Friday 11 October 2013

நய்யாண்டி:

களவாணி என்னும் கலகலப்பான திரைப்படத்தைக் கொடுத்து, பின்னர் வாகை சூட வா என்னும் சமூக சிந்தனையுள்ள படத்தைக் கொடுத்த இயக்குநர் சற்குணத்தை, இரண்டாம் படத்திற்கு வணிகரீதியாக கிடைக்காத வரவேற்பும், இன்றைய காலசூழலில் காமெடி திரைப்படங்களுக்கு கிடைக்கின்ற ஆகப்பெரிய வரவேற்பும் சேர்ந்து நய்யாண்டி செய்திருக்கும் போலும். பெரிதும் குழப்பிப் போன இயக்குநர், நல்லப் பெயர், நல்ல திரைப்படம் போன்றவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு வணிகரீதியிலான வெற்றி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, நய்யாண்டியில் காமெடி களப்பணி ஆற்றுவோம் என்று களமிறங்கி இருக்கிறார். ஆனால் பாவம், இயக்குநருக்கு, காமெடி சுத்தமாய் கைகொடுக்கவில்லை..


ஒரு நல்ல திரைக்கதை என்பது, இரண்டே காட்சிகளில் பார்வையாளனை தனக்குள் இழுத்துக் கொள்வதற்கான திறப்பைக் கொண்டிருக்க வேண்டும். அந்த திறப்பின் வழியே இருள் சூழ்ந்த மாயவெளிக்குள் நுழைகின்ற அவன் கதை என்னும் சரடின் சிறு ஒளியின் துணையோடு, தான் பார்த்திராத, பயணிக்காத, தான் மறந்து போன அல்லது தனக்கு மறக்கடிக்கப்பட்ட ஒரு உலகிற்குள் பயணிக்கத் தொடங்குவான். பல இடங்களில் முட்டி மோதி, எதிர்பாராத இடங்களில் அதிசயித்து, ஆச்சர்யப்பட்டு, ஆனந்தப்பட்டு அதிர்ந்து போய், குற்ற உணர்வால் சுருங்கிப் போய், இப்படி ஏதேனும் ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு, தனக்குப் பரிச்சயமில்லாத இருள்வெளியில் அவனது கண்கள் அந்த இருளுக்குப் பழக்கப்படத் தொடங்கும்… அவன் கண்களுக்கு அந்த இருள் சூழ்ந்த கதையின் கண்ணிகள் புலப்படத் தொடங்கும் பட்சத்தில் அவனை ஒளிபாயும் புறவெளியில் தள்ளி திரைக்கதை அவனை வழியனுப்ப வேண்டும்… இப்போது அவனது மனம் கண்கூசும் ஒளியில் கூட இருள் சூழ்ந்த வாழ்க்கையை எண்ணத் தொடங்கி இருக்கும்… இது நல்ல திரைக்கதை எழுதுவதற்கான ஒரு பொதுவிதி…

ஆனால் நய்யாண்டி போன்ற திரைப்படங்களில் கதைக்கே பதினெட்டாம் நூற்றாண்டு பஞ்சம் பீடித்திருக்கும் துயரநிலையில் நாம் திரைக்கதை நுட்பங்களை அலசுவதென்பது அவர்களை நையாண்டி செய்வது போல் இருக்கும்.. இந்த பஞ்சகாலத்திலும் இவர்கள் எடுத்திருக்கும் கதை என்னவென்று பார்த்தால், பல் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்ணை (நாயகி நஸ்ரியா), என்ன செய்கிறார் என்பதையே சொல்லிக்கொள்ளாத அல்லது இயக்குநர் சொல்லிக் கொள்ள விரும்பாத ஒரு கதாபாத்திரம் காதலிக்கிறது… அப்படியென்றால் அது கண்டிப்பாக நாயகனாகதானே இருக்க வேண்டும்.. நாயகன் தான் காதலித்துவிட்டாரே, அவர் என்ன வேலை செய்கிறார்…? என்று ஒரு பேச்சுக்கு கூட கேட்காமல் அவர்களை இரண்டு முறை முறைத்துவிட்டு மூன்றாம் முறை பார்க்கும் போது காதலிப்பதற்காகவே சபிக்கப்பட்டு இருக்கும் நாயகியும் வழக்கம் போல் காதலிக்கத் தொடங்குகிறார்… இதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்ட இயக்குநர் வில்லனை அறிமுகப்படுத்துகிறார்.. வில்லனும் அதே பெண்ணுக்கு நூல் விட்டால் தானே சுவாரஸ்யம்.. அவர் பெண்ணின் தகப்பன் சம்மதத்துடன் கல்யாணமே பேசிவிட… அச்சச்சோ இன்னும் சுவாரஸ்யம் இல்லையே என்று உணர்ந்த இயக்குநர் வேறொரு முடிச்சையும் போடுகிறார்… நாயகனுக்கு 40 வயதாகியும் கல்யாணமாகாத இரண்டு அண்ணன்கள்… அவர்களுக்கு கல்யாணம் ஆனால்தான்… நாயகன் கல்யாணம் செய்யமுடியும் என்று ஒரு அற்புதமான சுவாரஸ்யத்தையும் சேர்த்து கதை பண்ணியிருக்கிறார்கள்…


