Sunday 3 March 2013

அமீரின் ஆதி-பகவன்:


தமிழ் திரை சூழலில் கூலிப்படை, ரவுடி கேங்க்ஸ்டர் அல்லது மாபியா என்று சொல்லக்கூடிய நிழலுலக தாதாக்களின் வாழ்க்கையை அச்சு அசலாக கண் முன் நிறுத்திய திரைப்படங்கள் மிக அரிது. சற்று பின்னோக்கிப் பார்த்தால் நாயகன், புதிய பாதை, புதுப்பேட்டை என்று ஒன்றிரண்டு படங்களை அந்த சட்டகத்திற்குள் வலுக்கட்டாயமாக திணிக்கலாம். அமீர் இதுவரை நாம் கண்டிராத கிராமத்தின் மற்றொரு உண்மையான முகத்தை தத்ரூபமாக அவரது பருத்திவீரனில் நம் கண் முன் விரித்துக் காட்டினார். அது தந்த நம்பிக்கையில் அமீரின் ஆதி-பகவன் தாதாக்களின் வாழ்க்கை தொடர்பான ஒரு அழுத்தமான தடயத்தை தழிழ் திரை சூழலில் விட்டுச் செல்லும் என்று நான் நம்பி இருந்தேன். ஆனால் அந்த நம்பிக்கையை படம் காப்பாற்றவில்லை.

வழக்கமான தமிழ் சினிமாவின் ஆள்மாறாட்டக் கதைய எடுத்துக் கொண்டு அதில் இரண்டு விதமான புதுமைகளை புகுத்தி வெற்றியடைய முயற்சித்து இருக்கிறார் அமீர். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. என்ன புதுமை என்று பார்த்தால் தமிழ் சினிமா மரபின்படி இரட்டை வேட படங்கள் என்றால் பெரும்பாலும் ஒருவன் நல்லவன், ஒருவன் கெட்டவன் என்று கதை புனையப்படும். இங்கு இரண்டு பேருமே கெட்டவர்கள். மற்றொன்று இறுதியில் கெட்டவனும் நல்லவனாக திருந்துவது போன்றோ அல்லது இருவருமே அண்ணன், தம்பி என்பது போன்றோ காட்சிகள் அமைக்கப்படும். இதில் அத்தகைய கிளிசேதனங்கள் எதுவும் இல்லை. ஆனால் அதுமட்டுமே போதும் என்று நினைத்துவிட்டது தான் பிரச்சனை என்று நினைக்கிறேன்.

கதை இதுதான். தாய்லாந்தின் பாங்காங் நகரில் தாதாவாக இருக்கும் ஆதி,(ஜெயம் ரவி) அங்கு உணவுவிடுதியில் பணிபுரியும் ஒரு தமிழ்பெண்ணால்(நீது சந்திரா) ஈர்க்கப்படுகிறான். அவள் அவனது அன்பை புறக்கணிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவனது காதலை ஏற்றுக்கொள்ளும் அவள், ஒரு துப்பாக்கி சண்டையில் தன் உயிரைப் பணயம் வைத்து அவனது உயிரைக் காப்பாற்றுகிறாள். ஆதியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவனை பிரிந்து வாழும் அவனது தாயிடம் உங்கள் மகனை நீங்கள் விரும்புவது போல் மாற்றுவது என் பொறுப்பு என்று வாக்கு கொடுக்கிறாள். மறுநிமிடம் தன் தந்தையை காண அவனை இந்தியா அழைத்துச் செல்லும் வழியில் ஆடியன்ஸான நமக்கு, ஒரு உண்மை தெரியவருகிறது. அது இந்தியாவில் ஆதியை என்கவுண்டரில் கொல்லத் துடிக்கும் ஒரு அஸிஸ்டெண்ட் கமிஸ்னரிடம் அவள் போனில், ”அவனை நான் கொண்டு வந்து உன்னிடம்  சேர்த்து விடுகிறேன்.. பின்னர் உன்பாடு” என்கிறாள். அவள் அப்படி நடந்து கொள்ள காரணம் என்ன…? ஆதியின் நிலை என்னவானது…? என்பது மீதிக்கதை.

