Monday 10 March 2014

கிம் கி டுக் வரிசை – 3


                          Kim Ki-duk

THE ISLE:

கிம் கியின் படங்களில் ஒரு தனிப்பட்ட முகவுரை தேவைப்படும் படங்களில் இந்த ஐசல் திரைப்படம் மிக முக்கியமானது. வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படத்தைப் பார்த்த சில பார்வையாளர்கள் வாந்தி எடுத்தனர் என்பதும் இதன் தனிப்பட்ட சிறப்பு.. அதுமட்டுமின்றி ஒரு திரைப்படத்தின் முடிவு என்ன சொல்ல வருகிறது என்பதைப் பற்றி அதிகமாக விவாதிக்கப்பட்ட படம் எனக்குத் தெரிந்து இதுவாகத்தான் இருக்கும்.. கனவுகளின் மெய்பொருளை திருடுபவன் என்று எனக்கு நானே அடைமொழி இட்டுக் கொண்டாலும், கிம் கியினுடைய கனவுகளின் மெய்பொருளை உள்வாங்குவது என்பது அவ்வளவு சாமானியமானதல்ல… மிகப்பெரிய சவால் நிறைந்தது… அவருடைய வரிசைப் படங்கள் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் வெவ்வேறு விதமான உணர்வுகளையும் அனுபவங்களையும் கொடுக்கக்கூடியவை… அதுவே அவரது திரைப்படங்களில் இருக்கின்ற ஆகச்சிறந்த அனுகூலம்.. இந்த இடைப்பட்ட நாட்களில் ஐசல் திரைப்படத்தை குறைந்தது 5லிருந்து பத்து முறையாவது பார்த்திருப்பேன்… அது சொல்ல வருகின்ற படைப்பியல் சார்ந்த சாராம்சங்களையும் வாழ்வியல் சார்ந்த தத்துவங்களையும் முழுக்க நான் உள்வாங்கினேனா…? என்பதில் சந்தேகம் இருப்பினும், அதை ஓரளவுக்காவது உள்வாங்கி இருக்கிறேன் என்பதிலும் நம்பிக்கை உண்டு… இத்திரைப்படத்தில் இருந்து நான் அறிந்த தரவுகளாக முன் வைக்கப்போகும் விடயங்களில் வருங்காலத்தில் மாற்றங்களும் முன்னேற்றங்களும் இருக்கும் என்பதையும் உணர்ந்தவனாகவே இந்த விமரிசனத்தை முன்னெடுக்கிறேன்…


தி ஐசல்… தீவு… இத்திரைப்படத்தில் முதலில் நாம் காட்சிகளின் வழி காண்பது என்ன… என்பதை ஒரு கட்டுரை வடிவில் கொடுத்து விடுகிறேன்.. பின்பு அந்தக் காட்சிகளின் வழியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது அல்லது உணரத் தலைப்பட வேண்டியது என்ன என்பதைப் பற்றி விவாதிக்கலாம்.. இது சற்றே நீண்ட பதிவு… படத்தின் கதையை காட்சிவாரியாக வாசிக்க விரும்பாதவர்கள் பச்சை வண்ணத்தில் இருக்கின்ற பத்திகளை வேகமாக கடக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்…


படத்தின் முதல் காட்சியில், பனி விலகிக் கொண்டிருக்கும் முன் காலைப் பொழுதில் ஒரு மிகப்பெரிய ஏரி போன்ற நீர்ப்பரப்பில், நான்குபுறம் தண்ணீர் சூழ்ந்திருக்க குட்டி குட்டியாய் படகுவீடுகள் எல்லா வண்ணங்களிலும் மிதந்து கொண்டு இருக்கிறது.. அந்த நீர்ப்பரப்பு நிலப்பரப்போடு இணையும் புள்ளியில் ஒரு வீடு காட்சிக்கு கிடைக்கிறது… அதை ஒட்டிய மரப்பாலத்தில் ஒரு உருவம் நடந்துவருகிறது… முப்பது வயது மதிக்கத்தக்க அவன் தான் கதை நாயகன்.. வீட்டுக்குள் இருந்து வெளிவரும் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் (கதைநாயகி), பேட்டரி போன்ற மின்சாதனங்களை எடுத்துக் கொண்டு நடக்க… அந்த வீட்டில் வாயிலில் ஒரு நாய் அமர்ந்திருக்கிறது… அந்த இளைஞனும் பேசாமல் அவளை பின் தொடர்கிறான்…. அவன் கையில் ஒரு பறவைக் கூண்டு இருக்க.. அதில் ஒரு சிறிய பறவை இருக்கிறது… இருவரும் ஒரு சிறிய விசைப்படகில் ஏறி நீர்ப்பரப்பில் பயணிக்க… மிதந்து கொண்டிருக்கும் ஒரு மஞ்சள் நிற படகு வீட்டில் அவனை அவள் இறக்கிவிட்டு விட்டு, அருகே இருக்கும் மற்றொரு படகுவீட்டை நெருங்க… அங்கே ஏற்கனவே மீன் பிடித்துக் கொண்டிருப்பவன், இவளிடம் மீன் பிடிப்பதற்காக வட்டவடிவ உருளைப் புழுக்களை கேட்டு வாங்கிக் கொள்கிறான்… மஞ்சள் நிற படகு வீட்டில் இறக்கிவிடப்பட்ட நாயகன் தன் கையோடு கொண்டு வந்த பறவைக் கூண்டில் அடைக்கப்பட்ட வண்ணப் பறவையை படகு வீட்டின் ஒரு மூலையில் தொங்கவிட்டு விட்டு உள்ளே செல்கிறான்.. தன்னுடைய சிறிய விசைப்படகில் தனித்து இருக்கும் நாயகி அயர்ந்து போய் தூங்கிவிடுகிறாள்… சுற்றிலும் நீர்ப்பரப்பு இருக்க “தி ஜசல்” என்னும் டைட்டில் இடம்பெறுகிறது..


இரவு நேரம் வீட்டின் கண்ணாடிக்கு முன் அமர்ந்திருக்கும் நாயகி, தன் கூந்தலை சரி செய்தவாறே, தன் உடைகளையும் சரி செய்கிறாள்.. தன் மார்பகத்தின் விளிம்புகள் கவர்ச்சியாக வெளியில் தெரியும்படி தன் உடையை சரி செய்தவள், தன் படகை எடுத்துக் கொண்டு இரவில் மிதக்கும் படகு வீடுகளை நெருங்குகிறாள்… அதில் ஒரு படகு வீட்டில் இருக்கும் மூன்று நண்பர்கள் சீட்டாடிக் கொண்டே இவளை நோக்கி டீ வேண்டும் என்று கேட்க…. அவர்கள் அருகே போட்டை செலுத்தி டீ கொடுக்கிறாள்… அவளை உள்ளே அழைத்து இரண்டு நண்பர்கள் அவளை புணருகிறார்கள்… அதே நேரத்தில் மஞ்சள் நிற படகுவீட்டில் விடப்பட்ட நாயகன், தன் பையில் இருந்து துணி சுற்றப்பட்ட ஒரு சிறிய கைத்துப்பாக்கியை வெளியே எடுக்கிறான்.. பெருமூச்சு விட்டவாறே அதனை உள்ளே வைத்துவிட்டு, வெளியே வந்து நீர்ப்பரப்பில் சிறுநீர் கழிக்கிறான்… அப்போது நாயகி அருகில் இருக்கும் படகு வீட்டில் இருந்து ஆடைகளை சரிசெய்தவாறே வெளியே வருவதை கவனிக்கிறான்… நாயகியை பணம் கொடுத்து அனுப்பும்படி ஒரு நண்பன் கூற, மற்றொருவனோ அவள் வாயைத் திறந்து பேசினால் தான் பணம் கொடுப்பேன்… பேசு என்று அவளை சீண்டுகிறான்.. அவள் பேச விரும்பாதவளாக படகை திருப்ப எத்தனிக்க… அவன் பணத்தை விசிறியடிக்க.. அது நீர்ப்பரப்பில் விழுந்து மிதக்கிறது… அவனை எரிப்பது போல் பார்த்துக் கொண்டே அந்தப் பணத்தை நீரில் இருந்து எடுக்கிறாள்… சற்றுத் தள்ளிப் போய் தன் பெண் உறுப்பை நீர் கொண்டு கழுவுகிறாள்… அவளை அவர்கள் உதாசீனப்படுத்தியது அவளுக்குள் கோபத்தை ஏற்படுத்த… அவர்கள் தங்கி இருக்கும் வீட்டையே வெறித்துப் பார்க்கிறாள்… சிறுது நேரம் கழித்து அந்த வீட்டில் இருந்து வெளிவரும் உதாசீனப்படுத்திய நபர் நீர்ப்பரப்பில் தன் பின்புறத்தைக் காட்டி மலம் கழிக்க… நீருக்குள் இருந்து வெளிவரும் இரண்டு கைகள் அவனை நீருக்குள் இழுத்துப் போட… அவன் எதனாலோ தாக்கப்பட்டது போல் கத்திக் கொண்டே நீரில் மூழ்க… அவனது நண்பர்கள் அவனை காப்பாற்றுகின்றனர்… இந்த சலசலப்புக்கு இடையே சற்றுத்தள்ளி சிறிய விசைப்படகு மட்டும் மிதந்து கொண்டு இருக்க… நீருக்குள் இருந்து இந்த பெண் எழுகிறாள்… அவளது கையில் ஒரு கூர்மையான ஆயுதமும், அவளது உதட்டில் சிரிப்பும் இருக்கிறது… சற்று நேரம் கழித்து தூங்கிக் கொண்டிருக்கும் நாயகனின் படகு வீட்டின் கண்ணாடி ஜன்னலில் ஒளி பரவுகிறது… டார்ச் லைட்டுடன் நிற்கும் நாயகி அவனது முகத்தில் ஒளியை பாய்ச்சிவிட்டு, அவனது உடலின் கீழ்ப்புறம் ஒளியை பாய்ச்சி பார்க்கிறாள்…


