத்தை திருமணம் என்னும் நிக்காஹ் தீர்க்கும் என்று எண்ணி ஏமாந்தேன்.. ஆனால் அமர காவியம் அதை தீர்த்து வைத்திருக்கிறது.. கதையென்னவென்றால் படத்தின் டைட்டிலே சொல்கிறதே அமர காவியம் என்று… இந்த தலைப்பை வைத்து நீங்கள் என்னவெல்லாம் யூகிப்பீர்களோ அது எல்லாமே நீக்கமற நிறைந்திருக்கிறது இந்தப் படத்தில்… எனக்குத் தெரிந்து குற்றவாளியின் பார்வையில் இருந்து அந்த சம்பவத்தை பின்னோக்கி சென்று பேசும் படம் இதுவாகத்தான் இருக்கும்.. என்று எண்ணுகிறேன்….


படத்தில் என்னை கவர்வது என்னவென்றால், ஒரு புரிதல் இல்லாத காதலில் என்னவெல்லாம் இருக்குமோ அதை அவ்வளவு தத்ரூபமாக யதார்த்தமானதாக அடுக்கி இருப்பது தான்… என்பேன்… இந்தப் பன்னிரெண்டாம் வகுப்பு காதலில், காமம் கண்ணியம் கட்டுப்பாடு, ( கடமை காதலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது ), சண்டை, சந்தேகம், பொறாமை, வீரம், துரோகம், நம்பிக்கை, குறும்பு, அறியாமை, இயலாமை, புரிதலின்மை, பொறுமையின்மை என பல இன்மைகளும், சில உண்மைகளும் அதோடு கொஞ்சம் காதலும் கலந்தே இருக்கிறது என்று கூறுவேன்….

படத்தின் க்ளைமாக்ஸ் மிகமிக முக்கியமான ஒன்று.. அதைப் பார்த்த பலரும் இது என்ன மாதிரியான எதிர்வினைகளை சமூகத்தில் ஏற்படுத்துமோ என்று பயந்த வண்ணத்தில் உள்ளது போல் தெரிகிறது.. அந்த பயம் நியாயமானது தான்… ”காதல் போயின் சாதல் சாதல் சாதல்” என்பதை இப்படத்திலும் கடைபிடித்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. யாதுமாகி நிற்கும் காதல் பெரியது தான்…. ஆனால் அந்த காதலையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் வாழ்க்கை அதைவிட பெரியதல்லவா….?? அதனால் தான் சொல்கிறேன் இந்தக் காதலை “அடடடடா…. உன்னதமான காதல் என்றெல்லாம் கொண்டாட வேண்டாம்…. காதலுக்காக உயிர் துறந்த ஒரு முட்டாளின் காதல் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்….

அதுபோல அதீதமாக இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் சமூகத்தை பாதித்து விடுமோ என்று அஞ்சத் தேவையில்லை….  ஏனென்றால் இந்தப் படத்தில் வரும் காதல் எங்களுக்கும் முந்தைய தலைமுறையின் காதல்… அதாவது கதை நடைபெறும் காலம் 1988-1989… இப்படி உருகி உருகி காதலிக்கும் ஜோடிகள் எல்லாம் பெரும்பாலும் இன்றைய காலத்தில் வழக்கொழிந்துவிட்டது…. இருந்தாலும் பெண்களுக்கு ஒரு சின்ன அறிவுரை… நீங்கள் காதலிக்கும் ஆடவர்கள் எல்லாம் தன்னம்பிக்கை, அதாவது அவர்கள் மீதே நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்களா..? என்று முதலில் தெரிந்து கொண்டு காதலிக்கத் தொடங்குங்கள்… அதுதான் உங்களுக்கும் நல்லது…. அவனுக்கும் நல்லது…


இந்த க்ளைமாக்ஸை விட படத்தில் எனக்கு மிகவும் ஆபத்தாக தெரிந்தது… அந்த காந்தக் கண்ணழகி, கதாநாயகி மியா ஜார்ஜ் தான்… படம் முடிவதற்குள் எல்லோருமே அவரை காதலிக்கத் தொடங்கி விடுகிறோம்… கண்ணை சிமிட்டிக் கொண்டு ”சொல்லு… இப்ப சொல்லு” என்று அவர் கேட்கும் போதெல்லாம்… நாயகன் சொல்வதற்குள் நமக்கு கத்தி சொல்லத் தோன்றுகிறது “ஐ லவ் யு” என்று… பிண்ணனி இவரே பேசினாரா என்று தெரியவில்லை.. அப்படி இல்லாமல் வேறொருவர் பேசியிருந்தால், “படிக்க வந்த இடத்தில் கதவை சாத்திவிட்டு வரும் சத்யாவைப் பார்த்து, “ஓய்..”என்று கொடுக்கும் அந்த ஒரு சத்தத்துக்காகவே கொத்து கொத்தாய் கொடுக்கலாம் பூங்கொத்து.. ஆர்யாவின் தம்பி சத்யா தான் நாயகன்…. கண்டிப்பாக சொல்லிக் கொள்ளும் படியான படம்… சில கோணங்களில் ஆர்யா போலவே தெரிகிறார்… நடிப்பும் நன்றாகவே வருகிறது.. ஆனால் அந்த மீசை தான் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது…. அடுத்ததாக படத்தின் மிகப்பெரிய பலம் ஜிப்ரானின் அற்புதமான பிண்ணனி இசை தான்… காட்சியில் இருக்கும் அழுத்தத்தை அதி அற்புதமாக நம் மனதுக்குள் கடத்துவதால் படம் பரிபூரணமாக ஆக்ரமிக்கிறது.. இன்றைய இளசுகளுக்கு இந்தக் காதல் பிடிக்குமா என்று தெரியவில்லை… ஆனால் தலைமுறை தாண்டிய காதலர்கள் பலர் கண்ணில் தண்ணீர் வைத்து செல்வதை காண முடிந்தது…

”நான்” திரைப்படம் கொடுத்த இயக்குநர் ஜீவா சங்கரின் இரண்டாவது படம் இது… பல நீண்ட நாட்களுக்கு பிறகு ஒப்பனையோ மிகையுணர்வோ இல்லாத ஒரு காதல் படம் பார்த்த அனுபவம்… ஒளிப்பதிவும் இவரே தான்…. ஊட்டி காட்சிகளில் பாலுமகேந்திராவின் ப்ரேமை பார்த்ததை போல அப்படி ஒரு ரம்மியம்… வாழ்த்துக்கள் சார்….


சரி… மொத்தத்தில் இந்த அமர காவியம் எப்படி..?? அதான் சொன்னேனே.. இது உன்னதமான காதல் காவியம் என்று கொண்டாட வேண்டிய படம் அல்ல… ஒரு காதலுக்காக உயிர் துறக்கும் ஒரு முட்டாளின் காதல் கதை… என்று வேண்டுமானால் சொல்லலாம்… பார்க்கலாமா..?? என்றால் பார்க்கலாம்… கொஞ்சம் பொறுமை வேண்டும் என்றும் சொல்லுவேன்… அதே நேரம் கண்டிப்பாக பாருங்கள்… என்றும் சொல்லுவேன்.. ஏனென்றால் ஆண்களாகிய நீங்கள் உங்களது காதலில் முட்டாளாக இருந்து விடக் கூடாது என்பதற்காகவும், பெண்களாகிய நீங்கள் ஒரு முட்டாளை காதலித்து விடக் கூடாது என்பதற்காகவும்.. கண்டிப்பாக பாருங்கள்…

No comments:

Post a Comment