Sunday 27 July 2014

திருமணம் என்னும் நிக்காஹ்:


ஒரு நல்ல காதல்கதை கொண்ட திரைப்படங்களைப் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டது.. அந்த ஏக்கத்தை திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படம் போக்கிவிடும் என்ற நம்பிக்கை அதன் ட்ரைலரைப் பார்த்தபோது ஏற்பட்டது.. படத்தின் முதல்பாதி வரை அப்படி ஒரு நம்பிக்கை வலுப்பெற்றுக் கொண்டுதான் இருந்தது.. ஆனால் இரண்டாம் பாதியில் கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் இவர்கள் செய்த குழப்பத்தில் அந்த நம்பிக்கை பொய்த்தோடு மட்டும் அல்லாமல் பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்து விடுகிறது திரைப்படம்..


ஒரு திரைப்படத்துக்கு முதல் இருபது நிமிடங்கள் எப்படி முக்கியமோ அதைவிட கடைசி இருபது நிமிடங்கள் மிகமிக முக்கியம்… முதல் இருபது நிமிடங்களை விட கடைசி இருபது நிமிடங்கள் படத்தின் ரிசல்ட்டை மாற்றும் சக்தி கொண்டவை என்பது அளப்பரிய உண்மை… உதாரணத்துக்கு சமீபத்தில் மிகப்பெரிய வணிக வெற்றி பெற்ற யாமிருக்க பயமேன் திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்… முதல் இருபது நிமிடங்கள் திரைப்படம் மிகமிக மோசமான மூன்றாம் தர காட்சியமைப்புகளைக் கொண்டு இருக்கும்… அது பல பார்வையாளர்களை நெளியச் செய்யும்.. ஆனால் கடைசி இருபது நிமிடங்கள் அப்படியே அதற்கு நேர்மாறாக அனைத்துவிதமான பார்வையாளர்களையும் தன்வசப்படுத்திக் கொள்ளும்… அந்தக் கடைசி இருபது நிமிடங்கள் தான் படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணம்… அரிமா நம்பி திரைப்படம் கூட அந்த கடைசி இருபது நிமிடங்களில் நம் சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டதால், அதன் வெற்றிப்படிகளில் தன்னையும் அறியாமல் சில படிகள் அது சறுக்கி விட்டதாகவே நான் கருதுகிறேன்…

நீங்கள் திரையரங்கை விட்டு வெளியேறும் போது என்ன மனநிலையில் வெளியேறுகிறீர்கள் என்பது அந்த கடைசி இருபது நிமிடங்களின் கணப் பொழுதில் தான் இருக்கிறது… இதுவொரு சின்ன உளவியல் தான்… உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த நண்பர் இருக்கிறார்… அவர் ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு மிகவும் பிடித்த மனிதராகவும் இருக்கலாம்… அல்லது ஆரம்பகாலங்களில் உங்களுக்கு அவர் பிடிக்காதவராக இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு பிடித்தவராக மாறி இருக்கலாம்… அது இங்கு பிரச்சனையில்லை.. அவரை ஒரு கட்டத்தில் நீங்கள் பிரிய வேண்டிய சூழல் நேர்கிறது…. உங்களுக்குள் ஒரு சின்ன கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அது மிகப்பெரிய சண்டையாக மாறி நீங்கள் அவரை விட்டுப் பிரிகிறீர்கள்… அல்லது தவிர்க்கமுடியாத சூழலால், அவர் வெளிநாட்டில் சென்று வசிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.. அவரை விமானநிலையத்தில் வழி அனுப்பி பிரியாவிடை கொடுத்து பிரிகிறீர்கள்… இரண்டு பிரிதலிலும் உங்கள் மனநிலை வெவ்வேறாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.. நீங்கள் அந்த நட்பை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதில் பெரும்பகுதியை அந்த கடைசி பிரிதலின் கணங்கள் தான் தீர்மானிக்கின்றன.. இந்த இரண்டு விதமான மனநிலைகளைத் தான் திரைப்படங்களும் கடைசி இருபது நிமிடங்களில் தருகின்றன… நீங்கள் திரைப்படத்துடன் முரண்பட்டு திரையரங்கை விட்டு வெளியேறுகிறீர்களா…? இல்லை அகமகிழ்வுடன் பிரியா விடை கொடுத்து விடைபெறுகிறீர்களா…? இதில் எந்த மனநிலை என்பது தான் திரைப்படம் பற்றிய உங்களது எண்ணம், அபிப்பிராயம், கருத்து எல்லாமே… திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படம் நமக்கு பிரியாவிடை கொடுப்பதில்லை… பல பார்வையாளர்களுடன் முரண்பட்டு அது நம்மை திரையரங்கை விட்டு அனுப்பி வைக்கிறது..

