Tuesday 4 June 2013

குட்டிப்புலி:

சசிக்குமாரின் பட்டறையிலிருந்து வந்திருக்கும் அடுத்த இயக்குநரான முத்தையாவின் முதல்படம். இயக்குநரின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் வளரும் பருவத்தில் கண்டு மெய்சிலிர்த்து நின்ற இளைஞரான “குட்டிப் புலி” என்னும் கதாபாத்திரத்தை அப்படியே சினிமாவாக்கி இருக்கிறார். குட்டிப்புலியின் வாழ்க்கையை நாம் அறியமாட்டோம் என்பதால் படத்தில் வரும் காட்சிகளில் எது நிஜம், எது கற்பனை என்பதை நம்மால் பிரித்தாள முடியாது. இருப்பினும் இரண்டுமே வறட்சியாக இருப்பதால் அந்த விவாதமே இங்கு தேவையற்றதாக ஆகிவிடுகிறது.


சசிக்குமாரின் முந்தைய படமான சுந்தரபாண்டியனுக்கான திரைவிமர்சனத்திலேயே எழுதி இருந்தேன், சசிக்குமார் விழித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது என்று. அது இந்த திரைப்படத்தில் அப்பட்டமாக நிருபணமாகி இருக்கிறது. ஒரு படத்தின் அசாத்தியமான வெற்றி படத்தை எந்த அளவுக்கு  மக்களின் மனதுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறதோ அதே அளவுக்கு இயக்குநருக்கும் மக்களுக்குமான இடைவெளியையும் ஏற்படுத்திவிடுமோ என்று ஐயுறத் தோன்றுகிறது.

சுப்ரமணியபுரம் என்னும் வெற்றி தந்த களிப்பில், அத்திரைப்படத்தின் சில சாத்தியக் கூறுகளை மட்டும் அப்படியே எடுத்துக் கொண்டு (தெருக்களில் நடந்து கொண்டே இருக்கும் கதாநாயகி, பரிமாறிக் கொள்ளும் காதல் பார்வைகள், பேக்ரவுண்டில் ஒரு இளையராஜா பாடல், இறுதியில் நெஞ்சைப் பதறச் செய்வது போன்ற ரத்தம் தெறிக்கும் ஒரு க்ளைமாக்ஸ்…) அந்த திரைப்படம் எதனால் வெற்றி பெற்றது என்பதை தவறவிடுவதால் ஏற்படும் கோளாறுகள் தான் இது போன்ற திரைப்படங்கள்..

கதை இதுதான். தன் தெரு (மேட்டுத் தெரு) பெண்ணின் மானத்துக்கு களங்கம் ஏற்படுத்தியவனை கொன்று, தானும் செத்து அத்தெருவுக்கு தெய்வம் ஆகிறார் குட்டிபுலியின் அப்பா. தன் மகனும் அடாவடி பண்ணும் ரவுடியாக மாறிவிடக்கூடாது என்று பயந்து தன் மகனின் கண்ணில் அவனது அப்பனின் போட்டோகூட படாதபடி பக்குவமாகப் பார்த்து வளர்க்கிறார் அம்மா சரண்யா. இருப்பினும் மகன் ரவுடியாக (ரவுடிக்கான விளக்கம்… அநீதியைக் கண்டு பொங்குபவனாக, நீதிமானாக, பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவனாக…) வளர்ந்து நிற்கிறான். பதறிப்போன தாய் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் திருந்திவிடுவான் என்று நினைக்க.. கல்யாணம் செய்தால் தன் மனைவியும் தன் தாயைப் போல் தாலி அறுக்க நேரிடும் என்பதால் இவன் கல்யாணத்துக்கும் முட்டுக்கட்டை போடுகிறான். எதிர்பாராத சூழ்நிலையில் பாரதியை(லட்சுமி மேனன்) அவன் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ள.. அதே நேரத்தில் அவனால் பாதிக்கப்பட்ட எதிரிகள் அவனைக் கொல்ல படைசூழ.. என்ன நடந்தது என்பது மீதிப்படம்…

ஊருக்கு உதவும்..! மன்னிக்க… தெருவுக்கு உதவும் உத்தமர் குட்டிப்புலியாக சசிக்குமார். வழக்கம் போல மடித்து கட்டிய லுங்கி, மலிக்காத தாடி, ஊர் பெருசுகளை மதிக்காத இளக்காரம், தப்பு செஞ்சவன்…! போலீஸாக இருந்தாலும் எகிறி அடிக்கும் தெனாவட்டு என கொஞ்சம் கூட நழுவாத அதே ஸ்கெட்ச். பாரதியாக லட்சுமிமேனன். வழக்கம் போல கையில் ரெண்டு கோல நோட்டு புத்தகங்களை வைத்துக் கொண்டு எங்கே போகிறோம் என்று அவருக்கும் தெரியாமல் நமக்கும் சொல்லாமல், எப்போது பார்த்தாலும் தெருவெங்கும் நடந்து கொண்டு இருப்பதும், நாயகன் எதிர்படும் போது காதல் பார்வை வீசுவதும் என அதே சசிக்குமார் படப்பாணியிலான கதாநாயகி ஸ்கெட்ச். அம்மாவாக சரண்யா. வழக்கம் போல தன் பிள்ளைக்கு வக்காலத்து வாங்குவதும், தன் பிள்ளையை மெச்சிக் கொள்வதுமாக பல படங்களில் செய்து வரும் அவருக்கே அலுத்துப் போன அதே கதாபாத்திரம்.. தான்