இப்படிப்பட்ட ஒரு கதையில் எதுதான் பார்வையாளனை கவரும்… எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும், அவளை நாயகனின் மனைவியாக மட்டுமே பார்க்கும் அக்மார்க் நண்பர்களும், தான் டாக்டருக்கு படித்திருந்தாலும், என்ன செய்கிறான், என்ன படித்திருக்கிறான் என்று எதுவுமே தெரியாவிட்டாலும் அவனை உருகி உருகி காதலிக்கும் மறை கலன்ற நாயகிகளும், நாயகனிடம் அடி வாங்குவதற்கென்றே சிக்ஸ்-பேக் உடம்பை வளர்த்துக் கொண்டு வரும் வில்லன்களும், கல்யாணத்துக்குப் பின்னரும் பொறுப்பாக நடந்து கொள்வதென்பதை நாயகியை கருவுறச் செய்வதில் மட்டுமே காட்டும் நாயகனையும், இவ்வளவு நடந்தாலும், எதுவுமே நடக்காதது போல், இறுதிக் காட்சியில் கூட்டமாய் வந்து அரவணைக்கும் குடும்பத்தையும் காலம் காலமாக காட்டி நம் தமிழ் சினிமா நமக்கு என்னதான் சொல்ல முயற்சிக்கிறது….

நண்பர்களுக்கு இடையிலான காட்சிகள், காதலர்களுக்கு இடையேயான காட்சிகள், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான காட்சிகள் என்று எதிலுமே சொல்லிக் கொள்ளும்படி ஒரு காட்சிகூட அமையாமல் போனது இவர்களின் கற்பனை வறட்சியை காட்டுகிறது… பின்புலங்களில் பழைய பாடல்களை சூழ்நிலைக்கு ஏற்ப பாடவிடுவதை, வாரத்துக்கு ஒரு முறை விகடனே "இந்தப் பாட்டை இவர்களுக்கு டெடிகேட் செய்கிறோம்னு போடும் போது, படம் எடுத்து இவர்களுமா நையாண்டி செய்ய வேண்டும்… திரையில் அழகிய நஸ்ரியாவே இருக்கும் போதும் அவருக்கு முதுகைக் காட்டி திரும்பிக்கொள்ளும் அதிசயிக்கத்தக்க சூழலை உருவாக்கியது மட்டுமே இப்படத்தின் வெற்றி..



இப்படி குறைகளையே சொல்லிக் கொண்டு இருக்க எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய பாராட்ட எந்த தரப்பிலும் எந்த விசயமும் இல்லையே.. வேண்டுமென்றால் டாஸ்மாக் காட்சிகள் இல்லாத காரணத்துக்காகவும், இந்த திரைப்படம் ஒரு மலையாள திரைப்படத்தின் தாக்கத்தால் உருவானது என்ற உண்மையை டைட்டில் கார்ட்டில் பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டதற்காகவும், இந்த இரு காரணங்களுக்காக மட்டும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. அது தவிர்த்து தனுஷ், நஸ்ரியா, சற்குணம், ஜிப்ரான், நரேன், சிங்கம் புலி என அனைவருக்குமே அவர்களது கேரியரில் மிகப்பெரிய சறுக்கலாக இருக்கும் இந்தப் படம்… சற்குணம் அவர்கள் தங்கள் பாதையில் இருந்து விலகி, காமெடிப் படம் என இது போன்ற விபரீத முயற்சிகள் எடுக்காமல், வாகை சூட வா போன்ற ஓடாத நல்ல திரைப்படங்களை எடுத்தால், நல்ல இயக்குநர் என்ற பேராவது மிஞ்சும் என்பது என் எண்ணம்.