அடுத்த நாள் காலை ஒரு வைலட் நிற படகு வீட்டை சுத்தம் செய்யும் நாயகி அப்படியே அதில் தூங்கிப் போகிறாள்… ஒரு ஆணும் பெண்ணும் ஆடைகள் இன்றி உச்சநிலையில் புணரும் ஒரு காட்சி தெரிகிறது… ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்க.. புணர்ந்து கொண்டிருந்த பெண் குண்டு பாய்ந்து இறந்து கிடக்கிறாள்.. அவளது ஆடையற்ற உடலை இழுத்து வந்து, உயிரும் உடையும் அற்ற ஆண் உடலின் மேல் புணரும் நிலையிலேயே அவளது உடலை கிடத்திவிட்டு செல்கிறது ஒரு உருவம்… காட்சி மறைய நாயகன் திடுக்கிட்டு விழிக்கிறான்…. நாயகி படகில் நாயகனின் வீட்டை நெருங்க.. அந்த மரப்பலகையில் இவள் வைத்துவிட்டுச் சென்ற உணவு எடுக்கப்படாமலேயே இருக்கிறது… குழம்பிப் போய் இவள் கண்ணாடி ஜன்னலின் வழியே உள்ளே பார்க்க… நாயகன் இவளுக்கு முதுகை காட்டியபடி குழுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்கிறான்… அவனுக்குப் பின் ஏதோ சோகம் இருக்கிறது என்பதை உணரும் நாயகி அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்… இவன் சந்தோசமாக பொழுதைப் போக்க வந்தவன் அல்ல என்பது அவளுக்குப் புரிகிறது… இரவு நேரம்.. மஞ்சள் படகு வீட்டின் வெளியே மரப்பலகையில் நாயகன் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கிறான்… துப்பாக்கியை தனது நெற்றியை நோக்கிப் பிடிக்க.. தீடிரென்று அவனை நீருக்குள் இருந்து ஏதோ கூர்மையான ஆயுதம் தாக்கிவிட்டு மறைய.. அதிர்ச்சியில் அவன் துப்பாக்கியை நீரில் தவறவிட.. அவன் தொடையில் இருந்து ரத்தம் கசிகிறது…. பயந்து போய் பின்வாங்கியவன் நீரையே பார்த்துக் கொண்டிருக்க… சற்றுத் தள்ளி நாயகி தனது படகில் சிரித்துக் கொண்டே அவனைக் கடந்து செல்கிறாள்…


அடுத்த நாள் காலையில் எழும் நாயகன் பிறரைப் போல் மீன்பிடிக்கத் தயாராக… தூண்டில் செய்து நீருக்குள் மூழ்கடித்து காத்திருக்கிறான்… அவ்வழியே கடந்து செல்லும் நாயகி, இவனது தூண்டிலை எடுத்துப் பார்க்க… தூண்டிலும் மீன் வடிவிலேயே இருப்பதைப் பார்த்து சிரிக்கிறாள்.. இவளாகவே ஒரு புழுவை அதில் திணித்துவிட்டு செல்கிறாள்… அதில் மீன் மாட்டிக் கொள்ள.. நாயகி அவளது வீட்டில் இருந்து ஊஞ்சல் ஆடிக் கொண்டே அதைப் பார்க்கிறாள்.. நாயகன் தூண்டிலில் சிக்கிய மீனை விடுவித்து மீண்டும் நீரில் விடுகிறான்.. ஊஞ்சல் ஆடும் நாயகியைப் பார்த்துவிட்டு, அவள் ஊஞ்சல் ஆடுவதைப் போலவே ஒரு உருவத்தை கம்பியில் தயாரிக்கிறான்…. நாயகி மரங்கள் அடர்ந்த புதர்வெளியில் சென்று ஒரு தவளையை அடித்துக் கொல்கிறாள்… அதன் தோலை உரிக்கிறாள்… அந்த சதைத் துணுக்கை நாயகன் வைத்திருக்கும் கூண்டுப்பறவைக்கு ஊட்டிவிடுகிறாள்… வீட்டுக்குள் இருந்து வெளிவரும் நாயகன் அவளுக்கு அந்த ஊஞ்சல் ஆடும் பொம்மையை பரிசளிக்கிறான்… அவள் மகிழ்ந்து போகிறாள்… தன் நாயுடன் சந்தோசமாக விளையாடுகிறாள்…