இப்பொழுது வெளிவரும் பல படங்களில் இருக்கின்ற முக்கியமான குறை என்னவென்றால், தாங்கள் என்ன சொல்ல வருகின்றோம் என்பதில் தெளிவு இல்லாமல் இருப்பது… ஒரு சின்ன சுவாரஸ்யமான திருப்பங்கள் உள்ள சம்பவம் கிடைத்ததும் அதையே கதையாக்கி விடுகின்றனர்.. அதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டால், அது அவர்களுக்கே தெரியாது… உதாரணத்து ஒரு வருடம் கழித்து வெளிவரக்கூடிய பேப்பர், உங்கள் கைக்கு கிடைக்கிறது… நடக்கப் போகின்ற சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கு முன்னரே தெரிந்துவிடுகிறது… இது சுவாரஸ்யமான சம்பவம்… மான்கராத்தே கதையும் இதுதான்… இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்…? என்று கேட்டால் தெரியாது.. இதே பிரச்சனைதான் இந்த திருமணத்திலும்… இந்து பிராமண குடும்பத்தை சேர்ந்த நாயகன், ஒரு அவசரகால பிரயாணத்தில் தன்னை ஒரு இஸ்லாமியனாக காட்டிக் கொண்டு ரயிலில் பயணிக்கிறான்… அங்கு வரும் ஒரு இஸ்லாமியப் பெண்ணை பார்த்தவுடன், தன்னை இஸ்லாமியனாக காட்டிக் கொண்டு காதலிக்க முயல்கிறான்… அவளும் காதலிக்கத் தொடங்குகிறாள்.. உண்மை தெரியவரும் போது என்ன ஆகும்… என்பது தான் கதை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம்… இங்கு காதலில் ஏற்பட்ட பிரச்சனையைத் தான் நாங்கள் சொல்ல வருகிறோம் என்பதில் படக்குழுவினர் தெளிவாக இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை.. அந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டு அவர்கள் இணைவார்கள் என்று நாம் நினைக்கும் போது மீண்டும் பிரிகிறார்கள்… இந்த இடம் தான் படம் நம்மை குழப்பத் தொடங்குகிறது….


நாயகன் நாயகி இருவருமே ஆச்சாரமான மதக்கட்டுப்பாடுகளில் வாழ்பவர்கள்.. அந்த கட்டுப்பாடுகள் அவர்களை வெறுப்பேற்றுகிறது… அந்த கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத ஒரு புதிய சூழலில் அவர்கள் வாழ விரும்புகிறார்கள்… அதனால் தான் தங்களுக்கு எதிரான வாழ்க்கை முறை என்று ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்குகிறார்கள்.. ஆனால் ஒரு கட்டத்தில் தாங்கள் எதிர்காலத்தில் வாழப் போவது, ஒரு புதிய சூழல் அல்ல.. அதே கட்டுப்பெட்டித்தனமான பழைய சூழல் என்று தெரியவந்ததும், அவர்களது காதல் கசக்கிறது… பிறகு என்ன ஆனது என்பது தான் கதை… இந்த கதைகள் எதுவும் தெளிவாக திரைக்கதையில் இருப்பதில்லை.. படத்தில் முக்கால்வாசி நேரம் நாம், இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தான் என்பதே காதலர்களுக்கான சிக்கல் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.. ஆனால் அவர்களது சிக்கல் காதல் வெற்றி பெறுவது அல்ல… தாங்கள் புதிய சூழலில் சென்று வாழ விரும்புவது தான் என்பதே பார்வையாளருக்கு கடைசி இருபது நிமிடங்களில் தான் அரைகுறையாக தெரிய வருகிறது…