கேட்பதற்கு சுவாரஸ்யமான ஒரு நாட் தான். ஆனாலும் இந்தப் படம் ஏன் வெற்றிபெறவில்லை என்பதுதான் நமக்கு மிகமிக முக்கியம். இதே போன்று ஒரு பழைய தமிழ்படத்தின் கதைக்கரு உண்டு. அதில் சிவாஜிகணேசன் கதாநாயகன். நாயகி சரியாக நினைவில்லை. படத்தின் பெயரும்தான். ஆனால் கதை இதுதான். நாயகி நாயகனை உயிருக்கு உயிராக காதலிப்பாள், அவனை திருமணம் செய்ய முயலும் போது பல தடங்கள்கள் வரும். எல்லாத் தடங்கள்களையும் மீறி அவள் நாயகனை மணம் புரிவாள். முதலிரவு அறை பழம் அறுக்க இருந்த கத்தியை எடுத்து, நாயகன் எதிர்பாராத தருணத்தில் அவனை கத்தியால் குத்துவாள். அப்போது இடைவேளை.. ஏன் அவள் அவனை கத்தியால் குத்தினாள், அவர்களுக்குள் என்ன பகை, என்ன பிரச்சனை என்பது மீதிக்கதை. இது மிகப்பெரிய வெற்றியை பெற்றபடம் என்றே நினைக்கிறேன்.

ஆனால் மேற்சொன்னபடி இதே மாதிரியான கதை சொல்லும் முறையை கொண்ட அமீரின் ஆதிபகவன் தோற்றுப்போனது ஏன்.? முக்கியமான காரணம் அந்த சிவாஜிபடத்தில் கதையை நகர்த்திச் செல்லும் முதன்மை கதாபாத்திரமாக(புரோட்டகோனிஸ்ட்) கதாநாயகி இருப்பார். அப்படித்தான் ஆதிபகவனிலும் ராணி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நீதுசந்திரா தான் கதையை நகர்த்திச் செல்பவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து கதை ஆதி என்னும் ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் மீது பயணிப்பது போல் கதையை அமைத்ததுதான் முக்கியமான பிழை என்று எனக்குத் தோன்றுகிறது.( அது தவறாகவும் இருக்கலாம்…)

நீது சந்திரா செய்கின்ற சூழ்ச்சிக்கு காரணம், மும்பையில் இருக்கும் தன் உயிருக்கு உயிரான காதலன் பகவானை(ஜெயம் ரவி) சிக்கலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே. அதனால் தான் ஆதியை காதலிப்பது போல் நடிக்கிறார். இந்தியாவுக்கு அழைத்தும் வருகிறார். இப்படி கதையை பெரும்பாலும் நகர்த்திச் செல்லும் கதாபாத்திரமாக நீது இருக்க, படம் ஜெயம்ரவியின் (ஆதி) மீது பயணம் செய்ததால் நிவர்த்தி செய்யமுடியாமல் போனக் குறைகள் என்னவென்று பார்ப்போமா…?

1.முதல்பாதி பயங்கர எரிச்சலை ஊட்டக்கூடியதாக அமைந்துவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் முதல் பாதியில் கடைசி ஐந்து நிமிடத்திற்கு முன்பு வரை கதை ஆரம்பிப்பதே இல்லை.

2. நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் தொடர்பான காட்சிகள் மிகுந்த செயற்கைதனம் கலந்ததாக அமைந்துவிடுகின்றன. ( அவை அனைத்தும் முன்திட்டத்தின் படி ஜோடிக்கப்பட்டவை என்பதை இரண்டாம் பாதியில் கூறினாலும் ஆடியன்ஸ் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை கடந்துவிடுகின்றனர்.)

3. மொத்தகதை நகர்வுக்கும் காரணம், நீதுவுக்கு தன் காதலன் பகவான் மீது இருக்கும் அபிரிமிதமான காதல்தான் என்று இருக்கும் போது அந்த காதல் எப்படி இருக்க வேண்டும்…? ஆனால் அது குறைந்தபட்சம் ஒரு காட்சியாகக்கூட இல்லாமல், வெறும் உப்புசப்பு இல்லாத ஒரு வசனத்துடன் அந்த காதலின் ஆழம் தரை தட்டிவிடுகிறது. அந்த வசனம் இதுதான் : எல்லாரும் என்ன படுக்க கூப்டாங்க… அவன் மட்டும்தான் வீட்டுக்கு கூப்டான்….

