Friday 25 July 2014

சதுரங்க வேட்டை:

தமிழ்திரை வட்டாரத்தில் வெளிவருவதற்கு முன்பே ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.. அதற்கு மிகமிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது, திருப்பதி பிரதர்ஸ் படத்தை வாங்கியதோடு மட்டும் அல்லாமல், கோலிசோடா, மஞ்சப்பை வெற்றிப்பட வரிசையில் என்ற கேப்சனோடு படத்தை வெளியிட்டது… ஆனால் மேற்சொன்ன அந்த வரி விளம்பரமே என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது… ஏனென்றால் அவர்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு வெற்றிப்படங்களுமே எனக்கு வெறுப்பையும் சேர்த்தே கொடுத்த படங்கள்… அதனால் இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றாலும் கூட நமக்கு பிடித்தமான திரைப்படமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தான் படம் பார்க்க சென்றேன்.. படம் பார்த்தப் பின்னர் என் நம்பிக்கை பாதி பொய்த்திருந்தது… ஏனென்றால் இத்திரைப்படம் எந்த இடத்திலும் என்னை வெறுப்பேற்றவில்லை… அதற்காக முழு நிறைவை கொடுக்கின்ற படம் என்றும் என்னால் உத்தரவாதம் தர இயலாது…


ஏனென்றால் இதிலும் சுவாரஸ்யம் இன்மை.. போலித்தனமான அல்லது மிதமிஞ்சிய நடிப்பு.. Cause and Effect என்று சொல்லக்கூடிய காரண காரணிகள் முக்கியமான கதை திருப்பத்தில் இல்லாமல் இருப்பது இவை தவிர்த்து முக்கியமானதான, ஒரு திரைப்படம் பார்வையாளனிடம் கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டிய மனநெருக்கத்தை (மன மகிழ்வு அல்லது மன உளைச்சல்) ஏற்படுத்தாதது என்று சொல்வதற்கு சில முக்கியமான குறைகள் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.. ஆயினும் இத்திரைப்படம் தமிழ் திரையுலகில் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. இதே திரைப்படம் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்பாக வந்திருந்தால் இதைவிட சிறப்பான வரவேற்ப்பை பெற்றிருக்கும் என்பது என் எண்ணம்.. இது எந்த வகையான திரைப்படம் என்று சொல்வதற்கு தமிழில் இருந்து ஒரு உதாரணத்தை கூற வேண்டும் என்றால், கண்டிப்பாக நான் மூடர் கூடம் திரைப்படத்தைக் கூறுவேன்… ஆனால் மூடர்கூடத்தில் இதைவிட சிறப்பான திரைக்கதை இருந்தது என்பது வேறு விசயம்.. இருப்பினும் மூடர்கூடம் திரைப்படத்துக்கு பின்னர், ஒர் திரைப்படம் முழுக்க முழுக்க சிறப்பான வசனங்களால் நிரம்பியிருக்கிறது என்றால், அது கண்டிப்பாக இந்த சதுரங்க வேட்டை தான்…

