Tuesday 17 September 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்:

தமிழ் சினிமாவின் வியாபாரத்திற்கு தற்போதைய நிலையில் அதிக அளவில் ஊட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் படம். வசூல் பட்டையை கிளப்புவதாக விநியோகஸ்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, ஆடியன்ஸும் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வந்த குவிந்து கொண்டிருப்பதைப் பார்த்து மிகுந்த ஆர்வமாக அப்படியென்னதான் இந்தப் படத்தில் புதுமையாக இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்று தியேட்டரில் சென்று பார்த்தால், சலித்தெடுத்த அதே பழைய கதை, அதில் சற்றே சுவாரஸ்யமான ஆனால் முழுக்க முழுக்க நம்பகத்தன்மையே இல்லாத ஒரு திரைக்கதை, அதில் அது இது எது வில் சிவகார்த்திகேயனின் டைமிங்க் காமெடிகளுக்கு நடுவே வந்து சிலர் கதை சொல்வதைப் போல் இங்கும் கதை சொல்கிறார்கள். கடைசியில் பெற்றவர்கள் எல்லாரும் நல்லவங்கதா… ஊர்ல நாலு பேர் தப்பா பேசுவாங்கன்னு பயந்துதா.. காதல எதுக்குறாங்கன்னு.. கருத்து சொல்லி முடிக்கிறாங்க…. இப்படி எந்தவிதத்திலும் புதுமையாக இல்லாத ஒரு திரைப்படத்தை ஆகா ஓஹோ என்று கொண்டாடி வசூல் மழை பொழியச் செய்யும் இந்த ஆடியன்ஸை பார்ப்பதுதான் நம் நாட்டில் புதுமை போலும்..


சிவணாண்டி என்று ஊர் பெரியவராக சத்தியராஜ், மூன்று பெண்களைப் பெத்திட்டு கவலைப்படாம சிரிக்கிறாயே… ஏதாது பொண்ணு காதலிச்சி ஓடிப் போயிருச்சின்னா.. என்னய்யா பண்ணுவே..? என்று கேட்டதற்காகவே அவனின் காதை அறுத்துவிடும் இவருக்கு, எம்.ஏ எம்.பில் படித்துவிட்டு, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைத் தொடங்கி, அங்கு காதல் பணி ஆற்றிக் கொண்டிருக்கும் பொறுப்புமிக்க போஸ் பாண்டி என்னும் சிறியவர் சிலபல காதல் தோல்விகளுக்குப் பிறகு தனது பெண்ணை காதலித்து ஓடிப் போகும் தருணத்தில் அவர்களை சிரித்துக் கொண்டே சேர்த்து வைக்கும் படு சீரியஸான கதாபாத்திரம், அவரது மனமாறுதலுக்கு காரணம், ”கிணத்துக்குள்ள விழுந்த பசுமாட்டையே காப்பாத்திட்ட… இந்த பசுமாட்ட(திவ்யா) காப்பாத்த மாட்டியா” என்பதுதான்..


வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவராக, ஊர் சிறியவர் போஸ் பாண்டியாக சிவகார்த்திகேயன். இவர் ஏன் எம்.ஏ எம்.பில் படித்தார்..? தெரியாது, ஏன் வேலைக்கு போகவில்லை…? தெரியாது ஏன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்குகிறார்..? தெரியாது. போலீஸ்காரர், ஊரில் ஆற்று மண் கடத்துபவர்கள், ஊர் பெரியவர் என எல்லோரையும் பிரச்சனையில் மாட்டிவிடும் இவரை ஏன் எவரும் கண்டு கொள்வதே இல்லை..? தெரியாது.. இப்படி பல தெரியாதுகளுக்கு இடையில் தெரிவது இவரது வழக்கமான அக்மார்க் டைமிங்க் காமெடி மட்டுமே… இப்படி பல தெரியாதுகளுக்கு இடையில் இவரது காமெடி மட்டும் எப்படி தெரிகிறது… ஏனென்றால் இது காமெடிப் படம்தானே… எதிர்நீச்சலில் வருவதைப் போல் இதிலும் டீச்சரை காதலிப்பவர், டீச்சர் கிடைக்கவில்லை என்றதும் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்தனுப்பிய ஸ்டூடண்டையே கரெக்ட் செய்துவிடுகிறார்…. அந்தக் காதலுக்குத் தான் சிவணாண்டி பிரச்சனை செய்ய.. பசுமாட்டைக் காப்பாற்றி படத்துக்கு சுபம் போடுகிறார்கள்…

சிவகார்த்திகேயனை மட்டுமே வைத்து காமெடி செய்து கொண்டிருந்தால் இது திரைப்படமா இல்லை…? அதுஇது எது? அரிஹிரி அசெம்பளி, லொள்ளு சபா, அல்லது ஆதித்யா சேனலின் காமெடி டைமா என்று ஆடியன்ஸ்க்கு குழப்பம் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் புரோட்டா சூரியும் வந்து ஆங்காங்கே காமெடி கரகம் ஆடுகிறார்… ஆனால் நடிப்பு என்று பார்க்கும் போது சிவாவும் சரி சூரியும் சரி பல படிகள் முன்னேறி வருகிறார்கள் என்பதை கண்டிப்பாக ஒத்துக்கொள்ள வேண்டும்… ஆனால் என்ன இவர்கள் அடிக்கின்ற காமெடி எல்லாம் அடுத்த சீன் வந்தவுடன் மறந்து போவதுதான் மகாகொடுமை….


