Saturday 26 July 2014

வேலையில்லா பட்டதாரி:

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வந்திருக்கும் திரைப்படம் வேலையில்லா பட்டதாரி.. இது தவிர்த்து இது தனுஷ்க்கு 25வது படமும் கூட.. தமிழ் சினிமாவின் நடிக்கத் தெரிந்த ஒரு சில நடிகர்கள் பட்டியலில் தனுஷ் மிகவும் முக்கியமானவர்.. ஆனால் அவரது போதாத காலம் ஆடுகளம் திரைப்படத்துக்குப் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்வது போல் படங்களே இல்லை.. மரியான், நய்யாண்டி என இரண்டுமே மிகப்பெரிய தோல்விப் படங்களாக போனது… இந்தியில் வெளியான ராஞ்சனா தனுஷ்க்கு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தாலும், தமிழில் சொல்லிக் கொள்ளும் படி போகவில்லை.. நான்கு படங்களில் நடித்த நடிகர்கள் எல்லாம் தனுஷ் படத்தில் ப்ரமோசனுக்காக ஒரு பாடலில் வந்து ஆட வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் கேட்கும் அளவுக்கு தனுஷின் நிலை மாறிவிட்டதாக கூட ஒரு செய்தி உலவியது.. மேலும் தனுஷே வெளிப்படையாக ஒரு காலத்தில் அனிருத்துக்கு நான் உதவினேன்… இன்று அவர் எனக்கு உதவிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்லவும் செய்தார்… இப்படி ஏகப்பட்ட திரைமறைவு நிகழ்வுகளுக்குப் பிறகு திரைக்கு வந்திருக்கும் படம்… அதுவும் தனுஷின் தயாரிப்பிலேயே…


முதலில் ஒர் விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன்… எனக்கு தனுஷ் பிடிக்கும்… ஆனால் மரியான், நய்யாண்டி இரண்டும் சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை… எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்த திரைப்படங்கள் அவை.. ஆனால் அது போன்ற ஏமாற்றத்தை வேலையில்லா பட்டதாரி திரைப்படம் நிச்சயமாகக் கொடுக்காது என்று கடந்த இரண்டு மாதமாக நம்பினேன்… ஏனென்றால் அந்தப் பாடல் வரிகளும், அந்த ட்ரைலரும் எனக்குள் ஏற்படுத்திய நம்பிக்கை அது… கண்டிப்பாக இதுவொரு மசாலா படமாகத்தான் இருக்கும் என்பதும் அப்போதே தெரிந்துவிட்டது… இது கண்டிப்பாக இன்றைய தமிழ்சினிமாவின் சூழலுக்கு தேவையே இல்லாத ஒரு திரைப்படம் தான்…. ஆனால் கண்டிப்பாக இன்றைய தனுஷின் சூழலுக்கு தேவைப்படும் படம் என்றே எனக்குத் தோன்றுகிறது… ஏனென்றால் ஒரு திரைப்படத்தின் மிக அத்தியாவசிய தேவையாக இல்லாமல் இருக்கும் வஸ்துக்களான நடை, நடனம், நகைச்சுவை இவைகளை மட்டுமே வைத்துக் கொண்டு இன்றளவும் கோலோச்சிக் கொண்டு இருக்கும் மிகப்பெரிய நடிகர்களுக்கு மத்தியில், நடிப்பையும் கதையையும் மட்டுமே நம்பி பெரும்பாலும் களம் காணும் தனுஷ் மாதிரியான நடிகர்கள், தங்கள் இறுப்பை நிலைநிறுத்திக் கொள்ளவாவது அவ்வபோது இதுபோன்ற கமர்ஸியல் மசாலா வெற்றிப் படங்களில் நடிக்கட்டும்… இதை நாம் சகித்துக் கொள்ளத் தவறினால், தமிழ் சினிமாவில் நடிகர்களே இல்லாமல் போய்விடுவார்கள்…