Tuesday 8 October 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா:

சினிமா தவிர்த்த பிற தொழில்களில் இயங்குபவர்களுக்கு சமூகத்தின் மீதான தார்மீகப் பொறுப்பு இருக்க வேண்டுமா என்று எனக்குச் சொல்லத் தெரியாது.. ஆனால் குறிப்பாக சினிமா இயக்குநர்களுக்கு அது ஓரளவேனும் இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அந்த தார்மீகப் பொறுப்பு கொண்டு இயங்கக்கூடிய இயக்குநர்களில் கோகுலும் ஒருவர் என்பது என் கணிப்பு. ஒரு இயக்குநரின் முதல் படத்தைப் பார்க்கும் போது நம்மால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும். இந்த இயக்குநரின் தேவை என்னவாக இருக்கிறது, பணமா, புகழா, தன்னை நிருபிக்க வேண்டும் என்ற ஆர்வமா..? இல்லை நல்ல படத்தை சமூகத்துக்கு கொடுத்திருக்கிறேன் என்கின்ற மன நிறைவா…? என்பதை. இயக்குநர் கோகுலின் முதல்படமான ”ரெளத்திரம்” ஒரு சராசரி படமாகவே இருந்தாலும் அதில் அவர் சொல்ல வந்த விசயம், அவரது பொறுப்புணர்ச்சியை ஓரளவுக்காவது புரிய வழிவகை செய்தது… ஆனாலும் தமிழ் சினிமா வணிகச் சந்தையில் விலை போகாமல் ரெளத்திரம் முடங்கிப் போனதால், வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிர்பந்தத்தில் தன் கொள்கை முடிவுகளை தளர்த்திக் கொண்டு, தன்னை வெகுஜன மக்களுக்கு பிடித்தவனாக மாற்றிக் கொண்டு நீ, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்று நம்மைப் பார்த்து கேட்பதைப் போல் தன் இரண்டாம் படத்துடன் களம் இறங்கி இருக்கிறார் கோகுல்..


“நாய் வாலை நிமிர்த்த முடியுமா..?” என்னதான் தன் கொள்கைப் பிடிப்பில் இருந்து இறங்கி வெகுஜன படங்களை நோக்கி இயக்குநர் வந்திருந்தாலும், இன்னும் அவரது கொள்கைகளை முற்றாக தளரவிட முடியவில்லை போலும்.. இதிலும் “say no to drinks” என்னும் ஒரு முக்கியமான சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தையே தாங்கி வந்திருக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் ஒரு பெண் தன் காதலன் குடிக்கமாட்டான் என்று சொல்வதை ஒரு க்ரிடிட்டாக கருதாமல், தகுதி குறைபாடாக கருதும் நாகரீக கலியுகத்தில், தன் காதலனின் பிறந்தநாளுக்கு பீர் பாட்டிலையே பரிசளிக்கும் பண்பாட்டு கலாசார காலத்தில், இப்படி ஒரு மோசமான கருத்தை சொல்கிறாயே, அதை நான் கேட்கக்கூட மாட்டேன் என்று காதுகளைப் பொத்திக்கொள்ளும் நம் போன்ற குரங்கு கூட்டம், படம் தொடங்குவதற்கு முன்பு வரும் முகேஷைப் பார்த்தால் முகம் சுளிப்பதைப் போல் படத்தின் பெரும்பாலான இடங்களில் தங்கள் முகம் சுழித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி. எதிர்வீட்டில் குடியிருக்கும் குமுதாவை (நந்திதா) காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டு டார்ச்சர் செய்ய.. அது அண்ணாச்சியான பசுபதியிடம் பஞ்சாயத்துக்கு வருகிறது… பஞ்சாயத்தின் பின்புலத்தில் சுமார் மூஞ்சி குமாரின் காதல் எபிசோடின் முன்கதை விரிகிறது.. வழக்கமான காரணமே இல்லாத ஒரு காதல்…. வழக்கத்துக்கு மாறாக காதலனை வெறுக்கும் நாயகி… அந்த ஒன்லைன் மட்டுமே சற்று சுவாரஸ்யம்… பஞ்சாயத்தில் பசுபதியின் தீர்ப்பு என்ன என்பதையும் அதனால் இவர்கள் வாழ்க்கை எப்படி மாறியது என்பதும் மீதிக்கதை…


இரண்டாவது ஹீரோ பாலாவாக அஸ்வின். மார்க்கெட்டிங்க் ஊழியர்.. இவருக்கு மேனேஜராக எம்.எஸ்.பாஸ்கர். எப்போதும் அஸ்வினை கொண்டு கேரம் பால் ஆடுபவர்.. இதுபோக அவரது காதலியாக க்யூட் சுவாதி.. இவர்களது காதலுக்கு மிகப்பெரிய எதிரியே அஸ்வினின் குடிப்பழக்கமும், அளவுக்கு அதிகமாக அவர் பேசும் பொய்யும் தான்… இந்த குடிப்பழக்கத்தால் அஸ்வின் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள… அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்ததா…? அல்லது பெரும்பிரச்சனையாக மாறியதா..? என்பது மீதிக்கதை


