Friday 2 May 2014

தெனாலிராமன்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவின் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம்.. இத்திரைப்படம் குழந்தைகளை குறி வைத்தே எடுக்கப்பட்டிருப்பதால், இவர்களுடைய நோக்கம் குழந்தைகளை குதூகலப்படுத்துவது என்பது தெளிவாகவே தெரிகிறது.. எனவே இதிலும் போய் நம் கூர்மையான மூக்கை உள்ளே நுழைத்து கதை, திரைக்கதை போன்ற வஸ்துக்களில் உள்ள ஓட்டைகளை குத்திக் குடைய எனக்கு விருப்பமில்லை.. சரி.. இந்த தெனாலிராமன் குழந்தைகளை சந்தோசப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறானா என்று கேட்டால் ஓரளவுக்கு என்று மட்டுமே சொல்ல முடியும்..


கிருஷ்ண தேவராயரின் அரசவையில் இருந்த மதிநுட்பம் வாய்ந்த அமைச்சரிகளில் ஒருவராகவும், அரசவை விகடகவியாகவும் இருந்து பெருமை பெற்றவன் தெனாலிராமன்.. நம் தமிழ் கலாச்சாரத்தில் தமிழில் வெளிவரும் கதைப்புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே ஆதர்சமான கதாபாத்திரமாக மாறிப் போகும் வெகுசில கதாபாத்திரங்களில் தெனாலிராமனுக்கு மிக முக்கியமான இடம் உண்டு.. அவனுடைய கூர்மையான மதிநுட்பத்தால் அவன் எப்படி தனக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்தான்… தனது மேலான மதி நுட்பத்தால் அரசன் செய்யும் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் இருந்து மக்களை காப்பாற்றியதோடு அரசனையும் எப்படி நல்வழிப்படுத்தினான் என்பதை அகமகிழ்வோடு வாசித்து வளர்ந்து வந்த குழந்தைகளில் நானும் ஒருவன்.. கதைகளின் வாயிலாகவே அப்படிப்பட்ட ஒரு பிம்பத்தை குழந்தைகளின் மனதில் உண்டாக்கிய விகடகவி தெனாலிராமனைப் பற்றிய திரைப்படம் தான் இந்த தெனாலிராமன் என்று முழுவதுமாக சொல்லவும் முடியாமல் ஏகப்பட்ட தடைகள்… ஏனென்றால் படத்தின் துவக்கத்திலேயே டைட்டில் கார்ட்டில் போட்டுவிடுகிறார்கள்.. இது தெனாலிராமனின் வாழ்க்கை வரலாறோ, வாழ்க்கையில் நடந்த அத்தியாயங்களோ அல்ல… தெனாலிராமன் என்ற கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு புனையப்பட்ட புனைவுக் கதை என்று..

அப்படி புனைய வேண்டிய அவசியம் தான் என்ன..? எந்தவொரு குழந்தையும் தெனாலிராமனின் கதையைப் படிக்கும் போது அவரை ஒரு தெலுங்கராகவோ அல்லது தமிழராகவோ கருதிக் கொண்டு படித்து களிப்புற்றதில்லை.. நல்ல சிந்தனைகளைப் போதிக்கும் மனிதனாகவும், தங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானவனாகவும் தான் அவனை ஒவ்வொரு குழந்தையுமே பார்த்தன.. ஆனால் குழந்தமையில் இருந்து சிதைந்து போய் பகுத்தறிவு பட்ட மனது அவனை எப்படியெல்லா பிரித்துப் பார்க்க முடியுமோ அப்படியெல்லாம் பிரித்துப் பார்த்து, போராட்டங்களை எழுப்பச் செய்து பின்பு அதனையும் சமரசம் செய்து இத்திரைப்படத்தை ஒரு புனைவாக வெளிவிட்டிருக்கிறது…

