Sunday 21 July 2013

மரியான்:

தனுஷ், ரஹ்மான், பரத்பாலா, பார்வதி மேனன் என்று மிரள வைக்கும் கூட்டணி. ஆனால் நம்மை அரள வைப்பது போல் ஒரு படத்தைக் கொடுத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் பரத் பாலா “வந்தே மாதரம்” மூலம் தானும் பிரபலமாகி தன் நண்பர் எ.ஆர்.ரஹ்மானையும் புதிய உச்சம் தொட வைத்த டாக்குமெண்டரி இயக்குநர். அவரது முதல் பரிசோதனை முயற்சிப் படமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த மரியான். முதல் முயற்சி என்றாலும் வெகுஜன ஊடகமான சினிமாத் துறையுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பதால் படத்தில் தென்படும் தவறுகளை புறந்தள்ள மனம் ஒப்பவில்லை. இயக்குநர் சில டாக்குமெண்டரி படங்களில் என் மனம் கவர்ந்தவர்தான், இருந்தாலும் மரியானின் கதை மற்றும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிகபட்ச உழைப்பைக் கொடுத்திருந்தால் மரியான் சாகா வரம் பெற்றிருப்பான் என்று எண்ணத் தோன்றுகிறது…


படம் வெளிவருவதற்கு முன்பே க்ளிப்பிங்க்ஸ் மற்றும் ட்ரைலர் மூலம் படம் எது தொடர்பான படமென்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. அதற்கேற்றாற் போல் இயக்குநரும் நேர்காணல்களில் “இது பத்திரிக்கையில் வந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை, இதில் கடல் மீனவர்களின் பிரச்சனையை அலசி இருக்கிறோம் என்று கூறி இருந்தார். அந்த உண்மைச் சம்பவம் “தமிழ்நாட்டில் இருந்து சூடானுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு கம்பெனியில் கூலி வேலை செய்யச் சென்ற தொழிலாளிகளை ஒரு தீவிரவாத அமைப்பு தங்கள் போராட்டத்தின் பணத் தேவைகளுக்காக கடத்திச் சென்று சிறை வைத்தது…” இதுதான் இயக்குநரைப் பாதித்த அந்த உண்மைச் சம்பவம்… இனி கதைக்கு வருவோம்..

நீராடி என்னும் கடல்புற கிராமத்தின் மீனவன் மரியான்… தன் இரண்டு ஆண்டுகாலப் பணியை தென் ஆப்பிரிக்க நாடான சூடானில் கழித்துவிட்டு சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகிறான்… அவனது பின்னோக்குப் பார்வையில் அவனுக்கும் அந்த கிராமத்தில் உள்ள மீனவப் பெண்ணான பனிமலருக்குமான காதலும், அவன் மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு எதற்காக சூடான் வந்தான் என்பதான காரணமும் ப்ளாஸ்பேக்காக முதல்பாதியில் சொல்லப்பட.. அதன் முடிவில் மரியான் தீவிரவாத கும்பலால் கடத்தப்பட… அவன் அந்த கும்பலிடம் இருந்து உயிரோடு மீண்டானா..? இல்லையா…? என்பது இரண்டாம் பாதிக் கதை….


மரியானாக தனுஷ். குற்றம் குறை கண்டுபிடிக்கமுடியாத அற்புதமான நடிப்பு… வசன உச்சரிப்பிலும், உடல்மொழியிலும் தனுஷ் அபாரம்… படத்திற்குப் படம் தனுஷ் என்னும் மனிதருக்குள் உள்ள நடிகன் மென்மேலும் மெருகேறிக் கொண்டே இருக்கிறான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.. பனிமலராக “பூ” பார்வதி.. வழக்கமான மாசு, மரு கலக்காத அச்சு அசல் தமிழ்சினிமா கதாநாயகிக்கான கதாபாத்திரம்.. நாயகனின் காதலுக்காக ஏங்கி, அவனைக் கைப்பிடிக்க காத்திருந்து, அவனது பிரிவின் போது வருந்தி நம்மையும் வருத்தும் கதாபாத்திரம்…. இதில் என்ன புதுமையைக் கண்டு நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்… ஆனால் முதல்பாதி முழுவதும் கொஞ்சமாவது சுவாரஸ்யமாக செல்வதற்கு பார்வதியின் மிகையில்லாத க்ளாமரும், வசீகரமான நடிப்பும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை…

இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் இன்னும் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் எதுவும் மனதில் நிற்கவில்லை.. அதிலும் குறிப்பாக உமா ரியாஸ் கதாபாத்திரம்.. தனுஷ்க்கு அம்மா வேடத்தைக் கொடுத்து ஒரு சிறப்பான நடிகையை வீணடித்து இருக்கிறார்கள்.. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை துள்ளல்… சில பாடல்களின் போது நம்மையும் அறியாமல் கால்கள் ஆடத் தொடங்குகின்றது… பிண்ணனி இசை ஒன்றுமில்லாத சில காட்சிகளுக்குக் கூட ஜீவனைக் கொடுக்க உதவி இருக்கிறது.


