Wednesday 20 March 2013

வத்திக்குச்சி:


ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சார்பில் முருகதாஸின் தயாரிப்பில் வரும் இரண்டாவது படம். முதல் படமான எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்த தரத்தை உத்தேசித்து, துணிந்து இந்த படத்திற்கும் சென்று வந்தால் ஏமாற்றமே மிஞ்சும். முந்தைய படத்தைப் போலவே இந்தப் படத்திலும் தனது உதவி இயக்குநரான கின்ஸ்லின்யை இயக்குநராக்கி அழகு பார்த்திருக்கிறார் முருகதாஸ். முருகதாஸின் தம்பி தீலீபன் தான் ஹீரோ. ஆனால் முதல் படத்திற்கான கதைதேர்விலேயே கோட்டை விட்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு வந்த ரெளத்ரம் என்ற படத்தின் ஒன்லைனுக்கும் இந்த வத்திக்குச்சியின் ஒன்லைன்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதில் ஜீவா தன் தாத்தாவின் வளர்ப்பில் வளர்ந்ததால் சிறுவயதிலிருந்தே தீமைகளை கண்டால் தட்டிக் கேட்கும் குணம் உள்ளவராக வளருவார். அவர் தட்டிக் கேட்கும் சில அநியாயங்களால் அவரது சொந்த வாழ்க்கையிலும் குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை. அதேதான் இங்கும். ஆனால் ஹீரோ சக்தி(தீலீபன்) இங்கு அநியாயங்களை தட்டிக் கேட்கும் எண்ண மாற்றங்களை தனக்குள் எப்போது விதைத்துக் கொண்டார் என்பதில் தெளிவில்லாத தன்மை நிலவுகிறது.


படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒரு ரவுடி (சம்பத்), ஒரு தொழிலதிபர் (ஜெயபிரகாஷ்), ஒரு சாமானிய எல்.ஐ.சி ஏஜெண்ட், (நண்டு ஜெகன்) மூவருமே யாரோ ஒருவனை கொல்ல வேண்டும் என்னும் ஆக்ரோசத்தோடு அலைகின்றனர். அவர்கள் அப்படி கொல்ல அலைவது யார் என்று நம்மை அதிகம் யோசிக்க வைக்காமல், இவர்கள் கொல்ல அலைவது இவனைத்தான் என்று ஹீரோவுக்கு ஒரு ஓபனிங் சீன் வேறு வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஏன் ஹீரோவை கொல்ல அலைகிறார்கள்…? அவன் அவர்களிடம் இருந்து தப்பினானா..? இல்லையா..? என்பது மீதிக் கதை.

ஷேர் ஆட்டோ ஓட்டுநரான சக்திக்கு தாங்கள் தங்கியிருக்கும் சமத்துவகுடியிருப்பில் இரண்டு வீடு தள்ளி குடியிருக்கும் மீனா (அஞ்சலி) மீது காதல்… “நான் உன்ன காதலிக்கல.. நீ வேணா என்ன காதலிச்சிக்கோ..” எனக்கு பிரச்சனையில்ல..” என தீலீபனை சுத்தவிடும் அஞ்சலி வீட்டாவில் ஸ்போக்கன் இங்கீலீஸ் கோர்ஸ் படிப்பவர். இந்த காதல் ஓடிக் கொண்டிருக்கும் போதே தனிப்பட்ட முறையில் சக்திக்கு ஒரு பிரச்சனை சம்பத் கோஷ்டியினரால் வருகிறது. அந்தப் பிரச்சனையை அவர் தீர்க்கும் முறை சற்று வித்தியாசமானது, மிகவும் காமெடியானது. அதன் முடிவில் இனி தன் கண் முன்னால் நடக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் தாந்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று ஹீரோவுக்கு ஞானோதயம் வருகிறது. கூடவே கூட்ஸ் வண்டி போல பிரச்சனையும்…

ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோக்கள் கூட பறந்து பறந்து அடிக்கும் ஆக்சன் காட்சிகளை தவிர்த்து வரும் சூழலில், இப்படி ஒரு படத்தை தன் தம்பிக்காக எப்படி முருகதாஸ் ஓகே செய்தார்.. என்பது கேள்விக்குறி. ரவுடி சம்பத் தன் சகலை ரவிமரியாவிடம் தண்ணியடித்துவிட்டு பேசுவார்… “பச்ச முட்ட… கொண்ட கடல… இதெல்லாம் ஊறப்போட்டு தின்னுட்டு, ஜிம்முக்கு போய்ட்டு வந்தா நம்மள அடிச்சிரமுடியுமா.. இல்ல நம்மள மாதிரிதா ஆகிடமுடியுமா…” என்று ஹீரோவை கேலி செய்வார். இப்படி தமிழ்சினிமா ஹீரோயிசத்தை பகடி செய்துவிட்டு அதையே இம்மி பிசகாமல் இயக்குநரும் கடைபிடித்து இருப்பதை என்னவென்று சொல்வது….?


ப்ளாஸ்பேக்கை ஓப்பன் செய்கின்ற விதங்களில் சில இடங்களில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக சம்பத் தனக்கும் ஹீரோவுக்குமான பிரச்சனையை ரவிமரியாவிடம் விளக்குவது, ஹீரோ தனக்கும் ஜெயப்பிரகாஷ்க்கும் இடையேயான பிரச்சனையை அஞ்சலியிடம் விளக்க.. அவர் “போடா.. உனக்கு பொய் சொல்லவே தெரியல..” என அவரை கலாய்க்கும் இடங்கள் சற்றே சுவாரஸ்யமானவை. அது போல அந்த வேளச்சேரி ப்ரிஜ்க்கு அடியில் வைத்து நடக்கும் கொலை முயற்சி (கொலை நடக்கப் போவதை அவர் எப்படி கண்டுகொண்டார் என்பதை தவிர்த்து…) கடைசி க்ளைமாக்ஸ்க்கு சம்பத் ரெடியாகும் முன்பான, முன் நடவடிக்கைகளில் இருந்த டீடெய்லிங்க், இவை எல்லாமே சூப்பர். ஆனால் க்ளைமாக்ஸ்……………….?! தியேட்டரில் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். உண்மையில் படக்குழுவினரின் எண்ணம் ஆக்சன் படம் எடுப்பதா.. இல்லை காமெடிப் படம் எடுப்பதா என நமக்கு குழப்பம் வருகிறது.

இது போக படத்தில் பாராட்டப்பட வேண்டிய விசயம் அஞ்சலி. படத்திற்கு மிகப் பெரிய ரீலிவ் அஞ்சலிதான். வீட்டா இங்கிலீஸ் கோர்ஸ் படிப்பதாக இவர் அடிக்கும் அரைகுறை இங்கிலீஷ் வசனங்கள் காமெடிக்கு கேரண்டி.. அவர் இல்லாமல் அந்த இரண்டரை மணி நேரத்தை கடப்பது மிகவும் கடினம். இருப்பினும் அஞ்சலிக்கு இதில் நடிப்பில் சொல்லிக் கொள்ளும்படியான படம் இல்லை. இது போக ஆங்காங்கே சில இடங்களில் வசனம் ஓகே. தீலீபன் நடிப்பில் இன்னும் பல கட்டங்களை தாண்ட வேண்டியிருக்கும். சரண்யாவை அம்மா கேரக்டரிலேயே பார்த்து சலிக்கத் தொடங்குகிறது.


ஜிப்ரானின் இசையில் “கண்ண கண்ண உருட்டி உருட்டி…” பாடல் மட்டும் ஓகே. பிண்ணனி இசை பரவாயில்லை. குருதேவின் கேமரா சிம்ப்ளி சூப்பர். ஆனால் சண்டைகாட்சிகள் தான் மனதை நெருடுகிறது. பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல் பொழுது போக்க எண்ணி செல்வதற்கு இந்தப்படம் ஓகேதான். சண்டைகாட்சிகளையும் காமெடி கண்ணோட்டத்தில் பார்த்தால் இன்னும் அதிகமாக என்ஜாய் செய்யலாம்.

No comments:

Post a Comment