சரி, மரியான், நய்யாண்டி படங்கள் எனக்குப் பிடிக்காமல் போனதற்கும், வேலையில்லா பட்டதாரி பிடிக்காமல் போகாததற்கும் (பிடித்ததற்கு அல்ல…) காரணம் என்ன என்பதில் தான் படத்தின் வெற்றி சூட்சமம் அடங்கி இருக்கிறது… மரியான் படம் மீனவனின் வாழ்க்கையையும் கடல் கடந்து காசு சம்பாதிக்க செல்பவனின் வாழ்க்கையையும் சொல்வதாகச் சொல்லிவிட்டு, மீனவன் என்பவன் கடலில் சென்று மீன் பிடிப்பவன், அவன் கடல்கடந்து காசு சம்பாதிக்க சென்றால், அங்கு அவன் காண்பது கடலளவு பாலைவன மணலையும், சுட்டெரிக்கும் சூரியனையும், சுட்டுக் கொண்டே திரியும் தீவிரவாதிகளையும்….???? தான் என்பதை தவிர்த்து வேறு எதையுமே சொல்லாமல் நம்மை கொலைவெறி ஆக்கியது….. நய்யாண்டி படமோ டைட்டிலை வைத்துக் கொண்டு நம்மையே நய்யாண்டி செய்தது… காதல் கைகூடும் கருமாந்திரத்தை தவிர படத்தில் எதுவுமே இல்லை… இப்படி நம் வாழ்க்கையையும் காட்டாமல், நாம் அறியாத மக்களின் வாழ்க்கையையும் காட்டாமல் பல்லிளித்ததால் படுதோல்வி அடைந்த படங்கள் அவை….


வேலையில்லா பட்டதாரியில் நாம் அறிந்த ஒரு வாழ்க்கை முதல் பாதியில் மட்டும் இருக்கிறது… இரண்டாம் பாதியில் நாம் சமூகத்தில் கடந்து வந்த பிரச்சனைகள் ஆங்காங்கே இருக்கிறது… இவை இரண்டுமே பார்வையாளர்களான நமக்கு நம்பகத்தன்மையை கொடுப்பதால் திரைப்படம் நம் மனதுக்கு நெருக்கமாகிறது… வேலையில்லா பட்டதாரி மிகச்சிறப்பான கதையையோ அல்லது திரைக்கதையையோ கொண்ட திரைப்படம் அல்ல… மிகச்சாதாரண கதை… அதை கதையென்று கூட சொல்ல முடியாது… காட்சிகள்… வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் இயல்பான மன கொந்தளிப்புகள் மட்டும் தான் முதல் பாதி… இதை வேலை கிடைக்காத கால இடைவெளியில் பெரும்பாலான இளைஞர்கள் கடந்து வந்திருப்பார்கள்.. ஆக படத்தின் வெற்றிக்கு அது முதலாவதாக போடப்படும் அஸ்திவாரம்… கால் தடுக்கி விழுந்தால் கால் செண்டர் வேலைகள் குவிந்திருக்கும் நிலையில் வேலை கிடைக்கவில்லை என்று சொல்வது பொறுந்தாததாகத்தான் தோன்றும்… ஆனால் அதற்கும் திரைப்படத்தில் பதில் சொல்கிறார்கள்… படித்த படிப்புக்கு தகுந்த வேலை தேடுகிறான் நாயகன்… இப்படி ஒரு படம் தொடங்கும் போதே, அது கமர்ஸியல் படமாக இருக்கின்ற பட்சத்தில் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று நமக்கு நன்றாகவே தெரிந்துவிடுகிறது… அச்சு பிசகாமல் அதுவே தான் நடக்கிறது… மிகப்பெரிய கம்பெனியில் மிகப்பெரிய பதவியில் அமருகிறான் நாயகன்…