படத்தின் ஆரம்பத்தில் வரும் பத்து நிமிட காட்சிகள் நாவலில் வரும் காட்சிகள் என்பதால் அவை க்ளாசாக வந்திருப்பதோடு, படம் பற்றிய ஒரு எதிர்பார்ப்பையும் தூண்டுகிறது. அது தவிர்த்து பார்த்தால் ஊர்மக்கள் திருவிழாவின் போது போலீசை எதிர்த்து செய்யும் அலும்புகள், போலீஸ் ஸ்டேசனில் சசியை ஊற வைத்த வாழைமட்டையைக் கொண்டு அடித்து தோலை உரிப்பது, “ஒரு பொம்பள சொன்னாதா நீயும் நானும் ஆம்பள”, “அப்ப மனுசன் சாவு மனுசன்கிட்ட இல்லன்னுதான தெரியுது..” என ஆங்காங்கே சில வசனங்கள் மட்டுமே திருப்தி.


சசிக்குமாரை சிலம்பு சுத்தவிட்டு ஏன் அவமானப்படுத்த வேண்டும். உண்மையாகவே அந்தக் காட்சியில் சசியை விட அந்த சிறுவனும், வயதான கிழமும் மிக அருமையாக கம்பு சுத்தினர். காதலுக்கும் காமெடிக்கும் மெருகூட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆங்காங்கே மிக பரிச்சியம் இல்லாத சில இளையராஜா பாடலை தூவியதும், பப்பு, கசகசா என்ற பெயரில் நான்கு இளைஞர்கள் வந்து காமெடி என்ற பெயரில் அடிக்கும் அறுவைகளும் மேலும் எரிச்சலூட்டுகின்றது. படத்தின் முதல் பாதியிலாவது ஏதோ ஓரளவுக்கு நகரும் கதை, இரண்டாம் பாதியில் நகருவேனா என்கிறது. இதுபோக ஆங்காங்கே மறைமுகமான சாதியத் தீண்டல்கள் வேறு…

படத்திற்கு இரண்டு க்ளைமாக்ஸ் சூட் பண்ணி இருக்கிறார்கள். பல விவாதங்களுக்கு பிறகு இந்த க்ளைமாக்ஸை வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை இரண்டில் எந்த க்ளைமாக்சை வைத்திருந்தாலும் படத்தின் ரிசல்டில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்காது என்றே தோன்றுகிறது. இயக்குநர் தன் முந்தைய பேட்டியில் படம் பார்த்து முடிக்கும் போது பெண்கள் மீதும் தாய் மீதும் ஒரு மரியாதை கலந்த அன்பு ஏற்படும் என்று சொல்லி இருந்தார். ஐ ஆம் வெரி ஸாரி டைரக்டர்…


ஆனால் அவர் சொன்ன அதே வார்த்தைக்கான பொருளை “MOTHER” என்னும் ஒரு கொரிய மொழி திரைப்படம் பார்த்தப் போது உண்மையாகவே உணர்ந்தேன்.. கிட்டத்தட்ட இரண்டு படத்திலும் ஒரேவிதமான க்ளைமாக்ஸ் தான். ஜிப்ரானின் இசையில் சில பாடல்கள் கேட்கும் போது சுகமாக இருந்தது.. ஆனால் படத்தில் பார்க்கும் போது ஏனோ ஒட்டவே இல்லை. மகேஷ் முத்துச் சுவாமியின் கேமரா கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறது..


மொத்தத்தில் இது சுந்தரபாண்டியன் போல ஒரு கமர்ஷியல் காக்டெயிலாகவும் இல்லாமல், சுப்ரமணியபுரம் போல க்ளாசிக்காகவும் இல்லாமல் புதுமையான கதைக்களனாகவோ, பரபரப்பு ஏற்படுத்தும் திரைக்கதையாகவோ அல்லது ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்காகவோ இல்லாமல் நம்மை வெறுப்பேற்றுவதோடு இரண்டுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கிறது… பாவம் அது என்ன செய்யும்…..!? குட்டிப்புலிதான…!!!!

No comments:

Post a Comment