மூன்றாவது கதையாக நான் கடவுள் ராஜேந்திரனும், அவரது நண்பரும் சேர்ந்து பாரில் செய்கின்ற கொலை வருகிறது… அந்தக் கொலையை அவர்கள் ஏன் செய்தார்கள்…? அதன் பிண்ணனி என்ன..? அதன் முடிவு என்ன ஆனது என்பது மீதிக்கதை…

இப்படி சம்பந்தமே இல்லாத மூன்று கதைகளை வலுக்கட்டாயமாக ஒரு மையப் புள்ளியில் பிணைக்க முயன்றிருக்கிறார்கள்.. அதனால் தானோ என்னவோ திரைக்கதை ஒரு தெளிவு இல்லாமல் தாறுமாறாக அங்கும் இங்குமாக பயணிக்கிறது… Possibility யோட பொருந்தாமல் Probability யோடு பொருந்தக்கூடிய கதை… நல்ல கருத்துள்ள படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்ற இயக்குநர்கள் ஏனோ நல்ல திரைக்கதை அமைப்பதில் தடுமாறிவிடுகின்றனர்.. மேலும் படம் முழுவதும் இதை சீரியஸான படமாக கொடுப்பதா…? இல்லை காமெடிப் படமாகக் கொடுப்பதா…? என்னும் குழப்பம் நிலவியது போல் தெரிகிறது.. மேலும் ஒரு அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்த வேண்டிய காட்சிகள் எல்லாம் காமெடியால் வீரியம் இழந்து போவதால், குடி தொடர்பாகச் சொல்ல வந்த நல்ல விசயத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் பலர் அதையும் காமெடியாக எடுத்துக் கொண்டு தியேட்டரை விட்டுச் வெளியேறுகின்றனர்…


தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற பயத்தோடு படம் செய்திருக்கிறார்கள் என்பதை கதாபாத்திர தேர்வுகள் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது. விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, மேடைப் பேச்சாளர் ராஜா, ரோபோ சங்கர், லிவிங்க்ஸ்டன், சூரி, அஸ்வின், சுவாதி, எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், இது போக அந்த அயிட்டம் கேர்ள், ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு, அந்த மலையாளப் பெண் என்று ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம்… ஆனால் இந்த கதாபாத்திரங்களில் ஒன்று கூட சீரியஸ் கதாபாத்திரம் இல்லை… எல்லோருமே ப்ரேம்களில் காமெடி செய்து கொண்டே இருக்கிறார்கள்..

ஆனாலும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது கோகுல்-கார்க்கி கூட்டணியில் எழுதப்பட்ட சில சிறப்பான ஒன் – லைனர் வசனங்களும்… விஜய் சேதுபதி, பசுபதி மற்றும் சில துணை கதாபாத்திரங்களின் அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பும் தான்… அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி அலட்டிக் கொள்ளாமல் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்… பஞ்சாயத்து காட்சியில் மிகத் தெனாவெட்டாக பசுபதி முன்னால் உட்காருவதும், அவரையே காக்கா பிடிக்க முயலுவதும், ஒவ்வொரு ப்ளாஷ்பேக் முடிவிலும் ” ஆனா குமுதா ஹேப்பி அண்ணாச்சி…” என்று பசுபதியை குழப்பி சூடேற்றுவதுமாக மிக வித்தியாசமான சளைக்காத நடிப்பு… வாழ்த்துக்கள்..


இவருக்கு அதகளப் போட்டியாக மிரட்டி இருப்பது, பசுபதி தான்… சர்க்கரை நோயாளி தாதாவாக விரல் நடுங்க பேசுவதும், அந்த நடுக்கத்துக்கு நடுவிலும் விஜய் சேதுபதியை அதட்டி நடுங்க வைப்பதும், அந்தரங்க போட்டோவைப் பார்க்கப் போகும் ஆவலில் எச்சில் விழுங்குவதும், “இரண்டு வரி பாடுவான்னு நினைச்சா… முழு பாட்டு பாடுறாண்டா அவன்…” என்று பாடல்களையும் பகடி செய்து எகிறுவதும், தன்னை மளிகை கடை அண்ணாச்சி என்று விளித்ததை எண்ணி அசடு வழிந்து அந்த வார்த்தையை சொல்ல தயங்குவதுமாக தகிடுதத்தம் நடிப்பு… வெளுத்து வாங்கி இருக்கிறார் பசுபதி..