வேலை கிடைக்காத தன் மூத்தமகனை கரித்துக் கொட்டிக் கொண்டே இருக்கும் அப்பா… கருணை காட்டிக் கொண்டே இருக்கும் அம்மா… கடுப்பேற்றும் தம்பி என ஒரு அக்மார்க் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சமீபமாக எந்தப் படத்திலும் பார்த்ததில்லை… தனுஷின் படங்களில் இல்லை இல்லை… நடிக்கத் தெரிந்த எல்லா நடிகர்களின் படங்களில் இருக்கின்ற ஆகச்சிறந்த அனுகூலம், படத்தின் காட்சிகள் எவ்வளவு சினிமாத்தனமாக இருந்தாலும் அவர்களது நடிப்பு நம்பகத்தன்மையை சேர்த்து, அந்தக் காட்சியை பாதிக்கு பாதி யதார்த்தமானதாக மாற்றிவிடும்… அம்மா செண்டிமெண்ட் அதர பழசானது தான்…. அம்மா இறக்கப் போகிறார் என்பதும் அம்மா அம்மா பாடலிலேயே தெரிந்தும்விட்டது… ஆனால் அந்த சினிமாத்தனமான காட்சியில் சமுத்திரக்கனி மற்றும் தனுஷின் நடிப்புதான் அதை ஏற்றுக்கொள்ளும்படி மாற்றிவிடுகிறது… மேலும் தனுஷ் கறி வாங்கச் செல்லும் காட்சியும், ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் காட்சியும் கூட மிக சாதாரணமான காட்சி தான்… ஆனால் அதை ரசிக்க முடிகிறது… அதுபோல கமர்சியல் படத்துக்கு ஏற்றார் போல், இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்தில் தனுஷ் கதை நாயகனாக இருந்து, கதாநாயகனாக மாறிவிடுகிறார்… அந்த ஃபேஸ்புக் காட்சியும் சண்டை காட்சிகளும் அப்படிப்பட்டது தான்… நடிகர் தனுஷ் ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் அந்தக் கூட்டம் வரலாம்… ஆனால் ஒரு சாமானியனுக்கு அந்தக் கூட்டம் சாத்தியமே இல்லை… மேற்சொன்னபடி இது போன்ற தவறுகளை சகித்துக் கொள்ளவேண்டியது தான்… ஆனால் அந்த இரண்டாம் பாதியில் இருக்கின்ற அரசியல் நெருக்கடிகள், அதிகார வர்க்கத்தின் ஆளுமைகள், ஊழல்கள் தான் இது போன்ற நெருடல்களை அதிகம் கண்டுகொள்ள விடாமல் நம்மை காப்பாற்றுகின்றன… பல இடங்களில் தனுஷிடம் ரஜினியின் மேனரிசங்களை காண முடிந்தது… அதை அவர் கொஞ்சம் தவிர்த்துக் கொள்வதும், இது போன்ற படங்களில் மட்டுமே பிறரைப் போல் கவனம் செலுத்தாமல் தன்னைக் காத்துக் கொள்வதும் தனுஷுக்கும் தமிழ் சினிமா சமூகத்தும் நல்லது என்பதையும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்…


அனிருத்தின் இசை படத்துக்கு, தனுஷ் சொல்லியது போல் மிகப்பெரிய பலம்… பாடல்கள் இந்தப் படத்துக்கு கண்டிப்பாக வேகத்தடையாக தெரியவில்லை… அதிலும் முதல் இரண்டு பாடல்களின் நடனத்தில் தனுஷ் காட்டும் அந்த வேகம் நம்மை அசத்திவிடுவது உண்மை.. படத்தில் வில்லனை தவிர்த்து எந்த கதாபாத்திரமும் நடிப்பில் சொதப்பவில்லை… படத்தில் தனுஷின் வண்டியையும் ஒரு கதாபாத்திரமாகவே அலையவிட்டிருப்பதும் படத்துக்கு ப்ளஸ்.. ஒளிப்பதிவாளரே இயக்குநர் என்பதால் கேமரா கோணங்களைப் பற்றியும் பேச வேண்டியதே இல்லை… ஒவ்வொரு ப்ரேமும் அழகு பாரித்துக் கிடக்கிறது…


மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரியை நம்பிப் போய் பார்க்கலாம்… படம் உங்களுக்கு பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிக அதிகம்..

No comments:

Post a Comment