Monday 6 May 2013

எதிர் நீச்சல்:

வெற்றிமாறனின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் மற்றொரு இயக்குநரான துரை செல்வக்குமாரின் முதல்படம். கேடி பில்லா கில்லாடி ரங்காவின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பு, தனுஷ் தயாரிக்கும் படம், பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே எஃப் எம்மில் ஹிட், என எதிர் நீச்சலின் மீது எதிர்பார்ப்புக்கான காரணங்கள் ஏராளம். ஒரே நாளில் மூன்று படங்கள் வேறு ரீலீஸ். இதில் மூன்று பேர் மூன்று காதல் ரேஸில் பின் தங்க.. இப்போது ரேஸில் சூது கவ்வும் மற்றும் எதிர் நீச்சல் மட்டுமே. இரண்டுமே விட்டுக் கொடுக்காமல் ஓடிக் கொண்டிருப்பது திரையுலகுக்கு நல்ல செய்தி.


சிறுவயதில் பாடப்புத்தகத்தில் துணைப்பாடம் பிரிவில் “பெயரில் என்ன இருக்கிறது” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை படித்ததாக நினைவு. ஆனால் அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு எல்லாருக்கும் அமைவதில்லை. திரைப்படத்திலும் அதுதான் மையப்பிரச்சனை. குஞ்சுதபாதம் என்ற தன் பெயரை பொதுவெளியில் சொல்ல நாயகனுக்கு கூச்சம். நேர்காணல் நடக்கும் போதுகூட, அந்தப் பெயரால் தான் படும் அவமானங்களுக்குப் பயந்து தன் பெயரை மாற்றிக் கொள்கிறான். இதை தன் காதலியிடம் இருந்தும் மறைக்கிறான். உண்மை தெரியவரும் போது, “ஒரு சின்ன விசயத்தைக் கூட எதிர் நோக்க தைரியமில்லாமல் ஓடி ஒளிகிறாயே.. எதிர்காலத்துல ஏதாது பிரச்சனை வந்தா அத எப்டி நீ சமாளிப்ப.. உன்ன நம்பி எப்டி நான் உங்கூட வர்றது..” என்று நாயகி எதிர்கேள்வி கேட்க.. ஞாநோதயம் பெற்ற கதையின் நாயகன்.. மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று முடிவு எடுக்கிறான்…?

ஒரு நிமிசம்… அப்டியே பின்னாடி போங்க… காதலி என்ன சொல்லி திட்டுறா…? 100 மீட்டர் பந்தயத்துலயே ஜெயிக்க முடியலயே நீ எப்டி 200 மீட்டர்ல ஜெயிக்கப் போற அப்டின்னா திட்டுனா…? ஒரு வேல அப்டி திட்டிருந்தா..? 200 மீட்டர் என்ன உனக்காக நான் மாரத்தான் போட்டிலயே கலந்து ஜெயிக்கிறேன் பார்ன்னு சொன்னா…? ஓகே.. ஆனா அவ அப்டி திட்டவே இல்லயே.. அப்டின்னா பிரச்சனைக்கும் அவன் எடுக்குற முடிவுக்கும் என்ன சம்பந்தம்….? சத்தியமாக எனக்கும் தெரியலங்க… கடைசியில அதப்பத்தி பேசுவோம்….


மேற்சொன்னவாறு முடிவு செய்து க்ளைமாக்சில் மாரத்தான் களத்தில் குதிக்கும் நாயகன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா…? என்பது சஸ்பென்ஸ் நிறைந்த மீதி ஐந்து நிமிடக் கதை.

முதல்பாதி முழுவதும் மக்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற முன் தீர்மானத்துடன் எழுதப்பட்ட திரைக்கதை என்று நினைக்கிறேன். “குஞ்சுதபாதம், பாவாடைராயன்” என்னும் இரண்டு பழமைவாத குலதெய்வங்களின் பெயர்களை பயன்படுத்தி எவ்வளவு காமெடி பண்ண முடியுமோ…? அதற்கு குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். சில இடங்களில் ஏது வசனங்கள் விரசத்துக்குள் போய்விடுமோ என்று நம்மை கொஞ்சம் அஞ்ச வைத்து பின்பு கொஞ்ச வைத்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு மனதில் நிற்பது போல் ஒரு படம். தன் பெயரால் ஏற்படும் அவமானங்களால் தலைகவிழ்வதாகட்டும், தன் காதலி டீச்சர் என்பதை தெரிந்து கொண்டு, வீட்டு ஓனர் பையனை தினமும் இவரே ஸ்கூலுக்கு கூட்டிக் கொண்டு செல்ல ஸ்கூல் போக அடம் பிடிக்கும் பையனைப் போல் அடம் பிடிப்பது, லேட்டானாத்தான் பேரண்ட்ஸ ஸ்கூல்குள்ள அலவ் பண்ணுவோம் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக அந்தப் பையனை லேட்டாக ஸ்கூலுக்கு கூட்டிச் சென்று தன் டீச்சர் காதலி முன்பு அட்டெண்டன்ஸ் கொடுப்பது என ஜாலி சடுகுடு ஆடுகிறார். தன் நண்பன் சதீஸுடன் சென்று, தன் மாஜி கம்பெனி எம்.டியான மதன்பாபை வம்புகிழுத்து உதார் விடுவதும், காதலியை பெண் பார்க்கும் படலம் நடக்கிறது என்பதை அறிந்து துவளுவதும், தன் கோச்சாக வரும் வள்ளி(நந்திதா)க்கு ஏற்பட்ட கொடுமையை எண்ணி பொங்குவதுமாக ஆங்காங்கே க்ளாஸ் ஆக்டிங்.


