Saturday 13 September 2014

பர்மா:

கார் சேசிங்க் கேள்விப்பட்டு இருப்பீர்கள்… படங்களில் பார்த்தும் இருப்பீர்கள்… கார் சீசிங்க் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா…?? அதாவது கார் லோன் போட்டு கார் வாங்கிவிட்டு, அதன் மாதத் தவணையை செலுத்தாமல் டிமிக்கு கொடுத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ காரை லவட்டிக் கொண்டு வருவது தான் கார் சீசிங்க்… கேட்கும் போதே படு த்ரில்லாக இருந்தது இந்த லைன்.. ஏனென்றால் சிலர் அப்படி வாங்கிய காரை பலவிதமான சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்துவார்களாம்… அதுபோன்ற பார்ட்டிகளிடம் இருந்து காரை களவாடி கம்பெனியிடம் சேர்ப்பது என்பது லேசுபட்ட காரியம் அல்ல… உயிரே போனாலும் கேட்பதற்கு இல்லை… ஏனென்றால் இவர்கள் இப்படி அடி ஆட்களைக் கொண்டு காரை தூக்குவது என்பதும் சட்டவிரோதமானதுதான்… அப்படி காரைத் தூக்கும் போது வரும் பிரச்சனைகளுக்காக போலீஸிடம் எல்லாம் போகவும் முடியாது… கிட்டத்தட்ட ரவுடி தொழில் போன்று உயிரைப் பணயம் வைத்து செய்யும் தொழில்தான் இது…


இது போன்ற வேலை செய்யும் ஒருவரை சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு எங்கள் இயக்குநருடன் வைத்து சந்தித்தோம்… அப்போது அவர் சொன்ன பல சுவாரஸ்யமான தகவல்களில் சில படு காமெடியாகவும் பல பயங்கர த்ரில்லாகவும் இருந்தன… அங்கு இருந்த எல்லா உதவி இயக்குநர்களுமே நினைத்துக் கொண்டோம் இதுவொரு அருமையான நாட் என்று… ஆனால் இதே பின்புலத்தை மையமாக வைத்து “பர்மா” என்ற பெயரில் ஒரு படம் வருகிறது என்பது தெரிந்ததும் எல்லோருக்கும் புஸ் என்று ஆகிவிட்டது… அதனால் தான் இந்தப் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பும் பலவிதமான கற்பனைகளும் இருந்தன… ஆனால் அதில் எந்தவிதமான எதிர்பார்ப்பையும் இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை…

படம் பார்ப்பதற்கு முன்னர் இது போன்ற கார் சீசிங் பற்றி எனக்கு என்ன தெரியும் என்றால்,  கள்ள சாவி போட்டோ அல்லது ஏதாவது மெல்லிய கம்பிகளை வைத்து திறந்தோ காரைக் கடத்திக் கொண்டு வருவார்கள் என்ற அளவுக்கு மட்டுமே எனக்கு படம் பார்க்கும் முன் தெரிந்து இருந்தது…. படம் பார்த்த பின்னரும் அதே அளவுக்கு மட்டும் தான் கார் சீசிங் பற்றி நாம் தெரிந்து இருப்போம் என்பது தான்… இந்தப் படத்தின் தோல்விக்கு அடையாளம்… காரை திருடுவதிலோ அல்லது எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதிலோ எந்தவிதமான புதுமையோ புத்திசாலித்தனமோ எதுவுமே இல்லாமல் ஒரு படம்…. இதில் நாயகன் 28 காரைத் தூக்குகிறான் என்பதற்கு சிலைடு போட்டு ஒன்று, இரண்டு என்று வேறு காட்டி வெறுப்பேத்துகிறார்கள்.. காரை எப்படி தூக்குகிறான் என்பதை காட்டச் சொன்னால்… நமக்கு எத்தனை காரை அவன் தூக்குகிறான் என்றுதான் காட்டுகிறார்கள்… இன்று ஒரு படம் பார்த்தேன் என்கின்ற உணர்வே இல்லாமல் இருக்கிறது…

கார் சீசிங்க் என்பதை பின்புலமாக வைத்துக் கொண்டு, அதில் எதற்கு யாரோ கொள்ளையடித்த பணம் ஒவ்வொரு இடமாக கைமாறிக் கொண்டே செல்கிறது என்கின்ற அலுத்துப் போன மியூசிக் சேர் விளையாட்டு… அது இவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்களத்தில் இவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதைத் தான் காட்டுகிறது.. படம் மொத்தமே 1.40 மணி நேரம் தான் அதில் முதல் 20 நிமிடங்களுக்கு கதையே இல்லை… இதுபோக ரெண்டு டூயட் சாங்க், காமெடி என்கின்ற பெயரில் ஒரு காமெடியன், நாயகி என்கின்ற பெயரில் நாயகனுக்கு ஒரு காதலி, ஏன் காதலிக்கிறோம் எதற்கு காதலிக்கிறோம் என்றே தெரியாமல் அவர்கள் செய்யும் பழைய இத்துப் போய், புளித்து புரையேறிப் போன புடலங்காய் காதல் வேறு…  ஆக இவைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் இவர்கள் கதை சொல்லி இருப்பது கிட்டதட்ட 40 முதல் 50 நிமிடங்கள் தான்…. அதிலேயே இத்தனை சிக்கல்கள்…


இது தவிர்த்து கதாபாத்திரங்களின் கேரக்டரைஷேசனைப் பார்த்தால் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் தோன்றுகிறது… சிக்கல் வரும் என்று தெரிந்தும் ஏன் தேவையே இல்லாமல் எல்லோரையும் நாயகன் மாட்டிவிட்டுக் கொண்டே இருக்கிறான்… கடைசியில் அவனும் மாட்டிக் கொள்ளப் போகிறான் என்பது போன்ற முடிச்சி… என இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது யாருக்குமே புரிந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிகிறது… கார் சீசிங் செய்து கொண்டு வரும் மனிதர்களின் வாழ்க்கை இல்லை, அந்தத் தொழிலைப் பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்கான கதை பின்புலம் இல்லை.. அந்த கார் சீசர்களின் சாகசம் இல்லை… அவர்களது வாழ்க்கையில் இயக்குநரின் கற்பனை இல்லவே இல்லை… இருப்பதெல்லாம் இத்துப் போன காதலும், இளிப்பே வராத காமெடியும், நாம் கடந்து வந்த அதே பழைய பாணியிலான நம்பிக்கை துரோகமும் தான்… இதை பார்த்து வியப்பதற்கோ, சிரிப்பதற்கோ, ரசிப்பதற்கோ அல்லது யோசிப்பதற்கோ எதுவுமே இல்லை என்பது மட்டும் உறுதி..

மிகச் சுமாரான இசை, பிண்ணனி இசை, மிகச் சுமாரான நடிப்பு, ஒளிப்பதிவு என எல்லாமே மிகச் சுமாராகத் தான் இருக்கிறது…. தரணிதரனின் இயக்கமும் அப்படித்தான்…. இது இவருக்கு முதல் படம் போலும்…. இரண்டாம் படத்திலாவது இப்படிப்பட்ட குறைகளை களைந்து நல்லபடம் கொடுக்க முற்படுவார் என்று எதிர்பார்ப்போம்….

மொத்தத்தில் இந்தவார வரவான இந்த பர்மா திரைப்படம்…. கார் சீசிங் தொழில் செய்யும் மனிதர்கள் என்ற ஒற்றை வரியை ஒன்றை மணி நேர சினிமாவாக கொடுக்க முற்பட்டு, நம் பொறுமையை சோதிக்க முயற்சி செய்து, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறது…


No comments:

Post a Comment