முதல்பாதியில் கதை நகர்வு என்பது காதலைத் தவிர்த்து வேறெதும் இல்லை என்றாலும் சின்ன சின்ன சுவாரஸ்யங்களும், தனுஷ் பார்வதி இருவரது ஸ்கிரின் ப்ரசன்ஸும் அந்தக் குறையை ஈடுசெய்கின்றது. ஆனால் இரண்டாம் பாதிதான் படத்தின் மிகப்பெரிய குறை… சூடானில் மாட்டிக் கொண்டு தனுஷ் படும் கஷ்டத்தை விட திரையரங்கில் மாட்டிக் கொண்டு நாம்தான் அதிகமான கஷ்டத்தை அனுபவிப்பதாய் எண்ணத் தோன்றும் காட்சி அமைப்புகள். நீளமும் மிக…மி..க.. அதிகம்…. திரைக்கதையில் இருவரது உழைப்பு இருந்தும் எப்படி இந்த தவறை அனுமதித்தார்கள் என்பது ஆச்சர்யமே…

இதே போன்ற கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படம் தான், “Rabbit proof fence” என்னும் ஆஸ்திரேலிய மொழித் திரைப்படம். அங்கு குழந்தைகள் கடத்தப்படுவார்கள். ஆனால் சட்டப்படி. தீவிரவாதிகளால் அல்ல… அரசாங்கத்தால்… அந்த கும்பலிடம் இருந்து அந்த சிறுவர்கள் மீண்டு தங்கள் தாய் தந்தையரை அடைந்தார்களா என்பதே அதன் கதை.. அதன் திரைவிமர்சனத்தை படிக்க விரும்புபவர்கள் இந்த சுட்டியை அழுத்தவும்.. http://kanavuthirutan.blogspot.in/2012/12/rabbit-proof-fence.html  அந்த திரைப்படம் தந்த ஒரு அனுபவம் இதில் ஏற்படவே இல்லை என்பது வருத்தமே… அது போல் ஒரு சாதாரண மீனவனான மரியான் என்னும் கதாபாத்திரத்திற்கான வடிவமைப்பைத் தாண்டி பல இடங்களில் இண்டெலக்சுவல் ஹீரோவுக்கான வடிவமைப்பை அந்த கதாபாத்திரத்தில் திணித்து இருப்பதால், அந்த கதாபாத்திரம் இயல்பாக இல்லாமல் சிதைந்து விடுகிறது. பாடல்கள் இனிமையாக இருந்தாலும் அவை படத்தில் வரக்கூடிய இடங்கள் நம் பொறுமையை சோதிக்கும் இடங்களாக இருப்பதால் அதை ரசிக்கவும் முடியவில்லை..

ஹாலிவுட்காரரான மார்க் கோனின்ங்க்ஸ்தான் கேமரா. ஒவ்வொரு ப்ரேமும் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல் அத்தனை அழகாக வந்திருக்கிறது…. க்ளாசிக்கல் வொர்க்.. வசனம் ஜோ.டி.குரூஸ் அவர்கள்.. பல இடங்களில் இயல்பாகவும் சில இடங்களில் வசீகரமாகவும் இருந்தது. குறிப்பாக “எம்ட்டி க்ரவுண்டுன்னு சொன்ன….” “அதான் பட்டா போட்டுட்டேல்ல… அப்புறமென்ன…” என்ற வசனம் வரும் சூழல் அலாதியானது…


படம் ஒரு மீனவனின் காதல் வாழ்க்கையை சொல்ல வருகிறதா, அல்லது மீனவர்களின் வாழ்வியல் பிரச்சனையை பேச வருகிறதா…? அல்லது சூடானின் உள்நாட்டு அரசியல் சூழலைப் பேச வருகிறதா…? அல்லது மரணப் பிடியில் மாட்டிக் கொண்ட ஒரு சாதாரண மனிதனின் வலி நிறைந்த உணர்வுகளை கடத்த முயல்கிறதா…? என்பதில் தெளிவில்லாமல் செல்லும் திரைக்கதையால்  எல்லா சாயத்திலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் பூசிக் கொண்டு கடைசியில் பார்த்தால் கருமையாக காட்சி அளிக்கிறது இந்த மரியான்…

உங்களது பொறுமை மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் “மரியான்” பார்த்து அதை பரிசோதித்துக் கொள்ளலாம். பொறுமை தேர்விலும் ஜெயித்து படமும் உங்களுக்குப் பிடித்திருப்பது போல் தோன்றினால் நீங்கள் இந்த மூன்றில் ஏதோ ஒன்றுக்கு அடிமை என்று அர்த்தம்.. 1) தனுஷின் நடிப்பு 2)பார்வதி மேனனின் அழகு 3)ஏ.ஆர்.ரஹ்மானின் இசை.

No comments:

Post a Comment