4. ஆதியின் மாஜி தலைவன் கதாபாத்திரம், அந்த இரண்டு ஆந்திர தொழிலதிபர்களின் கதாபாத்திரம் எல்லாம் ஆதியின் ஹீரோயிசத்தைக் காட்டவும், ஆதியை ஓரிடத்தில் நீது காப்பாத்தவும், ஆதி போலீசிடம் இருந்து தப்பி ஓடவும் மட்டுமே பயன்பட்டிருக்கிறது. இந்த கதாபாத்திரங்களையும், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் தூக்கிவிட்டு, அந்த காட்சிகளின் தேவையை வேறுவிதமான காட்சிகளின் மூலம் நிவர்த்தி செய்திருந்தாலே முதல் பாதி சற்று வலுவாகி இருக்கும்
.
 5. இரண்டாம் பாதியில் முதல்பாதியில் ஒட்டாமல் சென்ற காட்சிகளுக்கான ஐஸ்டிபிகேசன் சில சொல்லுவாரகள். உதாரணமாக குண்டடிபட்ட ஆதியை காப்பாற்ற நீது துப்பாக்கியால் சுடுவாள், குண்டு நீக்கி சிகிச்சை செய்து ஆதியை காப்பாற்றுவாள். இதற்கு ஆடியன்ஸ் மத்தியில் பயங்கர சிரிப்பலை.. ஏனென்றால் அவள் உணவுவிடுதியில் பணியாற்றியவள். அவளுக்கு எப்படி சிகிச்சை செய்யத் தெரியும், துப்பாக்கிபிடிக்கத் தெரியும். ஆனால் இந்த காட்சிக்கு ஐஸ்டிபிகேசன் இரண்டாம் பாதியில் வரும். நீதுவும் ஒரு கேங்க்ஸ்டர் கும்பலை சேர்ந்தவள் என்று. முதல்பாதியில் ஆடியன்ஸ் மிகவும் எரிச்சலடைந்துவிடுவதால் இரண்டாம் பாதியில் சொல்லப்படும் இது போன்ற ஐஸ்டிபிகேசன் எதுவும் எடுபடுவதில்லை.

 6. படத்தின் இறுதிவரை எந்த கதாபாத்திரத்தின் மீதும் பார்வையாளர்கள் பயணிக்க முடிவதில்லை.

 7. மேலும் பொதுவாக முதல்பாதி சுமாராக இருந்து, இரண்டாம் பாதி நன்றாக இருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகும். ஆனால் முதல்பாதி மோசமாக இருந்து இரண்டாம் பாதி சுமாராக இருந்தாலும் படம் மோசம் என்றே பேசப்படும். அதுவே ஆதிபகவனுக்கும் நடந்திருக்கிறது.

ஜெயம் ரவிக்கு நடிப்பதற்கு வாய்ப்பு என்று பார்த்தால் அந்த அரவாணி கதாபாத்திரம் மட்டுமே. அதிலும் அவர் பெரிதாய் ஒன்றும் ஜொலிக்கவில்லை. ராணி கதாபாத்திரத்தில் நீதுவின் நடிப்பு மட்டும் கவனம் ஈர்க்கிறது. இசையும் பிண்ணனியிசையும் படுமோசம்.. யுவனுக்கு என்னாயிற்றோ….? இதை ஏதோ ஒரு புதுமுக இயக்குநர் எடுத்திருந்தால், அட்லீஸ்ட் அவரது முயற்சியை பாராட்டி படம் சுமாராக இருக்கிறது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் பருத்திவீரன் மூலம் ஒரு அற்புதமான திரைக்கதை பார்மூலாவை தமிழ்சினிமாவுக்கு தந்த அமீர் அவர்களின் படம் என்பதாலேயே இதை மோசமான படம் என்றே கூறவேண்டியிருக்கிறது. இந்த சீண்டல்கூட மீண்டும் அவரிடம் இருந்து இதுபோன்ற படைப்புகள் வந்துவிடக்கூடாது என்கின்ற முன் ஜாக்கிரதையால்தான்…….. ஏனென்றால் அது அவருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நல்லதே அல்ல…..

No comments:

Post a Comment