மேலோட்டமாகப் பார்த்தால் இது மிகச்சிறந்த ஒன்லைனர்… கண்டிப்பாக ஜெயிக்க வைத்திருக்க வேண்டிய கதையும் கூட… இந்தப் படத்தை பார்க்கும் போது எனக்கு மூன்று படங்கள் நினைவில் வந்தது.. ஒன்று காதல் கோட்டை.. காதலன் இவன் தான் என்று தெரிந்து கொள்ளுவது தான் அந்தப் படத்தில் பிரச்சனை… இங்கு காதலனின் மதம் இதுதான் என்று தெரிந்து கொள்வதில் பிரச்சனை… இதை வெறும் காதல் படமாக மட்டுமே கொண்டு சென்றிருந்தால் கூட ஜெயித்திருக்கும்… நினைவில் வந்த மற்ற இரண்டு படங்கள் ”ரங்கே பசந்தி” மற்றும் ”ஆயுதம் செய்வோம்” இரண்டு படங்களிலும் ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக நாட்டுப்பற்று மற்றும் காந்திசம் என்பதில் மாட்டிக்கொண்டு, அந்த எண்ணங்கள் பிடித்துப் போய் அதுவாக கதைமாந்தர்கள் மாறிவிடும் கதையம்சம் கொண்ட படங்கள்… திருமணம் என்னும் நிக்காஹ்விலும் அதே தான்… காதலுக்காக முஸ்லீம் மதத்தைப் பற்றி அறியத் தொடங்கி, அதை விரும்பத் தொடங்குவது போல்…. இதையாவது தெளிவாக சொல்லி இருந்தால், படம் ஓடியிருக்கும்… இரண்டையுமே செய்யாததால் படம் ஓடுமா..? என்பது சந்தேகமே..


படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ் நஸ்ரியாவின் சின்ன சின்ன க்யூட்டான எக்ஸ்பிரஸ்சன்ஸ் மற்றும் ஜிப்ரானின் தாலாட்டும் இசை.. அதுபோல் அந்த டைட்டில் டிசைனும் மிக அழகாக இருந்தது… ஜெய்யிடம் நடிப்பில் வழக்கம் போல் அதே பிரச்சனை… எல்லா சூழலிலும் ஒரே பாவனை.. இவரும் விமலை போலவே ஆகிக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.. படத்தில் முதல்பாதியில் ரசிக்கும் படியான பல காட்சிகள் இருக்கின்றன… ஏன் இரண்டாம் பாதியில் கூட அந்த ப்ரியாணி வாங்கும் காட்சி இருக்கிறது… இப்படி சில நல்ல விசயங்கள் இருந்தாலும் ஆடியன்ஸை குழப்பக்கூடாது என்கின்ற ஒரு முக்கியமான விதியை கடைபிடிக்காததாலும், கடைசி இருபது நிமிடத்தில் குழப்பி அடித்து நம்முடன் முரண்பட்டு திரையரங்கில் இருந்து நம்மை விரட்டியதாலும் அந்த நல்ல காட்சிகள் எதுவுமே மனதில் நிற்காமல், குழப்பம் மட்டுமே மனதில் நிற்கிறது… முஸ்லீம் மதத்தை பற்றி சில நல்ல விசயங்களை பகிர்ந்துகொண்டமைக்காக இயக்குநர் அனீஷ் அவர்களைப் பாராட்டலாம்… மற்றபடி படம் பார்க்கலாமா…? என்று கேட்டால்…. மேற்சொன்ன சில நல்ல விசயங்களுக்காக மட்டும் ஒரே ஒரு முறை கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பார்க்கலாம்…


No comments:

Post a Comment