அப்படி என்ன அவர்கள் புனைந்திருக்கிறார்கள் என்று பார்ப்போமா…? விகட நகரம் என்று ஏதோ ஒரு நகரம் இருக்கிறதாம்.. அதற்கு ஒரு அரசர் (அவர் கிருஷ்ண தேவராயர் அல்லர்..) அவருக்கு 16 மனைவிகள்.. 52 குழந்தைகள்.. மக்களின் மீது அக்கறை உள்ளவராக இருந்தாலும் இந்த மன்னர் ஒரு ஜாலி பேர்வழி.. இதனால் நல்ல நல்ல சட்டங்களைப் போட்டுவிட்டு, அதை செயல்படுத்தும் பொறுப்பை தன்னிடம் இருக்கும் ஒன்பது நவரத்தின அமைச்சர்களிடம் விட்டுவிட்டு இவர் விளையாடிக் கொண்டிருக்கிறார்.. இதைப் பயன்படுத்தி எட்டு அமைச்சர்களும் சீன தேசத்து வியாபாரிகளுக்கு வணிகம் செய்ய கம்பளம் விரித்து வரவேற்க.. அதை அவர்களுக்குள் இருக்கும் ஒற்றை அமைச்சர் எதிர்க்க.. அவரை காலி செய்கிறது சீன கும்பல். காலியான அமைச்சரின் இடத்துக்கு வருகிறான் தெனாலிராமன்.. இவன் கிருஷ்ணதேவ ராயரின் அரசவை விகடகவி தெனாலிராமன் இல்லை.. இவர்கள் புனைந்திருக்கும் தெனாலிராமன்.. இவனும் ராயரின் தெனாலிராமன் செய்த அதே மதிநுட்பமான செயல்களை செய்து அந்த அரசரின் (எந்த அரசர் என்று தெரியவில்லை..) பாராட்டைப் பெறுகிறான்.. இவன் சீன வணிகத்தை நம் நாட்டுக்குள் கொண்டு வர தடையாக இருப்பானோ என்று மற்ற எட்டு அமைச்சர்களும் கருதி, அவனை வெளியேற்ற திட்டம் தீட்ட.. அவன் ஒரு புரட்சியாளன்.. மன்னனை கொல்ல வந்தவன் என்று தெரியவருகிறது… (ஆனால் மன்னரும் தெனாலிராமனும் அண்ணன் தம்பி இல்லை… இருந்தால் அது அப்படியே இம்சை அரசனாகிவிடுமே..) இதனையே பயன்படுத்தி தெனாலிராமனை அரசவையில் இருந்து வெளியேற்றி சீனர்களின் வணிகத்தை உள்ளே கொண்டு வருகிறார்கள்… அதற்குப் பின் தெனாலிராமன் என்ன ஆனான்…? சீன வணிகத்தால் விகட நகரம் என்ன ஆனது…? அந்த மன்னர் என்ன ஆனார் என்பது மீதிக் கதை..


படத்தில் மொத்தத்துக்கு வசீகரிக்கும் காட்சிகள் என்றால், அது தெனாலிராமனின் வாழ்க்கையில் நடந்த அத்தியாயங்களை காட்சிப்படுத்தி இருக்கும் இடங்கள் மட்டும் தான்… திருடர்களை மாட்ட வைக்க கிணறு தோண்ட விடுவது, அரசவை காவலாளிக்கு சவுக்கடி வாங்கித் தருவது, எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி சிறைவாசம் செல்வது, பானைக்குள் யானையை வரவைப்பது, அரசனின் தந்தையை கனவில் வரவைப்பது இப்படி தெனாலிராமன் கதைகளில் படித்த சுவாரஸ்யமான தகவல்களை ஆங்காங்கே சிறப்பாக கோர்த்திருக்கிறார்கள்.. கதை வடிவில் படித்ததை காட்சி வடிவில் பார்க்க அழகாய்த்தான் இருக்கிறது.. இதைத் தவிர்த்து மிகச்சிறப்பான அம்சம் என்று சொல்வதற்கு படத்தில் வேறு ஏதுமே இல்லாதது ஒரு பெரும் குறை..

மன்னராகவும் தெனாலிராமனாகவும் இரண்டு வேடத்தில் வடிவேலு.. ஒரு மூன்று ஆண்டு கால இடைவெளி ஒரு கலைஞனை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது… முன்னர் இருந்த அந்த சுறுசுறுப்பும் உடல்மொழியில் இருந்த நளினமும் கொஞ்சம் குறைந்தார் போல் தெரிகிறது.. அதிகமாக எடை போட்டு இருக்கிறார்… டும் டும் என்று மன்னர் முடிக்கின்ற இடங்கள் ஆரம்பத்தில் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் இறுதிக்காட்சி வரும் போதுதான் அதைக் கொஞ்சமேனும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு நாம் வருகிறோம்.. ஒரிஜினல் தெனாலிராமனின் அத்தியாயங்கள் தவிர்த்து சிரிப்பு வருவதற்கான கேரண்டி உள்ள இடங்கள் மிகவும் குறைவு.. அதைத் தவிர்க்க ஆங்காங்கே அரச வடிவேலு அஷ்டகோணலாக தன் முகத்தை மாற்றி கிச்சுகிச்சு மூட்டுகிறார்.. பெரிதாக சிரிப்புதான் வரமாட்டேன் என்கிறது…