நண்பராக வரும் சதீஷ்க்கு காமெடியில் முக்கியமான ரீச் இந்தப்படம். “வள்ளிக்கு நீ ஓடுவியான்னு டவுட்டு, திவ்யாவுக்கு நீ வள்ளிகூட ஓடிடுவியோன்னு டவுட்டு..” என்று சொல்லும் அந்த இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது. இது போக ஆங்காங்கே சரக்கு சார்ந்த காமெடியும் சைடிஸ்க்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜெயபிரகாஷ் நடிப்பும் வழக்கம் போல் சூப்பர்…

படத்தில் முக்கியமான அர்த்தமுள்ள நிமிடங்கள் என்று பார்த்தால் இரண்டாம் பாதியில் வரும் வள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் தான். அட்டகத்தியில் வெறும் கண்ணழகியாக வந்து சென்ற நந்திதாவுக்கு இங்கு வள்ளியாக சற்று கனமான பாத்திரம். அதை ஓரளவுக்கு சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரது தந்தையாக வருபவரின் நடிப்பு கச்சிதம். தன் மகளை ஒரு சிறந்த தடகள வீராங்கனையாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக உழைக்கும் அந்த தகப்பனின் உழைப்பு அவ்வளவு உருக்கம்.


நாமெல்லாம் மறந்து போன நிகழ்வு இது. மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக தடகள வீராங்கனையாக பதக்கம் பெற்ற திரு. சாந்தி என்னும் தடகள வீராங்கனையின் பதக்கம் பறிக்கப்பட்டது. காரணம் ஊக்கமருந்து சாப்பிட்டது அல்ல. அவர் உடலில் சுரந்த ஹார்மோன்கள். பெண் தன்மையை விஞ்சுகிற அளவுக்கு அவரது உடலில் ஆண் தன்மை கொண்ட ஹார்மோன்கள் சுரப்பதால், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டியவர், அவர் பெண்கள் பிரிவுக்கான போட்டியில் பங்குபெற தகுதியில்லாதவர் என்று சொல்லி பதக்கத்தைப் பறித்து ஊர்கூடி அவர் முகத்தில் சாணி அடித்த நிகழ்வு அது என்பதால் நாம் அதை எளிதில் மறந்துவிட்டோம். இப்பொழுது அந்த சாந்தி என்னும் முன்னால் வீராங்கனை தன் வாழ்நாள் ஜீவியத்தைக் கழிக்க கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்வை எடுத்துக் கொண்டு அதை அப்படியே வள்ளி என்னும் கதாபாத்திரமாக வடித்திருக்கிறார்கள். இந்த வள்ளிதான் நம் குஞ்சுதபாதத்துக்கு கோச்சாக இருந்து வழிகாட்டுகிறாள். இந்த கதாபாத்திரத்தை நினைவு படுத்திய இந்த உத்திக்காகவே படக்குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழக வீராங்கனை சாந்தி விசயத்தில் நடந்த அரசியல் குளறுபடிகள் என்னென்ன என்பதை நாம் அறியோம். ஆனால் அவர் நிராகரிக்கவோ ஒதுக்கப்படவோ வேண்டியவர் இல்லை என்பதே நம் கோரிக்கை.

நினைத்துப் பாருங்கள். இந்த உடலில் மீது தற்காலிகமாக ஒட்டிக் கொண்ட ஒரு சாதாரண பெயரால் ஏற்படும் அவமானத்தையே துடைத்து எறிய முடியாமல் துவண்டு போகும் இது போன்ற கதாநாயக பிம்பங்களான நமக்கு மத்தியில், ஒரு பெண்ணை அதிலும் குறிப்பாக அவள் உடலை பொதுவெளியில் நின்று இது பெண் தன்மை இல்லாத உடல், இதில் ஆண் தன்மை கலந்திருக்கிறது என்று பரிகசிக்கும் நம் சமூகம் எவ்வளவு ஊனமாக இருக்கிறது. இதற்கு சட்டமும் காவல் இருக்கிறது. இப்படி மனிதாபிமானமற்ற சட்டங்கள் இயற்றப்படுவதும் மனிதர்களுக்காகத்தான் என்பது எத்தகைய முரண்பாடு. இந்த உடல் சார்ந்த அவமானங்களோடு தன் எஞ்சிய காலத்தை வாழ்வதற்கு அவள் செய்த தவறுதான் என்ன…?

இதைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ…? பெயர் சார்ந்த அவமானத்தோடு வரும் இந்த வாழ்க்கையில் இந்த உடல் சார்ந்த அவமானத்தையும் சேர்த்திருக்கிறார்கள்.. உடல் சார்ந்த அவமானத்தையே நான் சகித்துக் கொண்டு வாழும் போது, சாதாரண உன் பெயர் சார்ந்த அவமானமா உன்னை துரத்துகிறது என்று மைய கதாபாத்திரத்தை நோக்கி வள்ளி கேள்வி எழுப்புகிறாளோ..? என்னும் கேள்வி எழுகிறது. இருப்பினும் இது தொடர்பான காட்சிகள் மிகையான விளைவுகளை பார்வையாளன் தரப்பில் ஏற்படுத்தாமல் கடந்து செல்வது ஒரு குறையே..

இதை தவிர சிறப்பான பாடல்கள், சிறப்பான காமெடி என குடும்பத்தோடு வருபவர்களை மகிழ்விக்கும் எல்லாத் தகுதிகளோடு எதிர் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறது இந்த எதிர் நீச்சல்  அதன் இலக்கை நோக்கி……

No comments:

Post a Comment