நந்திதாவுக்கும், சுவாதிக்கும் வழக்கமான நாயகர்களை காதலிக்கும் தொழில் முறை நடிப்புதான்.. புதிதாக சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.. ஆனால் அதிலும் விஜய் நந்திதா காதலை விட, சுவாதி அஸ்வின் காதலின் இணக்கமும், சுணக்கமும் வெகுவாக நம்மை கவர்கிறது. இவர்களை தவிர்த்துப் பார்த்தால் ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக வரும் நண்பரின் உடல்மொழியும் டயலாக் டெலிவரியும் க்ளாஸ்… ”ப்ரெண்டு.. லவ் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ல… குவார்ட்டர் அடிச்சா.. கூல் ஆய்டுவாப்ல..” என்று அதே டயலாக்கை ரீப்பிட் அடித்தே ஸ்கோர் செய்கிறார்.. மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பும் சூப்பர்.. அஸ்வினைக் கரித்துக் கொட்டுவதும், பின்பு வெடித்து கரிசனம் காட்டுவதுமாக மிக யதார்த்தமான நடிப்பு… இது தவிர்த்து ரோபோ சங்கரும், நான் கடவுள் ராஜேந்திரனும் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றனர்…

மகேஷ் முத்துச்சாமியின் கேமரா கதைக்கு தேவையானதை செவ்வனே செய்திருக்கிறது… சித்தார்த் விபினின் பாடல்களும் பிண்ணனி இசையும் சுமார் ரகம்… மொத்தத்தில் ஒரு சீரியஸான படமாகவும் இல்லாமல், முழுக்க முழுக்க காமெடி படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் நின்று முழித்தாலும், பசுபதி, சேதுபதி போன்ற சில தனிப்பட்ட ஆளுமைகளின் நடிப்பாலும், தவறான எண்டர்டெயினராக இல்லாமல், தகுதியான எண்டர்டெயினராக இருப்பதால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் என்ற தகுதியைப் பெற்றுவிடுகிறான் இந்த பாலகுமாரன்…
“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…”

Monday 7 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:

தமிழ் சினிமாவின் வரலாறு நூறாண்டுகளை கடந்திருந்தாலும், இதுவரை தமிழ் சினிமா நூற்றுக்கும் மேலான கேங்க்ஸ்டர் வகையறா படங்களை எடுத்திருந்தாலும், அதில் எந்த ஒரு படத்தின் சாயலும் துளிகூட இல்லாமல், அத்தனை கேங்க்ஸ்டர் திரைப்படத்தில் இருந்தும், எல்லாவிதங்களிலும் மேலான ஒரு அற்புதமான த்ரில்லர் - கேங்க்ஸ்டர் வகை திரைப்படத்தை நம் தமிழ் சினிமாவும் நம் தமிழ் இனமும் இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெளியான அந்த காலை பொழுதின் விடியல் வரை பார்த்ததேயில்லை என்று உறுதியாகச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை….


இரண்டரை மணி நேர கேங்க்ஸ்டர் படங்களில் என்ன இருக்கும்… பெரும்பாலும் இரண்டு கேங்குகளுக்கு இடையில் பிரச்சனை இருக்கும், அதில் நாயகன் இருக்கின்ற கேங்க் இறுதியில் ஜெயிக்கும் அல்லது நல்லவனான கதாநாயகன் தன் மக்களுக்கு ஏற்படும் அநீதிகளைக் கண்டு பொங்கி, கெட்டவனாக அவதாரம் எடுத்து மக்களைக் காப்பான்.. அதுவும் இல்லை என்றால் தன் கேங்குக்குள்ளேயே நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்டு தன் தலைவனையே எதிர்த்து தலையெடுக்கும் நாயகன்… பின்பு தலைவனின் தலையையும் எடுத்து வெற்றிவாகை சூடுவான்… இதில் ஏதோ ஒன்று தானே நாம் பார்த்த எல்லா கேங்க்ஸ்டர் திரைப்படங்களின் சலிப்பூட்டும் வெறுப்பேற்றும் அதர பழசான கதை… இந்த மொத்தக்கதையையும் இரண்டரை நிமிடங்களில் உணர்ச்சி பிழம்பூட்டும் வெறும் வசனங்களாலேயே கடந்து சென்று மீதி இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்களில் வேறு ஏதேனும் கதை கூற முடியுமா என்று சவாலாக கேள்வி கேட்டால் பெரும்பாலான இயக்குநர்கள் நம்மை முட்டாள்கள் என்று பழித்துவிட்டு, ஓட்டம் எடுப்பார்கள்… அப்படி ஓட்டம் எடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் அந்த சவாலை தானாக முன்வந்து எடுத்து அதில் ஒரு அதிரடி ஆட்டம் ஆடி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்… உண்மையான கலை தாகம் கொண்ட கலைஞர்களுக்கு மட்டுமே இந்த வெற்றி சாத்தியப்படும்..