சில காட்சிகளில் வந்து போகும் பிந்துமாதவியும் சரி, சேலை, தாவணி, ஸ்கூல் யூனிபார்ம் என விதவிதமாக வந்து போகும் திவ்யாவும் சரி அத்தனை அழகு. திவ்யா படிப்பின் மீது உள்ள காதலால், கல்யாணத்தையே வெறுக்கின்றவர், தன் கல்யாணத்தை நிறுத்தி தான் படிக்க காரணமாக இருப்பவன் இந்த போஸ் பாண்டி தான் என்பதை அறிந்து அவரைக் காதலித்து அடுத்த வருடமே படிப்புக்கு முழுக்கு போட்டு கல்யாணம் செய்து கொள்ளும் கண்ணியமான கதாபாத்திரம். அதுசரி, கணவர்தான் எம்.ஏ எம்.பில் அல்லவா அவரிடமே பாடம் படிக்கலாம் என்று நினைத்திருப்பார் போலும்.. திவ்யாவின் அப்பா சிவணாண்டியாக சத்யராஜ் தன் வழக்கமான நடிப்புப் பாணியில் இருந்து விலகி வித்தியாசம் காட்டி இருக்கிறார்… தன் மகன் போஸ் பாண்டி காதல் தோல்வியால் கஷ்டப்படும் போது காசு கொடுத்து “சரக்கடிடா மவனே, மறந்துடும்..” என்று பாசம் பொழியும் அப்பாவாக யார் கண்ணன். வாழ்த்துக்கள்…


படத்தில் கவனிக்க வேண்டிய விசயம் என்றால், காதலுக்கு தூது போன பெண்ணையே கடைசியில் கரெக்ட் செய்யும் அந்த ஒன் லைன்னர், அது ஏதோ சொந்த அனுபவமாக இருக்குமோ என்ற ஐயப்பாடும் உண்டு. அது தவிர்த்துப் பார்த்தால் சூரியின் அப்பாவாக வரும் அந்த பூசாரி மந்திரவாதியின் நடிப்பு..

பாலசுப்ரமணியத்தின் கேமரா வழக்கம் போல் தேவையானது மிகக்கச்சிதமாக செய்திருக்கிறது. இமானின் இசையில் “ஊதா கலரு ரிப்பனுக்கும்” எதிர்பார்த்ததைப் போல் “இந்த பொண்ணுங்களே இப்படித்தான்..” பாடலுக்கும் தியேட்டர் குலுங்குகிறது. இயக்குநர் பொன்ராம் அவர்களுக்கு இது முதல்படம். தமிழ்சினிமாவின் எதிர்காலத்தைப் பற்றி வருத்தப்படாத இயக்குநர் சங்கத்தில் இருந்து வந்திருப்பார் போலும்… அப்படி பொத்தாம் பொதுவாகவும் சொல்லிவிட முடியாது.. முதல் படம் எடுப்பதென்பது இங்கு தலைகீழாக நடப்பதற்குச் சமம்.. எத்தனை சமரசங்கள் செய்தாரோ..? இவரது இரண்டாவது படத்திலாவது இந்த வருத்தப்படாத இயக்குநர் சங்கத்தில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்று நம்புவோமாக…


மொத்தத்தில் பார்த்தால் பெற்றோர்களைவிட காதலர்களுக்கே, அதிலும் குறிப்பாக காதலனே அதிக பொறுப்புணர்ச்சியுடனும், கவனமுடனும் நடந்து கொள்கிறானோ என்று எண்ணத் தோன்றுகிறது. பின்ன என்னங்க…? ஏது நாம் ஆதலால் காதல் செய்வீர் படத்துக்கு தன் காதலியை அழைத்துச் சென்றால் அவள் உஷாராகிவிடுவாளோ என்று காதலனும், இது காதலை கொச்சை படுத்துகிறது………..!!! என்று ஒட்டுமொத்த காதலரும் ஆதலால் காதல் செய்வீரை புறக்கணித்து கண்ணியம் காக்கும் போது, பொறுக்கிகளை காதலிப்பது எப்படி என்று பாடம் எடுத்து, ஓடிப் போவதற்கும் சொல்லிக்கொடுக்கும் இது போன்ற படங்களுக்கு தங்கள் பிள்ளைகளை கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்லும் பெற்றோரின் பொறுப்புணர்ச்சியை என்னவென்று சொல்வது….?

காமெடி படம் எடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.. அதற்காக படத்தில் வரும் எல்லோரையுமே காமெடியாக காட்டினால் எப்படி..? நம் வாழ்விலும் காமெடியான தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. ஆனால் அவை எதுவுமே உங்களது காமெடிப் படம் போல் இல்லையே என்பதுதான் எனது வருத்தம். மொத்தத்தில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்சில் பிரகாஷ்ராஜ் சிரிப்பதைப் போல் சிரிக்க மட்டும் வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்தப் படத்துக்கு செல்லலாம்… ஆனால் என்னைக் கேட்டால் அதற்கு பதிலாக காமெடி டைம் பார்க்கலாமென்றே பரிந்துரைப்பேன்… என் பரிந்துரையை யார் கேட்கப் போகிறீர்கள்.. அதனால்தான் எல்லோரும் படம் பார்த்தப்பின்பு எழுதுகிறேன் இந்தப் பதிவை…


1 comment: