Sunday 3 February 2013

டேவிட்:


மணிரத்னத்தின் உதவி இயக்குநர். மேலும் இவர் முதல்படமாக எடுத்த சைத்தான் படம் ஹிந்தியால் நன்றாகப் போனது. இரண்டாவது படத்திலேயே இரண்டு மாஸ் ஹீரோக்களின் கால்சீட்டைப் பெற்று அதை இந்தியிலும் தமிழிலும் செய்கிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறியது. அப்படி ஒரு கதையை சொல்லி இரண்டு ஹீரோக்களின் கால்சீட்டையும் வாங்கி இருக்கிறாரே.. கண்டிப்பாக படம் மினிமம் கேரண்டியுடன் இருக்கும் என்று நம்பித்தான் போனேன்.


ஆரம்பத்தில் ஜீவாவின் கேரக்டரைஷேசனும், ஆங்காங்கே வரும் சில வசனங்களும் நச்சென்று இருக்க.. லேசாய் நம்பிக்கை துளிர்த்தது. ஆனாலும் விக்ரமின் போர்சன் ஏனோ ஆரம்பத்தில் இருந்தே ஒட்டவேயில்லை. சரி போக போக ஏதாவது கதை சொல்வார்கள் என்று உட்கார்ந்திருந்தால் ”கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை” தான் இருந்தது. போதையிலிருந்த டேவிட் (விக்ரம்) கேரக்டர் கடைசிவரை தானும் தெளியாமல் நம்மையும் தெளிய விடாமல் துரத்தி துரத்தி அடிக்கிறது. சரி இதை விட்டொழித்து நாம் ஜீவா போர்சனிலாவது பயணிப்போம் என்று முயன்றால் அதிலும் ஏகத்துக்கு தடை.


டேவிட் என்னும் பெயர் கொண்ட விக்ரமின் கதை. கல்யாண நாளில் மணப்பெண் காதலனுடன் ஓடிவிட.. கல்யாணம் ஆகாமல் தவிக்கிறார் விக்ரம். தன் நண்பன் ஒருவன் காது கேளாத, ஊமைப் பெண்ணை காதலிப்பதாக சொல்ல.. அவளுக்கு உதவ சென்ற இடத்தில் அவள் நட்பு ரீதியில் ஒரு முத்தம் வைக்க.. அதை காதலின் அச்சாரமாக நினைத்து அவளை திருமணம் செய்ய விக்ரம் முயல… அதற்கு துணைபோகிறார் விக்ரமின் நண்பியாக வரும் மசாஜ் பார்லர் நடத்தும் தபு. கடைசியில் கல்யாணம் நடந்ததா இல்லையா..?

டேவிட் என்னும் ஜீவாவின் கதை. பெரிய கிட்டாரிஸ்ட் ஆக நினைப்பவர். அப்பா சுவிசேசத்தில் தன் வாழ்க்கையை கழிப்பவர். இந்து மத அரசியல் தீவிரவாதிகளால் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றார் என்ற பெயரில் நடுரோட்டில் அடித்து அவமானப்படுத்தப்படும் தந்தை நாசரை பார்த்து வெதும்பும் மகன், தன் அப்பா அப்படி நடக்கவேயில்லையே.. பின்பு ஏன் அடித்தார்கள் என்று பதில் தே……..டி…..!!!!!!!!!!!!!!! அலைகிறார் ஜீவா. அவர்களும் பதில் மட்…….டும் சொ……ல்லி!!!!!!!!!! அனுப்ப முனையும் போது ஜீவா என்ன முடிவு எடுத்தார் என்பது மீதிக்கதை.


நல்ல விசயங்கள் என்று பார்த்தால், ஆங்காங்கே வரும் சில வசனங்கள், உதாரணமாக, ”தொலைஞ்ச ஆட்ட இங்க தேடி போனோம்ணா… மீதி ஆடெல்லாம் பிரியாணி தான்” “டேவிட் உன் கல்யாணம் நின்னதுக்காக நான் அழுகல… ஓடிப்போன என் பணத்தையும் தூக்கிட்டு போய்ட்டா…” “ஓ வீடு ஓடி போயிருச்சா…” சொல்லலாம். மேலும் சாண்டாக்ளாஸ் மூகமூடியை மாட்டிக் கொண்டு விக்ரம் செய்யும் சில சேஷ்டைகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் இவை மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு போதாதே…
தன் தந்தையை அடித்தவர்களை தேடிச் சென்று ஏன் அடித்தீர்கள் என்று விசாரிக்கும் ஜீவாவின் செயல்கள் எல்லாம் பயங்கர அமெச்சூர்தனம்.. ஜீவாவின் கதை நடப்பது 1999ல், விக்ரமின் கதை நடப்பது 2010ல். இந்த இரண்டு நிகழ்வையும் க்ளைமாக்ஸ் என்னும் புள்ளியில் இணைத்து க்ளைமாக்ஸை காமெடியாக மாற்றி இருப்பார்கள். ஆனால் அந்த காமெடி க்ளைமாக்ஸை பார்க்கும் போது ஏனோ கொலைவெறி வருகிறது.


மீயூசிக் அநிருத்தையும் சேர்த்து ஆறு பேர் செய்திருக்கிறார்கள். ரிமோவின் இசையில் கோவாலில் இரவு நேரத்தில் அந்த படகு பயணத்தில் விக்ரம் மற்றும் செர்வானி இடையிலான அந்தப் பாடல் மட்டும் ரசிக்கும்படி உள்ளது. மற்ற எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ரத்னவேலு மற்றும் பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறது. சில கேமரா கோணங்கள் அற்புதமாக இருக்கிறது. குறிப்பாக அந்த தென்னை மரத்தில் இருவர் அமர்ந்து தண்ணியடிக்கும் போது அடியில் ஒரு படகு க்ராஸ் ஆவதைக் கூறலாம்.


ஒரு நல்ல டயலாக்கை வைத்துக் கொண்டு படம் செய்வது எப்படி என்பதை விளக்குவதற்காக செய்யப்பட்ட முயற்சியோ என்று சந்தேகிக்க தோணுகிறது. இந்த ஒரு டயலாக்கில் இருக்கும் கதையை நம்பியா இரண்டு மாஸ் ஹீரோக்களும் தங்களது கால்சீட்டை வீணடித்தார்கள் என்று நினைக்கும் போது மயக்கமே வருகிறது.

No comments:

Post a Comment