Monday 12 August 2013

The Conjuring:

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளிவந்து சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கும் படம் “THE CONJURING”. வழக்கமான பேய் படத்திற்கான பார்முலாவில் இருந்து சற்றும் விலகாத அதே கதை மற்றும் கள பிண்ணனியைக் கொண்டு வந்திருந்தாலும், படத்தில் சில காட்சிகளில் இருக்கும் பெர்பக்‌ஷன், அனைத்து கதாபாத்திரங்களின் மிகையில்லாத வெகு யதார்த்தமான நடிப்பு, மிகமிக முக்கியமாக அந்த திரைக்கதையோடு பொருந்திய மிக அற்புதமான பிண்ணனி இசை இவையோடு சத்யம் போன்ற மிகச் சிறந்த திரையரங்குகளின் ஸ்பீக்கர் சிஸ்டம் இவையெல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான காண்பனுபவத்தை சாத்தியப்படுத்தி இருக்கின்றன.


Lorraine warren, Ed warren தம்பதிகள் சூப்பர் நேச்சுரல் சக்தி என்று சொல்லப்படும் அமானுஷ்ய சக்தியால் நடைபெறும் சம்பவங்களை ஆராய்ந்து பேய் துரத்தும் நிபுணர்கள். இவர்களிடம் இருந்து கதை தொடங்குகிறது.. இவர்கள் ஒரு அரங்கத்தில் குழுமி இருக்கும் பார்வையாளர்களிடம் தங்கள் அனுபவத்தில் கிடைத்த வீடியோ ஆதாரங்களை திரையிட்டு, அந்த அனுபவத்தில் என்ன பிரச்சனை இருந்தது, அதை அவர்கள் எப்படி தீர்த்தனர் என்பதை விளக்குகின்றனர். அதன் இறுதியில் பார்வையாளர்கள் அந்த தீயசக்தி புகுந்த பொம்மை எங்குள்ளது என்று கேள்வியெழுப்ப.. அது பத்திரமாக ஒரு இடத்தில் இருப்பதாக சொல்லி முடிக்க.. அடுத்த காட்சியில் அந்த பொம்மையை Ed தனது வீட்டில் தங்களது ஆராய்ச்சிகளில் இருந்து கிடைத்த பொருட்கள் வைக்கும் பிரத்யேக அறையில் வைத்து பூட்டுகிறான்.


இப்போது அடுத்த கதை தொடங்குகிறது. இப்படி இவர்கள் பல அனுபவங்களை கடந்து வந்திருந்தாலும் இவர்களால் மறக்கமுடியாத ஒரு அனுபவம் உண்டு என்ற வரிகள் திரையில் ஓட… The Conjuring என்ற டைட்டில் அற்புதமான பிண்ணனி இசையுடன் ஓட தொடங்குகிறது. Carrolyn parren மற்றும் Rodger parren தம்பதியினர் தங்கள் ஐந்து பெண் குழந்தைகளுடன் தாங்கள் வங்கியிடம் இருந்து புதிதாகப் பெற்ற வீட்டுக்கு குடியேற.. அவர்களின் வளர்ப்பு நாய் மட்டும் உள்ளே வர தயங்கி வாசலிலே நின்று குரைக்கத் தொடங்குகிறது… வீட்டை ஒதுங்கச் செய்யும் போது மறைவிடத்துக்குப் பின்னர் கீழே இருக்கும் அறையை கண்டு Parren தம்பதியினர் மகிழ்ச்சி கொள்கின்றனர். நாய் மட்டும் வெளியே நின்று குரைத்துக் கொண்டே இருக்க.. இரவில் அனைவரும் தூங்கச் செல்கின்றனர். காலையில் எழுந்துப் பார்த்தால் Carrolyn Parrenனின் உடம்பில் தடிப்புகள் போன்று ஏதோ வெடித்திருக்க.. நாயும் இறந்திருக்கிறது… அவர்கள் பின்பு செய்தது என்ன…? என்பதை வெண் திரையில் கண்டு மகிழுங்கள்..


படத்தில் ஐந்து பெண் பிள்ளைகளும் கண்ணா மூச்சி விளையாடுவார்கள்… ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிக்க வருபவளுக்கு க்ளு கொடுப்பது போல் ஒளிந்திருப்பவர்கள் கைதட்ட வேண்டும்… அப்படி மூன்று முறை கைதட்டுவதற்குள் கண்டுபிடித்துவிட வேண்டும். அந்த சிறுமி First Clab என்று சொல்லியவுடன் அரங்கமே கைதட்டுகிறது.. அந்த அளவுக்கு ஆடியன்ஸ் ரசித்துப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பேய் வரும் போது ஆடியன்ஸிடம் இருந்து கேட்கும் அலறலும் ஆரவாரமுமே ஒரு வித்தியாசமான அனுபவம்.. அதற்காகவே இன்னொரு முறை பார்க்கலாம்.. இதில் ஜோடியாக வருபவர்கள் எல்லாம் பேய் வருவதை சாக்காக சொல்லிக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிக் கொள்கின்றனர்… இப்படி ஒருவித திடுக்கிடும் கூத்தும் கும்மாளமுமாக படம் பார்த்து முடித்து வெளியே வரும் போதுதான்.. சுற்றிலும் பரவி இருக்கும் இருண்மையை கண்டவுடன் ஒருவித பயம் அடிவயிற்றை கவ்வுகிறது…



இதுதவிர ஆங்காங்கே வரும் சில காட்சி நகைச்சுவையும், வசன நகைச்சுவையும் பிற பேய் படங்களில் காணாதது.. ”April” என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அந்த சிறுமி அத்தனை அழகு… இப்படி படத்தைப் பார்ப்பதற்கு பல பாசிட்டிவான காரணங்கள் இருந்தாலும், ஒரே ஒரு நெகடிவ்வான காரணம்.. நீங்கள் இளகுவான மனம் படைத்தவரா…? வீட்டில் சில நாட்களுக்கு தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறதா..? அப்படியென்றால் நீங்கள் இந்த படத்தை தவிர்த்துவிடுவது நல்லது.. ஏனென்றால் இந்த திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் எதுவுமே மீள் நினைவுக்கு வராத படம் இல்லை.. இது உங்கள் நினைவில் இருந்து மீள்வதற்கு பல நாட்கள் பிடிக்கும்…..

No comments:

Post a Comment