Wednesday 19 June 2013

தீயா வேலை செய்யணும் குமாரு:

சிரிக்க வேண்டும் என்பதை மட்டுமே பிரதானமான குறிக்கோளாக வைத்து எடுக்கப்படும் இது போன்ற படங்களுக்கு சிந்தித்தெல்லாம் திரை விமர்சனம் எழுதவே கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறேன். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு பொழுது போக்காகவும், சிரிப்பதற்காகவும் வரும் ஆடியன்ஸ்க்கு இந்த திரைப்படம் முழு திருப்தியைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


கதையென்னவென்றால்…………….!!!??? கொஞ்சம் யோசிக்க டைம் கொடுங்க.. ரெண்டு நாளுக்கு முன்னால் பார்த்த படம்தான். இருந்தாலும் ஒரு காட்சி கூட நினைவுக்கு வரவில்லை.. சற்று பொறுங்கள்…

மன்னிக்கவும் அப்படி எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்…… இல்லை இல்லை… கதை இருக்கிறது.. கதை இருக்கிறது… இதுதான் கதை.. அதாவது ”டைட்டானிக் குடும்பம்” என்று ஒரு குடும்பம். குடும்பத்தில் உள்ள அனைவருமே காதல் திருமணம் செய்து இருப்பதால் அவர்கள் குடும்பத்துக்கு டைட்டானிக் குடும்பம் என்று பெயர்.. (என்னது…? ஆம்பள ஆள் எல்லாரும் இறந்துட்டாங்களாவா…? அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லங்க…) அந்த குடும்பத்துக்கு திருஷ்டி பொட்டு போல ஒரு இளைஞன் குமார்.(சித்தார்த்). காதலில் படுதோல்வி அடைந்தவன்..

மழலை பருவம், பள்ளி பருவம், கல்லூரி பருவம் என்று மூன்று பருவத்திலும் காதலில் தோல்வி. அவனுக்கு தன் அலுவலகத்தில் பணிபுரிய புதியதாக வந்த பெண்ணைக் (ஹன்சிகா மோத்வானி) கண்டதும் அவனுக்கு குறிஞ்சிப் பூ போல காதல் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் பூக்கிறது. தன் காதலில் இந்த முறையாவது ஜெயிக்க அவனது மொட்டை மாமா பாஸ்கி ஒரு ஐடியா சொல்கிறார். அதாவது மோக்கியோ (சந்தானம்) என்பவனிடம் உதவி கேள். அவனுக்கு காதலுக்கு உதவுவதுதான் வேலை. “என்ன பீஸ் என்கின்ற பெயரில் பணம் கொஞ்சம் அதிகமாக செலவாகும்…” என்று வழிகாட்ட.. மோக்கியாவும் காதல்ல ஜெயிக்கணும்னா தீயா வேலை செய்யணும் குமாரு என வழிநடத்தத் தொடங்க.. நம் நாயகன் குமார் தன் காதலில் ஜெயித்து தன் குடும்பத்துக்கு ஏற்பட்ட திருஷ்டியை அழித்தானா இல்லையா என்பது மீதிக் கதை….. இவ்வளவு பெரிய கதையை வைத்துக் கொண்டு கதையே இல்லை என்று சொல்லிவிட்டேனே… மன்னித்துக் கொள்ளுங்கள்..


வெகுளித்தனமான முதல் இருபது நிமிட நடிப்பில் சித்தார்த் அபாரம். ஆனால் அதற்கு பிறகு வரும் காட்சிகளில்தான் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லை. படத்தின் முதல் ஹீரோ சந்தானம் தான். அவருக்கான முதல் காட்சியிலேயே கிடைக்கும் விசிலும் கரகோஷமும் அதனை அறுதியிட்டுக் கூறுகிறது. தன் கூட்டாளிகள் அனைவரும் ஏதேனும் ஒன்றிரண்டு காட்சிகளிலாவது தலைகாட்டுவது போல் காட்சி அமைத்திருக்கிறார். பாராட்ட வேண்டிய விசயம். லவ்வுக்காக ஐடியா கொடுக்கும் போது இவர் சொல்லும் வசனங்களில் சில அப்ளாஸ் அள்ளுகிறது. அதிலும் குறிப்பாக “ஆப்ட்ரால் இந்த அறைக்கு பயந்துதான் தமிழ்நாட்ல பாதி பேர் லவ்வ சொல்லாமலே அழிஞ்சி போயிருக்காய்ங்க…” என்று சொல்வதை சொல்லலாம்.