கதையென்னவென்று சொல்ல…? மேற்சொன்ன வெவ்வேறு விதமான கதைசரடுகளில் ஒன்றுதான் இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியின் கதையும் கூட.. ஆனாலும் ஏற்கனவே சொன்னது போல அது இரண்டரை நிமிடங்களில் பாரதியாக வரும் சிறுமி சைத்தன்யாவுக்கு சொல்லும் கதையாக நம்மை கடந்து செல்லும்… அதை தவிர்த்த மீதி நிமிடங்களில் என்ன இருக்கிறது என்று கேட்டால்… நிறைய அதிர்ச்சிகள், நிறைய ஆச்சர்யங்கள், நிறைய கேள்விகள், நிறைய அழகியல், சீர்மையான சிரிப்பழைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்… அதனோடு மிஷ்கின், ஸ்ரீ, இசை விமர்சகர் ஷாஜி, சிறுமி சைத்தன்யா, தோழி க்ளாடி இவர்களின் உறுத்தல் இல்லாத நடிப்பும், இசையானி இளையராஜாவின் அற்புதமான பிண்ணனி இசையும், ஒளிப்பதிவாளர் பாலாஜியின் அற்புதமான ஷாட்களும் சேர்ந்து ஒரு வித்தியாசமான காண்பனுபவத்தைக் கொடுக்கின்றன.. மொத்தத்தில் உங்களுக்கு ஒரு நிமிடம் கூட போரடிக்காது என்பதை மட்டும் என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும்…


காட்சி மொழி என்று சொல்லக்கூடிய திரைமொழியை வெகு நேர்த்தியாக கையாளக்கூடிய வெகுசில தமிழ் இயக்குநர்களில் மிகமிக முக்கியமானவர் மிஷ்கின். அவரது முந்தையப் படங்களில் (முகமூடி தவிர்த்து) அதிலும் குறிப்பாக யுத்தம் செய், நந்தலாலா போன்றவற்றில் சில பரீட்சார்த்தமான திரைமொழி தொடர்பான முயற்சிகள் இருக்கும். அது இந்த திரைப்படத்தில் அதன் உச்சத்தை தொட்டிருக்கிறது எனச் சொல்லலாம்.. அதற்கு உதாரணமாக ஸ்ரீயை மிஷ்கின் கோவில் வாசலில் படுத்திருக்கும் பிச்சைக்காரிக்கு பிச்சை போட அனுப்பும் காட்சி.. அந்த காட்சியில் பலரின் உடல்மொழிக்கு ஊடாக ஒரே ஒரு வார்த்தைமொழி மட்டுமே வரும்.. அது அந்த கோயில் வாசலில் படுத்திருக்கும் அம்மா சொல்லும் ”எட்வர்டு” என்னும் வார்த்தை… அந்த வார்த்தை சொல்லப்படும் தருணத்திலேயே பார்வையாளர்கள் அந்த சூழ்நிலையை புரிந்து கொள்வார்கள்… அந்தக் காட்சியை தொடர்ந்து ஓரிரு வரிகளில் வசனங்கள் வரும் அவ்வளவே… அதுபோல அந்த போலீஸ் ஜீப்பை மிஷ்கின் கைப்பற்றும் காட்சியை மற்றொரு உதாரணமாக கூறலாம்..


இந்த திரைப்படம் மிகமுக்கியமாக கேங்க்ஸ்டர் என்னும் வலைபின்னலில் இயங்குபவர்களின் முன்னால் பல கேள்விகளை வைக்கிறது…? பொது மக்களான நம் முன்னாலும் சில கேள்விகளை வைக்கிறது…? கேங்க்ஸ்டர்கள் முன்னால் அது எழுப்புகின்ற கேள்வி இதுவாகத்தான் இருக்கும்… நீ எதை வெற்றி…? எதை வீரம்..? எதை திறமை…? எதை சந்தோசம்…? எதை கடினம்..? என்று எண்ணிக் கொண்டு இருக்கிறாய்….? ஒருவனின் உயிரை எடுப்பதையா..? என்னும் கேள்வியைத்தான்… அதற்கான பதிலும் திரைப்படத்தில் உண்டு. இல்லை நண்பா… நான்(மிஷ்கின்) 14 கொலைகளை செய்தவன்.. அது எனக்கு கடினமாகப்படவில்லை… ஆனால் மூன்று உயிர்களை காப்பாற்றி கரை சேர்ப்பது எவ்வளவு கடினம்… அது எவ்வளவு வீரமான செயல்… அது எவ்வளவு மகிழ்ச்சி தரும் செயல்… எவ்வளவு திறமையான செயல் என்பதை உணர்ந்துகொண்டேன் என்பதை படம் சொல்லாமல் சொல்கிறது..

நம் முன் அதாவது நம் சமூகத்தின் முன் அது வைக்கும் கேள்வி மீண்டும் நமது சட்டம், குற்றம், தண்டனை போன்ற இத்யாதிகளை மறு ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்துகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரமான வுல்ஃப் (மிஷ்கின்) ஒரு கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரன்.. அவன் இதுவரை செய்த கொலை 14. அந்த 14 கொலைகளை செய்ய அனுமதித்த (அல்லது அதுவரை காத்திருந்த) நம் சமூகம் மூன்று உயிர்களை காப்பாற்ற அவனை அநுமதிப்பதில்லை…(அல்லது அதுவரை காத்திருப்பதில்லை..) மேலும் ஓநாயாக சித்தரிக்கப்படும் அந்த கொலைகாரனை பிடிக்க நம் சமூகம் தெரிந்தே ஒரு ஆட்டுக்குட்டியை(ஸ்ரீ) பலி கொடுக்கவும் துணிகிறது.. ஆனால் அந்த ஓநாயோ தான் நரி என்று நினைத்து தெரியாமல் கொன்ற ஒரு ஆட்டுக்குட்டியின் இழப்புக்கு ஈடாக மூன்று ஆட்டுக்குட்டிகளை காப்பாற்ற முயற்சிக்கிறது… இங்கு யார் குற்றவாளி…?


வுல்ஃப் செய்த 14 கொலைகளில் மிக முக்கியமானதாக நான் கருதுவது அந்த ஆட்டுக்குட்டியின் கொலையை தான். ஏனென்றால் அது கதையின் ஆரம்பப்புள்ளி. பிற கொலைகள் நமக்கு சொல்லப்படுவதுமில்லை.. காட்டப்படுவதில்லை.. எனவே அந்த ஒற்றை கொலை சார்ந்தே நானும் பேச முனைகிறேன்.. தன் மகனைக் கொன்ற கொலைகாரனை மன்னித்து அவனைத் தன் இரண்டாவது மகனாகவே ஏற்றுக் கொண்டு, தன் அத்தியாவசிய செய்கையான சிறுநீர் கழிப்பதைக் கூட அந்த இரண்டாவது மகனின் தயவில் செய்து முடிக்கும் அளவுக்கு அவனை நம்புகின்ற ஒரு தாயும் அவளது குடும்பமும், அவனது நிழலில் வாழ முனையும் போது அந்த இரண்டாது மகனையும் இழந்தால் அது யாருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை… நாம் அந்த குற்றவாளிக்கு தண்டனை என்ற பெயரில் கொடுக்க விளைவது என்ன…? இரட்டை ஆயுள் தண்டனை. அதை முடித்து நீ வெளியில் வந்தால் திருந்தி நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்னும் பாசாங்கு பிரச்சாரம் வேறு செய்கிறோம்… இங்கு குற்றத்தால் பாதிக்கப்பட்ட அந்த குடும்பமே அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் போது அவனை தண்டிக்க சட்டம் என்ற பெயரில் கதாயுதமும் கையுமாக அலையும் நாம் யார்….? இந்த விசயத்தை இங்கு வுல்ஃப் என்னும் கதாபாத்திரத்தை மட்டுமே கொண்டு பார்க்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்…

நண்பர்களே பொதுவாக இது போன்ற திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளுமே ஏதேனும் ஒரு கருத்தை தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது.. துரதிஷ்டவசமாக நம் எல்லோருக்கும் ஒரு நல்ல திரைப்படத்தை எப்படி பார்ப்பது என்பது கற்றுக் கொடுக்கப்படுவதே இல்லை… அதைக் கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று நீங்கள் கேட்டால்… அது வாழ்க்கையில் நாம் காணாத பல்வேறு தளங்களை பல்வேறு கோணங்களில் நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பதே என் பதிலாக இருக்கும்.. மசாலாப் படங்களை தவிர்த்துவிட்டு இதுபோன்ற படங்களின் ஒரு காட்சியை எடுத்துக் கொண்டு அது ஏன் அப்படி சித்தரிக்கப்பட்டது…?, அந்தக் காட்சி ஏன் அந்த சூழலில் படமாக்கப்பட்டது..? அது என்ன சொல்ல வருகிறது..? என்று நாம் கேள்வி கேட்கும் பொழுது…. வாழ்க்கை நமக்குத் தெரியாமல் தன் மீது போட்டுக்கொண்ட ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்த்துக் கொண்டே அம்மண அழகுடன் நமக்கு தரிசனம் தரும்… இந்த இடிபாடுகளும் நெருக்கடியும் நிறைந்த வாழ்க்கையில் வாழ்க்கையை கற்றுக்கொள்வதை விட எதைக் கற்றுக் கொள்வது அவசியம் அத்தியாவசியம் என்று எண்ணுகிறோம் தோழர்களே…!?