அடுத்த நாள் காலை அவள் நீர்ப்பரப்புக்குள் சாப்பாடு கொடுக்க செல்ல எத்தனிக்கும் போது ஸ்கூட்டியில் வரும் இரண்டு பெண்கள், அவளோடு படகில் ஏறிக்கொள்கிறார்கள்.. அவர்கள் இருவரும் “அவர்கள் நமக்கு இரண்டு மடங்கு பணம் தருவார்கள் தானே என்று பேசிக் கொள்கின்றனர்..” க்ரே நிற படகு வீட்டில் இறங்கிக் கொள்ளும் அந்தப் பெண்களில் ஒருத்தி, அங்கு இருக்கும் இரண்டு ஆண்களில் ஒருவனிடம், அவன் பிடித்த மீனைக் காட்டி உன் அளவுள்ள மீன்களையே பிடித்தாயா…? என்று கேட்க… என் அளவு உனக்கு எப்படித் தெரியும்..? நீ பார்த்தாயா..? என்று அவன் கேட்க… என்னால் உன் உருவத்தை வைத்தே சொல்லமுடியும் என்று அவள் பதில் கூற… என்னது இந்த மீனை விட பெரியதாக இருந்தால், இன்று முழுவதும் நான் உன்னை விடப்போவதில்லை… என்று கூறி அவளை உள்ளே இழுத்துச் செல்கிறான்.. மற்றொரு பெண் மற்றொரு ஆணுடன் சம்பாசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள்… நாயகி நாயகனுக்கு சாப்பாடு கொடுக்க… அவனது படகு வீட்டை நெருங்க… அவன் அந்த இரு பெண்களையே கவனித்துக் கொண்டிருக்கிறான்… இவள் கிளம்ப எத்தனிக்க… “இங்கு கழிவறை வசதி உள்ளதா…?” எனக் கேட்க அவள் படகு வீட்டுக்கு உள்ளயே ஒரு சிறிய ஓட்டை உள்ள மரப்பலகையை தூக்கி அடியில்தெரியும் நீர்ப்பரப்பைக் காட்டுகிறாள்… அதில் அவன் தன் காலைக்கடனை கழிக்கத் தொடங்குகிறான்… மழை பெய்யத் தொடங்குகிறது… நாயகன் தன் கூண்டுப் பறவையை உள்ளே எடுத்து வருகிறான்… அந்த இரண்டு பெண்களோடு அந்த இரண்டு ஆண்களும் திரும்பிச் செல்கின்றனர்… அதையும் நாயகன் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.. நாயகி தன் வீட்டில் இசைக்கருவியை ஓடச் செய்கிறாள்… பின்பு சோடா போன்ற ஒரு பானத்தைக் குடிக்கத் தொடங்குகிறாள்… எதிரே தெரியும் மஞ்சள் நிற படகு வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தவள்… தன் கையில் ஒரு சோடா பாட்டிலை எடுத்துக் கொண்டு படகில் நாயகனை நோக்கிச் செல்கிறாள்… மழை கொட்டிக் கொண்டிருக்கிறது…. அவள் வீட்டின் வெளியே இருக்கும் மரப்பலகையில் அமர்ந்து குடிக்கத் தொடங்க… நாயகனும் அவள் அருகில் வந்து அமருகிறான்…. அவளிடம் நெருக்கம் காட்டி அமர… அவள் மறுப்பு தெரிவிக்காமல் இருக்க… அவளை புணரத் தொடங்குகிறான்… அவன் மிருகத்தனமான முறையில் அவளது ஆடைகளை கிழித்து புணர்ச்சியில் ஈடுபட… அதை விரும்பாத நாயகி அவனை அடித்து நீரில் தள்ளிவிட்டு மேல் கச்சைகள் அற்ற நிலையிலேயே தன் வீட்டுக்கு திரும்புகிறாள்… பின்பு அவள் போன் செய்ய… ஏற்கனவே வந்து சென்ற இரண்டு பெண்களில் மீனைப் பற்றி பேசிய பெண், தனது ஸ்கூட்டியில் வந்து சேர்கிறாள்… “இந்த மழையில் அவனுக்கு பெண் கேட்கிறதா…” என்று அவனைத் திட்டிக் கொண்டே அவள் படகில் ஏற, நாயகி அவளை நாயகனின் மஞ்சள் நிறப் படகு வீட்டில் இறக்கிவிட்டுச் செல்கிறாள்… அந்தப் பெண் நாயகனிடம் சீக்கிரம் என்று அவசரம் காட்டி ஆடையை கலட்ட முற்பட.. அதை தடுக்கும் நாயகன் அவளுக்கு டீ கொடுத்து சம்பாஷனைகளில் ஈடுபடுகிறான்…  வெறுத்துப் போன அந்தப் பெண் கிளம்புவதற்காக, படகை கொண்டு வரச்சொல்லி கையசைக்க… நாயகி அதைக் கண்டுகொள்ளாதவள் போல் இருந்து கொள்கிறாள்.. அவன் கம்பியில் செய்த சைக்கிள் ஒன்றை அவள் கேட்டு வாங்கிக் கொள்கிறாள்… சிறுது நேரத்தில் அவனை அவளுக்குப் பிடித்துப் போக இருவரும் உறவில் ஈடுபட முற்பட… அந்தப் பெண்ணை வைத்து பிழைப்பு நடத்தும் ஆடவன் வந்து நாயகனிடம் பணம் பெற்றுக் கொண்டு அவளை இழுத்துச் செல்கிறான்… நாயகன் மீதுள்ள கோபத்தை நாயை அடிப்பதன் மூலம் நாயகி வெளிப்படுத்துகிறாள்… அந்த நாயை ஒரு படகு வீட்டில் தனியாக கட்டிப் போட்டுச் செல்கிறாள்..


புதிதாக படகு வீட்டில் தங்க வந்த ஒரு இளைஞனுடன் நாயகி உறவு கொள்கிறாள்… அடுத்த நாள் படகுவீட்டுக்கு ஒரு பெண்ணுடன் வரும் பணக்காரன் அந்தப் பெண்ணுக்கு விருப்பமான வண்ணத்தைக் கேட்டு அந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொல்கிறான்… அங்கு கொழுத்த பெரிய மீனைப் பிடிக்கும் அவன் அதை உயிரோடு அறுத்து, அதை பச்சையாக அவளுக்கு ஊட்டிவிட்டு அவனும் உண்டு மகிழ்கிறான்… பின்பு அந்த மீனை அப்படியே சதை அறுபட்ட நிலையிலேயே நீரில் விட… அது நீருக்குள் நீந்திச் சென்று மறைகிறது… அடுத்த நாள் காலையில் ஏற்கனவே நாயகனுடன் பழகிச் சென்ற அந்த ஸ்கூட்டியில் வந்த பெண், மீண்டும் வந்து நிற்க… தன் கோபத்தை மறைத்துக் கொண்டு வேறுவழியின்றி அவளை நாயகனிடம் அழைத்துச் செல்கிறாள்… அன்றிரவு அவர்கள் இருவரும் புணருவதை காலைக் கடன் கழிப்பதற்காக வைத்திருக்கும் பலகையை தூக்கிக் கொண்டு பார்க்கிறாள்… அப்பொழுது தன்னைப் பார்க்கும் நாயகனை முறைத்துக் கொண்டே வெளியேறுகிறாள்.. அடுத்த நாள் காலை அந்தப் பெண்ணை பணம் கொடுத்து நாயகன் அனுப்ப.. அவள் அழுதுகொண்டே நான் வேசியாக வரவில்லை… உன்னை எனக்குப் பிடித்திருந்ததால் வந்தேன்… என்று முறையிடுகிறாள்… இருப்பினும் பணத்தை எடுத்துக் கொள்ளும் அவள் இது பிற பெண்களுக்கு என்று சொல்லி வெளியேறுகிறாள்.. படகில் அவளை அழைத்துச் செல்வதற்காக நாயகி காத்துக் கொண்டிருக்க… அவள் முன்னிலையில் நாயகனை கட்டி அணைத்துக் கொண்டே, அந்த ஜீஸைக் குடி… நான் மீண்டும் உன்னை வந்து பார்க்கிறேன்… என்று சொல்லி கிளம்புகிறாள்… படகில் செல்லும் போது நாயகனிடம் பெற்ற பணத்தை “என் நண்பனுக்கு உதவி செய்வதற்கு நன்றி.. அதற்காக இந்தப் பணத்தை வைத்துக் கொள்…” என்று நாயகியிடம் நீட்ட… அதை வாங்கிய நாயகி அதை அவளது முகத்தில் விசிறியடிக்கிறாள்… மேலும் படகை பலகை மீது மோதச் செய்து, அவளை தடுமாறி விழச் செய்து தன் வெறுப்பைக் காட்டுகிறாள்.. மேலும் உடனடியாக நாயகனின் இடத்துக்கு வந்து, அவன் குடித்துக் கொண்டிருக்கும் ஜீஸை தட்டிவிட்டு, அவள் கொடுத்த எல்லாப் பொருட்களையும் கலைத்துப் போடுகிறாள்… மேலும் ஆவேசமாக அவனது உதட்டையும் கடித்து ரத்தம் கசியச் செய்கிறாள்…