மனோபாலாவும் சந்தானமும் கேளிக்கை விடுதியில்  வகை தொகை இல்லாமல் அடிக்கும் சில காமெடிகள் அதிரிபுதிரி ரகம். அந்த பத்து நிமிடங்கள் எல்லா ஆடியன்ஸ்க்குமே பூஸ்ட். ஹன்ஸிகா முதன் முதலாக கொஞ்சம் நடித்திருப்பதோடு மட்டும் அல்லாமல் அழகாகவும் தெரிகிறார் (என் கண்களுக்கு). அவர் சார்பாகவும் கேமராமேன் கோபி அமர்நாத்துக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இவர்கள் தவிர்த்துப் பார்த்தால் சித்தார்த்தின் நண்பராக வரும் ஆர்.ஜே பாலாஜியின் சில டைமிங்க் வசனங்களும், ஹன்சிகாவின் அப்பாவாக வரும் சித்ரா லட்சுமணன் மற்றும் தோழியாக வரும் வித்யாராம் போன்றோரின் மிகையில்லாத நடிப்பும் மனதில் நிற்கிறது. சில நிமிடங்களே வந்து போகும் கதாபாத்திரமாக இருந்தாலும் மனோபாலாவும், டெல்லி கணேஷும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். பாடல்கள் படத்திற்கு பெரிய தடை. முதல் படத்தில் நம்பிக்கை விதைத்த சத்யா, இதில் ஏமாற்றிவிட்டார். ப்ரவீன் ஸ்ரீகாந்தின் எடிட்டிங் அட்டகாசம்..

வசனம் எழுதி திரைக்கதையில் உதவி இருப்பவர்கள் ”சூது கவ்வும்” இயக்குநர் நலன் குமாரசாமியும், சீனியும். ஆரம்பத்தில் வரும் வசனமான “இவந்தா குமாருன்னு சொன்னா எழுந்து போயிருவீங்கல்ல…. அதனால இவன் இல்ல குமாரு…” என்று காட்சியை ஓப்பன் செய்யும் இடமே முத்திரை பதித்து விடுகின்றனர். ஆனால் வசனத்தில் பின்பாதியிலும் திரைக்கதையில் முன்பாதியிலும் தான் இவர்களை தேட வேண்டி இருக்கிறது.


சுந்தர். சி யின் படங்கள் என்றாலே சிரிப்புக்கு கேரண்டி இருக்கும். அது இந்த தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்துக்கும் பொருந்தும். ஆனாலும் இவரது முந்தைய படமான கலகலப்புடன் ஒப்பிடும் போது ”தீவேசெகு” ஒன்றும் அந்த அளவுக்கு பெரிய சிரிப்பு வெடி இல்லை. இன்னும் சொல்லப் போனால் சில இடங்களில் (குறிப்பாக பாடல் வரும் எல்லா இடங்களிலும் அது தவிர்த்து இன்னும் சில இடங்களிலும்) சில கெட்டவர்கள் (கதையென்ற வஸ்துவை எதிர்பார்த்து வந்தவர்களாக இருக்கலாம்…) எழுத தயங்கும் பல வார்த்தைகளால் தியேட்டரில் அர்ச்சித்துக் கொண்டே இருந்தனர் என்பதும் உண்மை.

இயக்குநர் சுந்தர்.சிக்கும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி இருக்கும் அவரது மனைவி குஷ்பூவுக்கும் இந்த படத்தின் வெற்றி இது போன்ற காமெடி படங்களிலேயே மீண்டும் முதலீடு செய்யத் தூண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.. மொத்தத்தில் இந்த ”தீயா வேல செய்யணும் குமாரு” ஒரு ஜாலி கேலி சீனி வெடி…. சரவெடி அல்ல….



No comments:

Post a Comment