நீங்கள் யாரையாவது ஏமாற்றி இருக்கிறீர்களா…? இதுயென்ன கேள்வி என்று கேட்கிறீர்களா…? கண்டிப்பாக நாம் எல்லோருமே ஏதோ ஒரு இடத்தில் யாரோ ஒருவரை ஏமாற்றி இருப்போம்.. நான் கேட்க வருவது வேறுவிதமான ஏமாற்றுதல். உதாரணமாக ஒன்றுக்குமே உதவாத ஒரு பொருளை ஒருவரிடம் கொடுத்து இதை விற்றால், லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று ஏமாற்றியிருக்கிறீர்களா..? உடல் உழைப்பு இல்லாமல் எளிதாக சம்பாதிக்கும் தொழில் என்று ஒரு தொழிலை தொடங்கி யாரையாவது ஏமாற்றி இருக்கிறீர்களா…? பாதி விலைக்கு தங்கம் தருகிறேன் என்று ஏமாற்றி இருக்கிறீர்களா…? கண்டிப்பாக இது போன்ற ஏமாற்று வேலைகளை செய்திருக்கிறீர்களா என்று ஒரு ஆயிரம் பேரிடம் கேட்டால், அந்த ஆயிரம் பேர் அடங்கிய கூட்டத்தில் குறைந்தது நான் அந்த தொழில்தான் செய்கின்றேன் என்று ஒரே ஒரு ஆள் கையை உயர்த்துவது கூட அபூர்வமானது தான்… சரி கேள்வியை மாற்றி இது போன்ற கும்பலிடம் ஏமாந்து இருக்கிறீர்களா…? என்று கேட்டால் குறைந்தது ஒரு பத்திலிருந்து நூறு பேர் கை உயர்த்தலாம்… ஆயிரத்துக்கு இத்தனை பேர் என்றால், ஆறரை கோடி பேருக்கு எத்தனை பேர் என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்… அவர்கள் தான் இந்த திரைப்படத்தோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்கள்.. ஆனால் இவர்களுக்கு படத்தின் நாயகனை பிடிக்காது… ஏனென்றால் நாயகனைப் போன்ற ஏதோ ஒருவனால் தான் அவர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்… நாயகன் தன் செயலை என்னதான் நியாயப்படுத்திப் பேசினாலும் அதை அவர்களால் ஏற்கவே முடியாது…. ஆக இந்தப் படத்துக்கு தீர்ப்பு சொல்ல வேண்டியவர்கள், ஏமாற்றவும் செய்யாமல், ஏமாறவும் செய்யாமல் இருக்கும் நம்மைப் போன்ற இடைப்பட்டவர்கள் தான்….

உங்களிடம் இன்னொரு கேள்வி..? இன்றைய செய்தித்தாளை பிரிக்கிறீர்கள்.. ஒரு பக்கத்தில் ”பாதி விலைக்கு தங்கம் தருவதாக சொல்லி மக்களை ஏமாற்றிய கும்பல்” என்ற செய்தி வந்திருக்கிறது… அதே பக்கத்தில் பள்ளிக்கூட பஸ் மீது ரயில் மோதியது என்ற செய்தியோ அல்லது கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி என்ற செய்தியோ அல்லது பிரபல நடிகையை பற்றிய கிசுகிசு செய்தியோ இருந்தால், எதை நீங்கள் முதலில் படிப்பீர்கள்… கண்டிப்பாக பாதி விலைக்கு தங்கம் செய்தியை அல்ல… அப்படியே அந்த செய்தியைப் படித்தாலும், அதில் பாதிக்கப்பட்டவரை நினைத்து நீங்கள் பரிதாபப்படுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு… அதே நேரத்தில் ஏமாற்றிச் சென்ற கும்பலின் நடவடிக்கையை நீங்கள் ஆமோதிக்கவோ அல்லது பாராட்டவோ மாட்டீர்கள்…. ஒரு பார்வையாளனாக ஒரு சாதாரண செய்தியை படிப்பதைப் போல் அந்த செய்தியை கடந்து செல்வீர்கள்…. திரைப்படம் பார்க்கும் போது இடைப்பட்டவர்களான நம் மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது… திரைப்படம் காட்சிகளின் அல்லது சம்பவங்களின் பங்கேற்பாளனாக நம்மை மாற்றாமல் வெறும் பார்வையாளனாக மட்டுமே நம்மை நிறுத்திவிடுகிறது… அதனால் தான் அது நமக்கு எந்தவிதமான மன நெருக்கத்தையும் கொடுப்பதில்லை… இப்படி ஏமாற்றும் தொழில் செய்பவனை நாயகனாகக் கொண்டு வேறு ஏதாவது படம் என்று எண்ணினால், உடனே நினைவுக்கு வருவது பிதாமகன் சூர்யா தான்… ஆனால் அந்த பித்தலாட்டம் பெரும்பாலான நம் மக்களுக்கு வாழ்க்கையோடு நேரடியான தொடர்பு உடையது… மயில் தோகையை புத்தகத்தில் வைத்து ஏமாறுவதற்க்கும், ராசிக்கல் மோதிரம் வாங்கி ஏமாறுவதற்க்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா..?