வீட்டிற்கு வந்து அழத் தொடங்கும் அவள்.. அழுதுகொண்டே தன் வீட்டின் ஜன்னலைத் திறக்க… அங்கு பாதி நீருக்குள் மூழ்கிய நிலையில் ஒரு பழைய பைக் நின்றுகொண்டிருக்கிறது… அவளது அழுகை தொடர்கிறது… அடுத்த நாள் காலை அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க… ஒரு படகில் இரண்டு போலீஸ் வருகின்றனர்… அதைப் பார்க்கும் நாயகன் பதட்டமடைகிறான்… மற்றொரு இளைஞன், (நாயகியை புணர்ந்தவனும்) போலீசைப் பார்த்து பதட்டமடைய… போலீஸ் அவனை நெருங்குகிறது… சில போட்டோக்களைப் பார்த்துக் கொண்டே அவனிடம் அடையாள அட்டை கேட்க… அவன் போலீசை தாக்கிவிட்டு தப்பிக்க முனைய… போலீஸ் அவனை சுட்டுப் பிடிக்கிறது… இதனைப் பார்த்துக் கொண்டே நாயகி தனது படகில் நாயகனின் வீட்டை நோக்கி வருகிறாள்… போலீஸ் நாம் தற்போது தேடுவது இவனை அல்ல… என்று சொல்லிக் கொண்டே அவனையும் படகில் ஏற்றியபடி அடுத்த படகு வீட்டை நெருங்குகிறது.. நாயகன் மீன் பிடிக்க வைத்திருக்கும் தூண்டிலை தன் தொண்டைக்குள் இறக்கி, அதனை வலிமை கொண்ட மட்டும் இழுத்து தற்கொலைக்கு முயல.. அவன் வாயில் இருந்து ரத்தம் கொப்பளிக்கிறது… அதே சமயம் நாயகி உள்ளே நுழைய… நாயகன் வலியில் துடித்துக் கொண்டிருக்க… சுற்றிலும் ரத்தம்…. பரிதவிக்கும் நாயகி என்ன செய்வது என்றே தெரியாமல் முழிக்க.. போலீஸ் மஞ்சள் நிற வீட்டை நெருங்கிவிடுகிறது… உள்ளே போலீஸ் நுழைய… நாயகி தரையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்… வேறுயாரும் இல்லை என்பதை உறுதி செய்து போலீஸ் சென்றுவிடுகிறது… நாயகி துரிதமாக தூண்டிலை கையில் எடுத்து… கழிவறை கதவைத் திறந்து நீருக்குள் அமிழ்த்து வைத்திருக்கும் நாயகனை மேலே இழுத்து காப்பாற்றுகிறாள்.. அவன் தொண்டைக்குள் சிக்கியிருக்கும் முட்கம்பிகளை பிடிங்கிவிட்டு, அவனது வலியைக் குறைக்க அல்லது திசைதிருப்ப.. அவனோடு உடலுறவு கொள்கிறாள்…. பின்பு அவனது வாய் திறந்த நிலையில் இருக்க… ஒரு குச்சியைக் கொண்டு முட்டுக் கொடுத்து.. காற்றோட்டமாக இருக்க விசிறிவிடுகிறாள்… தன் வீட்டிலிருக்கும் முன்னால் காதலன் அல்லது கணவனின் ஆடையை எடுத்துவந்து அவனுக்கு அணிவிக்கிறாள்…. பின்பு அவனை அந்த நீர்ப்பரப்பிலேயே நிலம் போல இருக்கும் ஒரு புற்கள் நிரம்பிய இடத்துக்கு அழைத்துச் சென்று சாப்பிட பழம் கொடுக்கிறாள்…


அடுத்த நாள் நாயகனைத் தேடி அதே இளம்பெண் வந்து நிற்க… அவளை வேறு ஒரு வீட்டுக்குள் வாயைக் கட்டி அடைத்து வைத்து, அந்த வீட்டை ஏரிக்குள் மிகதூரத்துக்கு நகர்த்திச் செல்கிறாள்… அன்று இரவு அந்த இளம்பெண் படகுவீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து நீரில் விழுந்து இறக்கிறாள்… காலையில் அவளைத் தேடி வரும் நாயகி அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்… அவளது உடலையும் பைக்கையும் கல்லைக் கட்டி நீருக்குள் இறக்கிவிடுகிறாள்.. இருப்பினும் அவளது மரணம் அவளை கலங்கச் செய்கிறது… அன்றிரவே அந்தப் பெண்ணை வைத்து தொழில் செய்யும் இளைஞன் வர… அவனுக்கும் நாயகனுக்கும் கைகலப்பாக….. நீரில் விழும் அவனை நீருக்குள் வைத்தே நாயகி கொலை செய்கிறாள்… அதைப் பார்த்து நாயகன் அதிர்ச்சி அடைய… அவனது துணையுடன் அந்த இளைஞனின் பிணத்தை படகில் ஏற்றி… அந்த இளம் பெண்ணை நீருக்குள் புதைத்த இடத்துக்கே கொண்டு சென்று பேட்டரியைக் கட்டி நீருக்குள் இறக்குகிறாள்… அங்கு அந்த இளம்பெண்ணின் செருப்பு இருப்பதைக் கண்டு நாயகன் உண்மையை புரிந்து கொள்கிறான்…. அடுத்த இரண்டு நாட்களும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருவரும் முழித்துக் கொண்டிருக்க… நாயகன் வழக்கம்போல் கம்பியில் ஒரு தூக்குமாட்டப்பட்ட பொம்மை செய்கிறான்… அதை நாயகி பிடுங்கி தண்ணீருக்குள் வீசுகிறாள்… இதனால் கோபம் கொள்ளும் நாயகன்.. தன் கோபத்தை மீன்களைப் பிடித்து அதை குரூரமாக வெட்டுவதில் காட்டுகிறான்… அப்படி அவன் வெட்டும் போது… ஏற்கனவே பாதி வெட்டிய நிலையில் விடப்பட்ட மீன் மீண்டும் தூண்டிலில் சிக்க… அதையும் பிடித்து வெட்ட கையை ஓங்குகிறான்… நாயகி அதைப் பார்த்துக் கொண்டிருக்க… மனமின்றி அதனை மீண்டும் நீருக்குள் விடுகிறான்… அவனை சமாதானம் செய்யும் எண்ணத்தில் நாயகி அவனைக் கட்டிப்பிடிக்க… அவளை திட்டிக் கொண்டே எட்டித் தள்ளுகிறான்… அவள் மீது வெறுப்பைக் காட்ட… அவள் கோபத்தில் நாயகனின் கூண்டுப் பறவையை நீரில் மூழ்கடிக்கிறாள்… நாயகன் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க… அவனைத் தடுக்கிறாள்… “நான் உன்னுடைய ஆண் அல்ல… நீ வேசி… நான் எப்போது வேண்டுமானாலும் உன்னை விட்டு போவேன்…” என்று கத்த அமைதியாக அந்த இடத்தை விட்டு நகலும் அவள் தன் படகை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள்… அன்றுஇரவு படகு வீட்டில் அடியில் கட்டப்பட்டு இருக்கும் டிரம்மை அவிழ்த்து அதைக் கொண்டு நீந்தி தப்பப்பார்க்கிறான் நாயகன்… டிரம் கைநழுவிச் செல்ல மூழ்கப் பார்க்கிறான்… அவன் முகத்தில் ஒளியை அடிக்கிறாள் நாயகி… தூரத்தில் படகில் அவள் நின்று கொண்டிருக்க.. இவனை நோக்கி தூண்டில் முள்ளை வீசுகிறாள்.. அதை அவன் பிடித்துக் கொள்ள… அவனை படகில் ஏற்றாமல் தூண்டிலைப் பிடித்தே நீருக்குள் வீடு வரை இழுத்து வருகிறாள்… படகு வீட்டில் ஏறியவுடன் அவன் கையில் குத்தி இருக்கும் முட்களை பிடுங்கி எடுக்கிறாள்… அவன் வெறியுடன் அவளைப் பிடித்து தள்ளிவிட்டு அவளது பெண்குறியில் பலம் கொண்ட மட்டும் தொடர்ச்சியாக எட்டி உதைக்கிறான்… அவள் வலி பொறுக்காமல் பற்களை கடித்துக் கொண்டே அழத் தொடங்க… இவன் ஆக்ரோசமாக அவளை புணர்ந்துவிட்டு…. உச்சநிலையில் அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு அழத் தொடங்குகிறான்….