உதாரணமாக இந்தப் படத்தில் அவர்கள் குழுமி இருக்கும் இடம் ஏன் ஒரு கல்லறையாக இருக்க வேண்டும்..? ஸ்ரீ தன் முதுகில் ஏன் மிஷ்கினை சுமந்து செல்ல வேண்டும்…? இறுதியில் அந்த சைத்தன்யா குழந்தையை ஏன் தன் நெஞ்சில் சுமந்து கொண்டு செல்ல வேண்டும்…? அவர்கள் ஏன் கண் பார்வை அற்றவர்களாக இருக்க வேண்டும்..? ஒரு கொலையாளி தன் கையில் ஏன் பைபிளை வைத்திருக்க வேண்டும்..? ஒவ்வொரு போலீசாரும் இறக்கும் போது ஏன் ஒவ்வொரு கடவுளின் பெயரை கூறிக் கொண்டு சாக வேண்டும்..? மிஷ்கின் ஏன் அந்த தாயின் கால்களை முடமாக்கிய கதாபாத்திரமாக சித்தரித்தார்…? அவரை சில காட்சிகளில் ஏன் அவர் தன் முதுகில் தூக்கி சுமக்கிறார்..? இப்படி எல்லா காட்சிகளையும் பெரும்பாலும் ஒரு உண்மையான கலைஞன் எந்தவித காரணமும் இன்றி வைப்பதில்லை… அதற்குள் ஒரு செய்தியை மறைத்து வைக்கிறான்.. அதை மறைத்து வைப்பது நமக்குப் புரியக்கூடாது என்ற எண்ணம் அல்ல… அதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தான் அதை அவன் அடிகோடிட்டு காட்டுகிறான்… அதை ஒரு விடுகதையாக நம் முன் வைத்துவிட்டு செல்கிறான்… வாழ்க்கையும் ஒரு விடுகதைதானே…? அதன் மர்மம் நிறைந்த முடிச்சுகளை நாம் அவிழ்க்கத்தானே வேண்டும்… இந்த நூற்றாண்டில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாக நிற்கப் போவதில் இலக்கியங்களும், திரைப்படங்களும் மிக முக்கியமானவை… ஆனால் அவை எந்த அளவுக்கு யதார்த்தமானதாக உண்மையானதாக இருக்க வேண்டும் என்பதையும் அதன் தரத்தையும் நாம்தான் தீர்மானிக்கிறோம்.. என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்…

இது குறைகளே இல்லாத ஒரு அற்புதமான படைப்பு என்று நான் சொல்லவில்லை. சில குறைகள் இருக்கின்றன. படத்தில் முதல்பாதியில் எந்த கதாபாத்திரத்தின் மீதும் பிடிப்பு இல்லாமல் செல்வதும், ஸ்ரீயை போன் செய்து வரவழைக்கும் தேவை இல்லாமல் இருப்பதும் அதில் மிக முக்கியமானவை.. ஆனால் அதை பொருட்படுத்த தேவையில்லை என்கிறேன்… ஏனென்றால் அதைப் பொருட்படுத்தி பூதாகரமாக மாற்றினால் இது போன்ற நல்ல முயற்சிகள் வராமலே போய்விடும்… மேலும் இது சமூகத்தை சிதைக்கும் எந்த ஒரு தீமையான கருத்துக்களையும் விதைக்கவில்லை… அப்படி விதைக்கின்ற படங்களையே நாம் வெற்றிவிழா கொண்டாட வைக்கும் போது, இது போன்ற அத்திபூத்தாற் போல் வரும் சில முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்க மாட்டோம் என்று நம்புகிறேன்… அப்படியின்றி இதன் வளர்ச்சியை நாம் தடுத்தால் தமிழ்சினிமா காலத்துக்கும் தமிழர்கள் மட்டுமே பார்க்கும் ஒரு சினிமாவாக இருக்கும் என்பது திண்ணம்…