இப்படி வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி திரைப்படங்களை பார்ப்பது சரிதானா என்று ஒரு கேள்வி எழலாம்…. என்னைப் பொறுத்தவரை அது சரிதான்ஏனென்றால் ஒரு திரைப்படம் நமக்குப் பிடிக்கிறது என்றால், அது நம் வாழ்க்கையோடு நேரடித் தொடர்பில் இருக்கும் திரைப்படமாக இருக்கும்அல்லது அந்தத் திரைப்படத்தில் இருப்பதைப் போல் நம் வாழ்க்கையிலும் நடந்தால் எப்படி இருக்கும் என்கின்ற கனவுகளை நமக்குள் விதைக்கும் திரைப்படமாக இருக்கும்இதற்கு ஆட்டோகிராப், பருத்திவீரன், அட்டகத்தி, பீட்ஸா, சூது கவ்வும், சிங்கம், கில்லி, வீரம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டுஅப்படியென்றால் சூது கவ்வும் விஜய் சேதுபதியைப் போல் நானும் கடத்தல் தொழில் செய்ய விரும்புகிறேனா…? என்று நீங்கள் கேள்வி கேட்டால் என் பதில் நீங்கள் விரும்புவது, நீங்களும் கடத்தல் தொழில் செய்ய வேண்டும் என்பதை அல்லஎன்றாவது நீங்கள் கடத்தப்பட்டால் உங்களைக் கடத்தியவன் விஜய் சேதுபதியைப் போல் உங்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதையே நீங்கள் விரும்புகிறீர்கள்அதுதான் அந்தப் படத்தின் வெற்றிபருத்திவீரன் கார்த்தி ரவுடி தான்…. ஆனால், அவன் ரோட்டில் போகின்ற பெண்ணை கற்பழித்தானா, நேர்மையான ஒரு போலீஸ் கான்ஸ்டேபிளின் காதை அறுத்தானா…? கஞ்சிக்கு இல்லாதவனிடம் வழிப்பறி செய்து அந்த காசில் கள் குடித்தானா…? அப்படி செய்திருந்தால் அந்த கதாபாத்திரம் உங்களுக்கு பிடித்திருக்குமா…? கண்டிப்பாக பிடித்திருக்காதுஇங்கு நீங்கள் விரும்புவது கார்த்தியின் அந்த வீரத்தை, யாருக்கும் பயப்படாத அந்த அடாவடியை…. இப்படித்தான் ஒரு திரைப்படம் நமக்கு நெருக்கமாகிறது..

ஆனால் இந்த சதுரங்க வேட்டையில் நாயகன் காந்தி பாபு, நான் இரண்டாம் பத்தியில் மேற்கோள் காட்டியிருந்த அத்தனை ஏமாற்றுவேலைகளையும் செய்பவன்… கண்டிப்பாக நம்மில் பலருக்கு இந்த ஏமாற்றுவேலைகளை செய்ய மனம் வராது… சரி அவனிடம் ஏமாறுபவனாக நாம் இருக்க விரும்புவோமா என்று கேட்டால் அதற்கும் வழியே இல்லை… ஆக செய்தித் தாளின் செய்தியை சுவாரஸ்யமே இல்லாமல் வாசிப்பதைப் போல் தான் படம் பார்க்க வேண்டியிருக்கிறது… ஆறு எபிசோடுகளாக படம் நகருகிறது… ஆறு எபிசோடுகளிலும் ஒவ்வொரு விதமான ஏமாற்று வேலை… அதில் அந்த கோயில் கலசம் மற்றும் பாதி விலையில் தங்கம் என்ற இரண்டு ஏமாற்று வித்தைகள் மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கிறது…. அதற்கான டீடெய்லிங்கில் தான் படக்குழுவினரின் மொத்த உழைப்பும் தெரிகிறது… அது தவிர்த்து பிற ஏமாற்று வேலைகள் எல்லாம் சுவாரஸ்யமே இல்லாமல் மழையில் நனைந்த பட்டாசு போல் இருக்கின்றன… ஒரு கட்டத்தில் ஹீரோ தான் செய்வதெல்லாம் தவறு என்று உணர்ந்து திருந்த வேறு செய்கிறார்… அவர் ஏன் திருந்துகிறார் என்பதற்கான காரணமும் வழுவாக இல்லாமல் மிக மொண்ணையாக இருக்கிறது... அதைவிட அவர் ஏன் இந்தத் தொழிலை செய்கிறார் என்பதற்கான பின்கதையை கண்ணீர் வடிக்கவிடாமல் கடத்தியது மற்றும் ஹீரோ கூறும் விளக்க வசனங்கள் தான் படத்தில் மிக முக்கியமானவை…. “இந்த உலகத்துல எல்லாமே இருந்தும், உங்களுக்கு எதுவுமே இல்லங்கிற நிலைமைல வாழ்ந்திருக்கீங்களா…?” “குற்றவுணர்ச்சி இல்லாம பண்ற எதுவுமே தப்பில்லை…” “நாமெல்லா முதலாளி ஆக விரும்புற கம்யூனிஸ்ட்..” “நாளைக்கி சம்பாதிக்க முடியாதுன்னு நினைக்கிறவ தா சேத்து வைப்பான்…” “நான் யாரையும் ஏமாத்தல… ஏமாற தயாரா இருக்கிறவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தே….” ”ஒருத்தன ஏமாத்தனும்னா அவண்ட இரக்கத்தை எதிர்பார்க்கக் கூடாது.. அவனோட ஆசைய தூண்டி விடணும்…” இப்படி படத்தில் வரக்கூடிய முக்கியமான வசனங்களை மட்டும் பக்கம் பக்கமாக எழுதலாம்….