அதிகாலை.. அருகே தூங்கிக் கொண்டிருக்கும் நாயகியின் முகத்தை ஒரு முறை வருடிவிட்டு, அமைதியாக படகை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான் நாயகன்.. அவன் தன்னை விட்டுப் போவதை உணர்ந்த நாயகி அழுது கொண்டே தூண்டில் முட்களை தன் பெண்ணுறுப்புக்குள் செலுத்தி, அதை பலம் கொண்ட மட்டும் பிடித்து இழுக்கிறாள்… வேதனையில் அலறுகிறாள்.. அவளது குரல் கேட்ட நாயகன் பாதிவழியில் இருந்து பதட்டமாக திரும்பி வருகிறான்… வெள்ளை பாவாடை முழுவதும் இரத்தம் விரவி இருக்க… தள்ளாடி தள்ளாடி நடக்கும் அவள் நீரில் விழுகிறாள்… நாயகன் அவளை தூண்டிலைக் கொண்டு இழுத்து கரைசேர்க்கிறான்… துவண்டு போய் இருக்கும் அவளது உடலை கட்டிக் கொண்டு அழத் தொடங்குகிறான்… அவளது பெண் உறுப்பை விரித்து அதில் சிக்கி இருக்கும் முட்களை பிடுங்குகிறான்…. அவன் பிடுங்கி வைத்த இரண்டு முட்கள் சேர்ந்து அன்பின் வடிவமாக மாறி நிற்கிறது… அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு அவளது காலிடுக்கில் விசிறிவிடுகிறான்… அவளது தலையை வாரி அவளுக்கு பூச்சூடுகிறான்…


மீனைப் பாதி வெட்டி மீண்டும் நீருக்குள் விட்டு விளையாடும் அந்த பணக்காரன் அந்த இளம்பெண் நீரில் புதைக்கப்பட்ட இடத்தில் தன் அழகியுடன் மீன் பிடிக்கிறான்.. அவனது வாட்ச் தவறி நீருக்குள் விழ… லோக்கல் டைவர்ஸை அவன் அழைக்கிறான்…. அவர்கள் வந்து ஸ்கூட்டரை கண்டெடுக்கின்றனர்… இதை தூரத்தில் இருந்து பார்க்கும் நாயகனும் நாயகியும் விசைப்படகை ஓட்டை போட்டு மூழ்கடிக்கச் செய்துவிட்டு, மோட்டாரை எடுத்து மஞ்சள் படகுவீட்டில் பொருத்தி அந்த நீர்ப்பரப்பை விட்டு தங்கள் படகுவீட்டை மட்டும் நகர்த்திக் கொண்டே செல்கின்றனர்….. அந்த வீடு கண்ணுக்கு தெரியாத இடம் சென்று மறைகிறது… நீருக்குள் இருந்து எழும் நாயகன் புதர் மண்டிய நிலத்தில் புதரை விலக்கிக் கொண்டு சென்று மறைய…. அந்தப் புதர் ஒரு தீவு போலக் காட்சியளிக்க… படகில் நிர்வாணமான நிலையில் நீருக்குள் நாயகியின் உடல் மூழ்கி இருக்க…. அவளது முடிகள் அடர்ந்த பெண்ணுறுப்பு புதர்கள் அடங்கிய ஒரு தீவு போல் மெட்டபராக காட்சியளிக்க படம் முடிவடைகிறது….


இத்திரைப்படத்தின் காட்சிகளை மேலே இவ்வளவு விலாவாரியாக விளக்கியது, விமர்சனத்தின் பகுதிகளை விவாதிக்க அது ஏதுவாக இருக்கும் என்பதாலேயே…. மேலும் சிலர் படத்தில் வரும் சில காட்சிகளை மறந்திருக்கலாம்… பலர் திரைப்படமே பார்க்காமலும் இருக்கலாம்… அவர்களும் திரைப்படம் என்ன சொல்ல வருகிறது என்பதை எளிதாக உள்வாங்கிக் கொள்வதற்கும் தான்… இனி விவாதம்…

திரைப்படத்தின் மையமாக நான் பார்ப்பது, இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்டாள் அல்லது அதையே நமக்குப் பழக்கமான வார்த்தைகளில் சொல்வதானால் வேசித்தனம் செய்தாள், அல்லது துரோகம் செய்தாள் என்பதற்காக தனது மனைவியையோ அல்லது காதலியையோ அவளது ஆண் துணையுடன் சேர்த்தே கொன்றுவிட்டு, தலைமறைவாக தனியாக இருக்கும் ஒரு ஆடவனுக்கு, அவனைப் பற்றி எதுவுமே அறியாத ஒரு பெண் வாழ்க்கைத் துணையாக மாற விரும்புகிறாள்… அவள் எப்படிப்பட்டவள் என்றால், தன் உடலை விற்பதை தொழிலாகக் கொண்டவள் அல்லது தனக்கு தேவை ஏற்படும் போது தான் விரும்புபவர்களுடன் உறவு கொள்பவள்.. இப்படி வெவ்வேறு விளிம்புநிலை குணம் கொண்ட இரு மனிதர்கள் சந்திக்கும் புள்ளிதான் இந்த ஐசல்…

இந்த திரைப்படத்துக்கு ஏன் ஐசல் என்று பெயரிட வேண்டும்.. அது எதனைக் குறிக்கிறது என்று எண்ணினால் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது…. தீவு என்பது தனித்துவிடப்பட்ட நிலப்பகுதி.. சுற்றிலும் நான்குபுறம் நீரால் சூழப்பட்ட தன்னைப் போன்ற பிற நிலப்பரப்புகளுடன் எந்தவகையிலும் தொடர்ப்பில் இல்லாத ஒருவிதமான தனிமையின் உருவகம்தான் இந்தத் தீவு.. கூட்டம் கூட்டமாக குழுமி வாழும் நம் போன்ற சமூக குழுக்களில் கூட, நம் கண்ணுக்கு அப்பட்டமாக தெரியாமல், ஆனால் ரகசியமாக இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட தீவில் வாழ்கின்ற மக்கள் தான் அதிகம்… ஆணை புரிந்து கொள்ளாத பெண், பெண்ணின் உணர்வை மதிக்கத் தெரியாத மதிக்க விரும்பாத ஆண், இப்படி இருவரும் சேர்ந்து குடும்பமாக, ஆனால் தங்களுக்குள் தனித்தனி தீவில் தான் பெரும்பாலும் வசிக்கிறார்கள்.. இந்தக் கதையின் நாயகியும் ஒரு தீவைப் போலத்தான்… தன்னைப் போன்ற துயரங்களால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மனிதனைப் பார்க்காமல், அது போன்ற மனிதர்களுடன் தொடர்பில் இல்லாமல் தனித்து வாழ்கிறாள் அவள்.. அவளைச் சுற்றி இருக்கின்ற மக்கள் எல்லாம் உல்லாசத்திற்காக பொழுதுபோக்குக்காக மீன் பிடிக்க அவள் இருக்கும் இடத்தை தேடி வருபவர்கள்.. அவர்களுக்கு இடையே இவள் வசித்தாலும், அவள் தனித்து விடப்பட்ட தீவு போலத்தான்… அதனால் தான் நீருக்கு இடையே தனித்து விடப்பட்ட அவள் ஒரு தீவு போலக் காட்சியளிக்க… அந்த பிரேமிலேயே “தி ஐசல்” என்று டைட்டில் வருகிறது…