மன்னரின் மகளாக, தெனாலிராமனின் காதலியாக மீனாட்சி தீக்சித்… பெரும்பாலும் தன் மார்பகங்களின் விளிம்புகளையும், இடையின் நெளிவுகளையும் காட்டிக் கொண்டு காட்சி தருகிறார்… ஆனாலும் இது குழந்தைகள் படம்தான்… குழந்தைகள் அதையா பார்க்கப் போகிறார்கள்… அழகான வடிவேலுவைத் தானே பார்க்கப் போகிறார்கள்… அதனால் இதற்கு U சர்ட்டிபிகேட் என்று உத்தரவு இட்டிருக்கும் இந்த சென்சார் போர்ட்டை புரிந்து கொள்வது சிக்கலான ஒன்று தான்… மணிரத்னம் தனது உரையாடல் புத்தகத்தில் சொல்லி இருப்பார்… அவரது மெளன ராகம் படத்திற்காக சென்சார் போர்ட்டிடம் நின்ற போது.. ஒரு தமிழ்பெண் விவாகரத்து கேட்கிறாள்.. இதற்கு எப்படி U சர்ட்டிபிகேட் தரமுடியும் என்று கேட்டார்களாம்.. இவர்களைப் பொறுத்தவரை ரத்தத்தைக் காட்டக்கூடாது… கொலை தற்கொலை சிந்தனைகள் இருக்கக்கூடாது, பெண்களை இழிவுபடுத்துவது போல் பேசக் கூடாது.. ஆனால் அவளது முன்னழகு பின்னழகு இடையழகு என்று சுற்றிக் சுற்றிக் காட்டிக் கொள்ளலாம்… இவர்களது பாணியில் பார்த்தால் நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் வெளிவரும் ஒவ்வொரு தினசரிகளுமே A சான்றிதழ் பெற்றதுதான்…. இன்றைய தினசரி உட்பட.. குண்டுவெடிப்பின் ரத்தக்கறையோடுதானே வந்திருக்கிறது… சரி அதைவிடுங்கள்… மீனாட்சி தீக்சித் பற்றி…. ம்ம்ம்… வஞ்சகம் இல்லாமல் காட்டியிருக்கிறார்… எல்லோரையு வஞ்சிக்கும் அழகிதான்…

இவர்கள் தவிர்த்து மனோபாலா, பாலாசிங், ராதாரவி, ஜி.எம்.குமார், ராஜேஷ், தேவதர்ஷினி என ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம் திரையில்.. ராம்நாத்ஷெட்டியின் ஒளிப்பதிவில் எல்லோரும் பாராட்டும் அந்த பறந்து செல்லும் புறாவின் பிண்ணனியில் வடிவேலு நடந்து வரும் காட்சி எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.. ஆனால் சிஜியில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்… லாங் ஷாட்டில் இருந்து அந்த அரண்மனையை காட்டும் காட்சியில் எல்லாம் காவலாளிகள் மனிதர்கள் அல்ல என்பது அப்பட்டமாக தெரிகிறது… டி.இமானின் இசையில் ரம்ம்ப்ப்பா.. பாடல் மட்டும் கேட்க நன்றாக இருந்தது… இயக்குநர் தயாளனுக்கு இது இரண்டாவது படமாம்.. முதல் படம் என்னவென்றே பலருக்கும் தெரியவில்லை… தெனாலிராமனின் காமெடி அத்தியாயங்களை வைத்து தப்பித்திருக்கிறார்.. இவரது தனித்திறமை என்றோ முத்திரை என்றோ சொல்வதற்கு கதை திரைக்கதையில் பெரிதாக ஒன்றும் இல்லை… ஆனால் இயக்கத்தைப் பாராட்டலாம்…


மொத்தத்தில் தெனாலிராமன் இன்றைய தேதிக்கான குழந்தைகள் படம்.. இன்னும் மெனக்கெட்டிருந்தால் இதைவிட சிறப்பான படமாக வந்திருக்க வாய்ப்பிருக்கிறது, இருந்தும் தவறவிட்டிருக்கிறார்கள்… சிரிப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் கொஞ்சம் குறைவுதான் என்றாலும், ஒரிஜினல் தெனாலிராமனின் அங்கதச் சுவை அங்கங்களை திரைவடிவமாக காட்சிப்படுத்தி இருக்கும் இந்த முதல் முயற்சிக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்…

No comments:

Post a Comment