எப்போது ஹீரோவை வழக்கமான நாயகனைப் போல் திருந்துவதாக காட்டுகிறார்களோ அப்போதே படத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யமும் போய், படம் விழுந்து விடுகிறது… பணத்தை விட வாழ்க்கையில் அன்பு பெரிதுதான்… ஆனால் இது போன்ற தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் அது போன்ற மனநிலையை உணர்ந்ததே இல்லையே… என்னைப் பொறுத்தவரை ஹீரோ திருந்துகிறான் என்பதான தமிழ் சினிமாவின் சம்பிரதாய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல், ஹீரோவை போன்ற தொழில் செய்யும் அனைவருக்கும் இருக்கும் மனநிலை இந்த சமூகத்தால் உருவாக்கப் பட்டதுதான்… அதற்கு சமூகமும் ஒரு பொறுப்புதான் என்பதாக சமூகத்தின் மீதான கரும்புள்ளியை காட்டியிருந்தால், படம் வேறொரு தளத்தில், புதிய வண்ணத்தில் ஜொலித்திருக்கும் என்பது என் எண்ணம்…



படத்தின் நாயகன் பாலிவுட்டில் மிகப்பிரபலமான ஒளிப்பதிவாளரும் “நட்டு” அல்லது “நட்ராஜ்” என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான நடராஜன் சுப்ரமணியம்.. படத்தில் கதையைத் தவிர நடராஜ், மற்றும் நாயகி இஷாரா ஆகியோரின் நடிப்பும் சீன் ரோல்டனின் இசை, வெங்கடேசின் ஒளிப்பதிவி என எல்லாமே ஓகே ரகம் மட்டுமே…. இவைகளும் சிறப்பாக இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று எண்ணுகிறேன்… இத்திரைப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் யாரென்றே தெரியவில்லை… யாரிடமாவது உதவி இயக்குநராக பணிபுரிந்தவரா, இல்லை குறும்படங்கள் எடுத்து அதன் மூலமாக திரைப்படம் இயக்க வந்தவரா என்கின்ற புள்ளிவிவரங்கள் ஏதும் தெரியவில்லை.. ஆனால் நலன் குமாரசாமிக்கு கதை பிடித்துப் போய் அவரது சிபாரிசின் கீழ் மனோபாலாவிடம் கதை சொல்லி ஓகே செய்திருக்கிறார்… வழக்கமான தமிழ்சினிமா மசாலா கதைகளில் சிக்காமல், வித்தியாசமான கதை பாணியை தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள்.. இவரிடம் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது…. படத்தில் மேற்சொன்னது போல் சில குறைகள் இருப்பினும்.. கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்தான்…

No comments:

Post a Comment