கிம் கி டுக்கின் பிற படங்களைப் போல இந்தத் திரைப்படமும் ஒரு பெண்ணின் உணர்வுகளையும், அதைப் புரிந்து கொள்வதில் இந்த உலகுக்கு அல்லது இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஆணுக்கு இருக்கின்ற உளவியல் ரீதியான சிக்கலையும் மிக அழுத்தமாக பேசுகிறது… இந்தக் கதையில் நாயகனான வரும் ஆண் தன் மனைவி/காதலியை வேறு ஆணுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால் என்பதால் அந்த ஆணோடு சேர்த்து கொன்றுவிட்டு, தலைமறைவான வாழ்க்கை வாழ்பவன்.. ஆனால் அவனுக்கு பெண்ணின் மீது தனிப்பட்ட வெறுப்பு இருப்பது போல் காட்சிகள் ஏதும் இல்லை… அவன் பெண்களை மதிக்கவே செய்கிறேன்… நாயகிக்கு ஒரு ஊஞ்சல் பொம்மையையும், இவனுடன் புணர்ச்சியில் ஈடுபடும் மற்றொரு இளம் பெண்ணுக்கு ஒரு சைக்கில் பொம்மையையும் பரிசளிக்கிறான்… அப்படி இருந்தும் அது அவனுக்கு பெண்ணின் மீதான உடல் தேவையாகத்தான் இருக்கிறது… என்னதான் அவன் அவர்களோடு பழகினாலும் தன் மனைவியைப் போலவே அவர்களும் வேசிகள் என்பதை அவனது மனம் மறுக்க முடியாத அளவுக்கு நம்புகிறது… அதனால் தான் அந்த இளம் பெண்ணுக்கு பணம் கொடுக்கிறான்… நாயகியை வேசி என்று வார்த்தைகளால் வதைத்துக் கொண்டே இருக்கிறான்… ஆக அவனுக்கு புணர ஒரு பெண் தேவை… சேர்ந்து வாழ்வதற்கு அல்ல… அப்படி ஒரு எண்ணம் அவன் மனதில் இல்லவே இல்லை… அல்லது தான் சேர்ந்து வாழ்வதற்கு தகுதியான பெண் இல்லவே இல்லை என்பது அவனது எண்ணம்… இவன் காமத்துக்கும் காதலுக்குமான தேவைகளில் இருக்கின்ற வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறும் ஒரு கதாபாத்திரம்..

நாயகியாக நடித்திருக்கும் பெண்ணின் வாழ்வியல் வரைபடம் மிக முக்கியமானது.. இந்த திரைப்படத்தில் அந்தப் பெண் வாய் திறந்து பேசுவதே இல்லை.. புறக்கணிப்பின் வலியை அதிகமாக உணர்ந்தவளாக காட்சிப்படுத்தப் படுவது நாயகனை விட நாயகிதான்… அந்தப் புறக்கணிப்பின் வலியால் அவள் செய்யும் சில செயல்கள் வன்மம் நிறைந்ததாகவும் இருக்கிறது… அதே நேரத்தில் அவள் தனக்கான மரியாதையை எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்பவள்… அவளது வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டு இருக்கும் அந்த பழைய பைக் அவளை விட்டுவிட்டு சென்ற காதலன் அல்லது கணவனின் பைக்காக இருக்கலாம்… அவள் ஆண்களிடம் பணத் தேவைக்காக செல்கிறாளா..? அல்லது உடல் சார்ந்த சுய தேவைக்காக செல்கிறாளா…? என்பதை புரிந்து கொள்வதும் கொஞ்சம் சிரமம் தான்… ஏனென்றால் அவள் பணத்துக்கு பெரிதாக மதிப்பளிப்பதில்லை… மேலும் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் நாயகனின் அறைக்கு செல்லும் அவள், அவன் முகத்தில் ஒளியை பாய்ச்சி பார்த்துவிட்டு, பின்பு அந்த ஒளியை அவனது உடலின் கீழ்ப்புறம் அடித்துப் பார்ப்பாள்… அதையும் எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.. அதுமட்டுமின்றி நாயகனின் அன்பை பெற வேண்டும் என்னும் எண்ணம் அவளுக்கு மேலோங்கத் தொடங்கும் சமயத்திலும் அவள் அடுத்தவனுடன் புணர்ச்சிக்காக படுப்பதை குற்றமென்று கருதாதவள்… அதனால் தான் அவளால் நாயகன் மீதான ஆரம்பக்கட்ட அன்பு ஏற்படும் நேரத்தில் கூட, அவனது தேவை சதைப் பிண்டமான ஒரு பெண்ணின் உடல் என்பதை உணர்ந்து, தான் இருக்க வேண்டிய இடத்தில் தனக்கு பதிலாக இன்னொரு பெண்ணை அவனது பசியாற்ற அவளால் அனுப்பமுடிகிறது… அவள் அந்த காமத்தின் தேவையை நன்கு அறிந்தவள்… அவள் எத்தனை நாள் ஆண் துணை இன்றி இருக்கிறாள் என்று நமக்கு சொல்லப்படுவதில்லை… அவள் அந்த காமத்தின் தேவையை அறிந்த கட்டம் அதுவாகக் கூட இருக்கலாம்… அதுபோல் அவளுக்கு அந்த காமத்தின் தேவைக்கும், காதலின் தேவைக்குமான வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடிகிறது… அதனால் தான் நாயகனின் காமத்தின் தேவையை பூர்த்தி செய்ய தனக்கு பதிலாக இன்னொரு பெண்ணை அனுப்பியவள்… காதலின் தேவையையும் பூர்த்தி செய்ய தனக்குப் பதிலாக அவள் வந்துவிடுவாளோ என்று பயமும் வெறுப்பும் கொள்கிறாள்… அவர்கள் இருவரும் புணருவதை கண் கொண்டு பார்த்தும் அவள் கோபம் கொள்வதில்லை.. ஆனால் நாயகன் மீது அந்த இளம் பெண் அன்பைப் பொழிவதை பார்க்கும் போதுதான், அவள் சூறாவளியாக வெடிக்கிறாள்.. அதுபோல தெரிந்தே செய்கின்ற குற்றத்துக்கான தண்டனை என்பதிலும், உயிர் கொலை என்பதிலும் சூழியலுக்கு உள்ள தொடர்பை அவள் அறிந்தவள்…. நாயகன் மீனைக் கொல்லாமல் நீரில் விடும் அடுத்த காட்சியில் அவள் தவளையை அடித்துக் கொல்கிறாள்… அதை பறவைக்கு உணவாக்குகிறாள்.. அந்த இளம் பெண்ணின் சாவுக்கு தானும் காரணமாக இருந்துவிட்டோம் என்பதை அறிந்து அவள் மனம் கவலை கொள்கிறது… ஆனால் அந்த இளம் பெண்ணை வைத்து தொழில் செய்தவனை நாயகி கொல்லும் போது அவளிடம் எந்த சஞ்சலமும் இருப்பதில்லை.. அது போல நாயகன் நாம் தூக்கில் தொங்கப் போகிறோம் என்பதை சொல்வது போல் தூக்கில் தொங்கும் பொம்மையை  செய்யும் போது, அதில் தனக்கு உடன்பாடு இல்லை… நாம் வாழ வேண்டும் என்பதை சொல்வது போல் அந்த பொம்மையை தண்ணீருக்குள் மூழ்கடிக்கிறாள்… இப்படி அந்தப் பெண்ணின் கதாபாத்திரம் மிகவும் முதிர்ச்சியானதாகவும், உக்கிரமானதாகவும் படைக்கப்பட்டு உள்ளது….

ஏற்கனவே சொன்னது போல் குறியீடுகளைப் பற்றிப் பேசாமல் கிம் கி டுக்கின் படங்கள் முடிவடையாது.. இதிலும் ஏகப்பட்ட அழுத்தமான குறியீடுகள் இடம் பெறுகின்றன… மீன் பிடிக்கும் தூண்டில் முள், பாதி துண்டிக்கப்பட்டு உயிரோடு சுற்றிக் கொண்டிருக்கும் மீன், கூண்டில் இருக்கும் பறவை, நாயகியின் பெண் உறுப்பு, நாயகியோடு இருக்கும் நாய் என பல முக்கியமான அழுத்தமான குறியீடுகள் இந்த திரைப்படத்திலும் இடம் பெறுகின்றன.. அந்த நாயும் அந்த கூண்டில் இருக்கும் பறவையும் நாயகன் மற்றும் நாயகியின் தனிமையை ஈடுசெய்யும் உயிரினங்கள்.. இங்கு எல்லோருக்குமே தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற பயம் இருக்கிறது.. ஏன் ஒரு கட்டத்தில் நாயகிக்கும் கூட அந்த பயம் தொற்றிக் கொள்கிறது… தனக்கு வெகு நாட்களுக்கு பின் கிடைத்த துணையையும் ஒருத்தி பறித்துக் கொள்வாளோ என்கின்ற பயம்… ஆனால் அதை முழுக்க முழுக்க பயம் என்று மட்டும் வகைப்படுத்த முடியாது…. ஏனென்றால் நாயகனைப் பற்றிய உண்மையை வெளியே தெரியாமல் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையாகக் கூட அது இருக்கலாம்.. அந்த இளம் பெண்ணை நாயகி கொல்ல நினைப்பது இல்லை… பயமுறுத்தும் எண்ணத்துடன் அடைத்து வைக்கவே விரும்புகிறாள்.. அவளது மரணம் எதிர்பாராதது.. 

ஆனால் நாயகன் படத்தில் ஆரம்பத்தில் வரும் போது தன்னுடன் கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு அழகிய பறவையை கொண்டு வருகிறான்… அது அவனது தனிமையை ஈடு செய்யும் பொருள் தான்… அது போலத்தான் நாயகிக்கு ஒரு நாய்…. ஆனால் இரண்டுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.. நாயகன் கூண்டில் அடைக்கப்பட்ட பறவையை வைத்திருக்க.. நாயகி சுதந்திரமாக ஓடி ஆடும் ஒரு நாயை வைத்திருக்கிறாள்… அதை எல்லா நேரமும் அவள் கட்டிப் போடுவதில்லை…. நாயகன் தன் பறவையின் பாதுகாப்பைப் பற்றி பெரிதும் கவலை கொள்கிறான்… உதாரணமாக மழை பெய்யும் போது அதை பாதுகாப்பாக எடுத்து வீட்டுக்குள் வைப்பதும்… முதல் காட்சியில் படகில் வரும் போது பறவைக்கு குளிராதபடி அதை கம்பளியால் மூடிக் கொள்வதும் அவனது பாதுகாப்பு நடவடிக்கைகள்… ஆனால் அதன் பசியைப் பற்றி அவனுக்கு கவலையே இல்லை…. ஆனால் அதன் பசியை அறிந்து அதற்கு ஒரு தவளையை கொன்று உணவாக்குபவள் நாயகி தான்… கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் பறவையென்பது உள்ளீடாகப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கான அடையாளம்…. பாதுகாப்பு போர்வைக்குள் வைக்கப்பட்டு இருக்கும் ஒரு அழகான பெண்… ஆணுக்கு அந்தப் பெண்ணின் மீதான பாதுகாப்பின் மீதுதான் கண்.. அவனுக்கு அவளது பசியைப் பற்றி கவலை இல்லை… எல்லாவிதமான பசியைப் பற்றியும் தான்… அதுபோல அந்த நாய் நாயகிக்கு ஆணுக்கான உள்ளீடு… நாயகன் அந்த ஊஞ்சல் பொம்மையை கொடுக்கும் போது, அவனோடு ஆடிப்பாடி கழிக்க முடியாத அந்த சந்தோசத்தை நாயுடன் தான் ஆடிப்பாடி கழிக்கிறாள்… அதுபோல நாயகன் தன்னை வன்புணர்ச்சி செய்ய முயன்றதையும், மனுசியாக எண்ணி பழகாததையும் பொறுக்க முடியாத அவள்.. நாயகனை அடிக்க முடியாமல் தன் நாயை தனித்த படகு வீட்டில் கட்டிப் போட்டு, அந்த நாயைத் தான் நாயகன் பார்க்கும் படி அடிக்கிறாள்…


அந்த கூண்டில் அடைக்கப்பட்ட பறவையை பெண்ணுக்கான உள்ளீடாகப் பார்க்கும் போது, அதன் பசியறிந்து அதற்கு உணவு கொடுப்பவள் நாயகி என்பதையும் நாம் புரிந்து கொண்டாலும் மற்றொரு சம்பவம் நமக்கு ஆச்சரியம் கொடுக்கும். அது அவள் ஏன் அந்த கூண்டிலிருக்கும் பறவையை தண்ணீரில் எறிந்து கொன்றாள் என்பது… அந்தக் குறிப்பிட்ட காட்சியை புரிந்து கொள்வதற்கு முன் மற்றொரு காட்சியையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்… அது அந்தப் பணக்காரன் கொழுத்த மீனை எடுத்து அறுத்துப் புசித்து அப்படியே மீண்டும் நீரில் நீந்தவிடும் காட்சி… இந்தக் காட்சி ஏன் வைக்கப்பட்டது என்று யோசித்தால் இரண்டு காரணங்கள் கிடைக்கும்… 

ஒன்று மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் வன்மம் மற்றும் குரூரம் இவைகளை தெளிவுபடுத்த…. சந்தோசமாக இருக்கும் போதும் கோபமாக இருக்கும் போதும் மனிதன் வன்மம் மற்றும் குரூரம் நிறைந்த செயல்களில் ஈடுபடுகிறான்…. சந்தோசமாக இருக்கும் போது வன்மமான செயல் புரிந்தவன் அந்தப் குண்டு பணக்காரன்… கோபத்தில் வன்மமான செயல் புரிந்தவள் நாயகி, அந்தப் பறவையை கொன்றது, மீனைக் கரண்ட் ஷாக் வைத்துக் கொள்வது இப்படி.. ஆனால் அங்கு பாதியாக நறுக்கப்பட்ட அந்த மீன், ஏன் நாயகன் மீனைப் பிடித்து கொடூரமாக கொன்று கொண்டு இருக்கும் போது வர வேண்டும்..? என்று யோசிக்கும் போது நமக்கு அந்தக் காட்சிக்கான இரண்டாவது காரணமும் கிடைக்கும்.. 

இரண்டு விதமான ஆண்கள் இங்கு இருக்கிறார்கள்… ஒன்று பெண்களை பாதுகாக்க வேண்டிய பொக்கிசமாக கருதுபவர்கள்…. கூண்டுப் பறவை போல… இரண்டாவது அவர்களை சுதந்திரமாக ஆனால் தங்கள் கைக்கு பிடிப்பதற்கு எளிதான நீர்ப்பரப்பு போன்ற தளத்தில் விட்டு, தங்களுக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் அவர்களைப் பிடித்து கொடூரமாக சுவைக்க விரும்புபவர்கள்… அந்த குண்டு பணக்காரன் குரூரமாக மீனை சுவைப்பதைப் போல…. இங்கு அந்த மீன் பெண்ணுக்கான குறியீடு… மேலே பணக்காரனுடன் அமர்ந்திருக்கும் அந்த அழகியும் அந்த மீனை சுவைக்கவே செய்கிறாள்… மீனைப் பிடிக்க மீன் வடிவிலே தூண்டில் இருப்பதைப் போல… அவளும் அந்த மீனைப் போல் கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருப்பவள் என்பதை அவள் அறியமாட்டாள்… மேலும் அந்த பாதி உடல் நறுக்கப்பட்ட மீன் நாயகனின் கையில் சிக்கும் போது அது நாயகிக்கான குறீயீடாக மாறுகிறது… அதை நாயகன் பிடிக்கும் போது, அவன் நாயகியை கொல்வதற்கான கோபத்துடன் இருப்பவன்.. அந்தக் கோபத்தைத் தான் அவன் மீன்கள் மீது காட்டிக் கொண்டு இருக்கிறான்… அந்த பாதி அறுபட்ட மீன் அவன் கையில் கிடைக்கும் போது அதை வெட்டவும் அவன் கை ஓங்குகிறான்…. அதை நாயகியும் குறுகுறுப்புடன் பார்க்கிறாள்… அதை அவன் பிழைக்க விட்டுவிடுகிறான்… நாயகி ஆசுவாசம் அடைந்தவளாக அவனைத் தழுவ… நாயகன் வார்த்தைகளால் அவளை சாகடிக்கிறான்…. இதற்கு நீ என்னைக் கொன்றிருக்கலாம் என்பதை சொல்லுவது போல் அந்த பறவையை நீரில் எறிகிறாள்…  ஆக இங்கு அந்தப் பறவை, அறுபட்ட மீன் இரண்டுமே நாயகிக்கான குறியீடு…


ஆண் என்பவன் அவன் பேசும் குரூரமான வார்த்தைகளால் அறியப்படுபவன்.. அதன் அடையாளமாகத் தான் அவன் தன் தொண்டைகளை அறுத்துக் கொண்டு சாக முற்படுகிறான்…. ஆனால் பெண் என்பவளோ தென் கொரியாவிலும் நம் நாட்டைப் போல பெண்ணுறுப்பால் அறியப்படுபவள் தான் போலும்… அதனால் தான் நாயகி தன் பெண்ணுறுப்பை அறுத்துக் கொண்டு சாக முற்படுகிறாள்… அங்கு அந்தப் பெண் உறுப்பு என்பது பெண்ணுக்கான குறியீடாக மாறி நிற்கிறது… நாயகன் தொடர்ச்சியாக நாயகியின் பெண்ணுறுப்பின் மீது உதைப்பது போன்ற காட்சியையும் நாம் கடந்து வருகிறோம்… அடுத்த நிமிடமே அவன் அந்த உறுப்போடு புணர்தலில் ஈடுபட்டு, அதன் முடிவில் பெருங்குரலெடுத்து அழுகிறான்…. இது அவன் பெண்ணை புரிந்து கொள்ள முடியாத தன் தோல்வியை ஒப்புக் கொள்வதாக அமைகிறது… அதுபோல் அவன் எட்டி உதைப்பதென்பது பெண்ணுறுப்பின் மீது கொண்ட கோபமாக கொள்ளக்கூடாது… அது பெண்ணின் மீதான கோபம்… பெண்ணோடு சேர்ந்தும் வாழமுடியாத… அவள் இல்லாமலும் வாழ முடியாத அவனது இயலாமையைக் குறிக்கிறது… அதுமட்டுமின்றி நாயகி நாயகனின் உயிரையே காப்பாற்றியவளாக இருந்தாலும், அவள் ஒரு வேசி என்னும் எண்ணம் நாயகனிடம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது… அதைத் தான் அவனது வார்த்தைகளும் உணர்த்துகிறது.. வேசித்தனம் செய்த மனைவியை கொன்ற அவனால் வேசியையே மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை….


இறுதியாக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன்… அதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.. நாயகன் சுற்றிலும் நீர் இருக்க… நடுவில் நிலம் போல புதர் மண்டிய பரப்பு இருக்க…. புதரை விளக்கிக் கொண்டு உள்ளே சென்று மறைந்து போகிறான்… அந்தப் புதர், சுற்றிலும் நீர் சூழ்ந்த ஒரு தீவு போல காட்சியளிக்கிறது… அடுத்த காட்சியில் படகில் நீரில் மூழ்கியவாறு நாயகியின் உடல் நிர்வாணமாக கிடக்க… அவளது பெண்ணுறுப்பு புதர்கள் அடங்கிய ஒரு நிலப்பரப்பு போல தீவு போல காட்சியளிக்க படம் முடிகிறது…. இதனை சிலர் அந்தப் பெண் இறந்துவிட்டாள் என்றும், நாயகன் அவளை கொன்றுவிட்டான் என்றும் அல்லது நாயகி தன்னைத் தானே கொன்று கொண்டாள் என்றும் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு.. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.. ஏனென்றால் மேற்சொன்ன மூன்று நிகழ்வுகளையும் கதையோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதற்கான தேவையோ… அவசியமோ கதைப்பரப்பில் இல்லை என்றே தோன்றுகிறது… ஆக அந்தக் காட்சியை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்… இந்தக் காட்சியை தனித்து புரிந்து கொள்வதை விட… சில காட்சிகளோடு சேர்ந்து புரிந்து கொள்வது இன்னும் எளிதாக இருக்கும்…


நாயகன் நாயகியின் பெண்ணுறுப்பின் மீது வன்மம் கொண்டு உதைக்கிறான் அல்லவா…? ஏற்கனவே சொன்னது போல் அது பெண்ணுறுப்பின் மீது கொண்ட கோபம் அல்ல.. பெண்ணின் மீது கொண்ட கோபம்… அந்தப் பெண்ணின் மீது வேசி என்ற முட்கள் நிரம்பிய வார்த்தைகளை அவன் வீசுகிறான்…. அடுத்த காட்சியில் அவன் வீசிய அந்த முட்கள் தான் நாயகியின் பெண்ணுறுப்பின் மீது (பெண்ணின் மீது) குத்திக் கிழித்து அவளை மரணத்தை எதிர்கொள்ள தயாராக்குகிறது… பின்பு அவன் மனம் திருந்தி அவன் எரிந்த முட்களை அவனே அகற்றுகிறான்…. ரத்தம் தோய்ந்த அந்த முட்களை பெண்ணுறுப்பில் இருந்து (பெண்ணிடம் இருந்து) அவன் அகற்றி தரையில் வைக்கும் போது கூரான அந்த முட்கள் இணைந்து அன்பிற்கான ஹார்ட்டின் வடிவமாக அது மாறுவதையும் நாம் காண்கிறோம்.. அடுத்து இருவரும் சேர்ந்து அந்த மஞ்சள் நிற படகு வீட்டுக்கு வெள்ளையடிக்கும் போது இருவரது கையிலும் தனித்து இருக்கும் அந்த ப்ரஸ் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைவதையும் காண்கிறோம்… இப்போது க்ளைமாக்ஸ் காட்சிக்கு வாருங்கள்… பெண்ணுறுப்பை பெண்ணாக உருவகப்படுத்தி அதை வன்மம் கொண்டு உதைத்தவன், அந்தப் பெண்ணுறுப்புக்குள்ளாகவே பெண்ணுக்குள்ளாகவே இரண்டறக் கலந்து தொலைந்து காணாமல் போகிறான்… இப்போதும் அது சுற்றிலும் நீர் அடங்கிய தனித்த தீவாகவே காட்சியளிக்கிறது… அந்த தீவுக்குள் அவனோ அவளோ தனித்து இல்லை… இரு உயிராக சேர்ந்து இருக்கின்றனர் என்பதே… அதே புதர் மண்டிய பரப்புக்குள் ஏற்கனவே நாயகனை ஒரு முறை அவள் அழைத்துச் சென்று பழத்தை புசிக்கக் கொடுத்ததையும் நாம் நினைவு கூற வேண்டும்… ஆக நாயகியின் எண்ணம் துயரங்களால் தனித்த தீவில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நாம், நம்மைப் போலவே துயரத்தால் பீடிக்கப்பட்டு இருக்கும் நாயகனையும் நம்மோடு நம்முடைய தீவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே… அந்தத் தேவையே, அந்த ஆசையே இறுதிக் காட்சியில் நிறைவேறுவதாக நான் பார்க்கிறேன்….

இயக்குநர் கிம் கி டுக் இயல்பாகவே ஒரு ஓவியர்.. இதில் அவர் கலை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்… அதனால் ஒவ்வொரு ப்ரேமும் மிக அற்புதமான ஓவியங்களாக காட்சியளிக்கின்றன.. அது போல் தான் படத்தின் பிண்ணனி இசையும்… பெரும்பாலும் பிண்ணனி இல்லாமல் நகரும் திரைப்படம் மிக முக்கியமான தருணங்களில் அற்புதமான பிண்ணனி இசையுடன் ஒலிக்கிறது… நாயகியாக நடித்திருக்கும் Seo Jeongன் நடிப்பு மிரட்டக் கூடிய நடிப்பு… இத்தனைக்கும் படத்தில் இவருக்கு ஒரு வசனம் கூட கிடையாது… அப்படி இருந்தும் காட்சிக்கு ஏற்றார் போல் உணர்ச்சிகளைக் கொட்டுகிற இவரது முகபாவனைகள் அற்புதமானது..

நீங்களும் திரைப்படத்தைப் பாருங்கள்… நாம் மீண்டும் விவாதிக்கலாம்…. விவாதத்துக்காக இந்த தளம் விரிந்துகிடக்கிறது…..

அடுத்தப் பதிவு

கிம் கி டுக்கின் SAMARITAN GIRL (2004)

No comments:

Post a Comment