Wednesday 26 December 2012

நீதானே என் பொன் வசந்தம்:


வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த படம். பெரும்பாலும் கெளதம் படங்கள் மிகப்பெரிய கலை பொக்கிச படங்களாக இல்லாமல் இருந்தாலும் அவை எப்போதுமே என் மனதுக்கு சற்று நெருக்கமானதாகவே இருந்திருக்கின்றன. உதாரணமாக மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு விண்ணை தாண்டி வருவாயா, போன்ற படங்களை சொல்லலாம். இந்த பட்டியலில் விடுபட்ட பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் கூட குறைபாடு உள்ள படங்களாக தெரிந்ததில்லை..

கதை, வசனங்கள், வித்தியாசமான கேமரா ஆங்கிள், புதிய முயற்சியிலான கலர் டோன் இப்படி நம்மை கட்டிப் போடும் விசயங்கள் இருந்தாலும், அதையும் மீறி பெரும்பாலும் ஒரு பெண்ணின் நுணுக்கமான மன உணர்வுகளை பிசகாமல் பிரதிபலிக்கும் இவரகு பாங்கு என்னை மற்ற எல்லா அம்சங்களையும் மீறி ஆக்ரமித்துக் கொள்ளும்… அவை ஒரே மாதிரியான பாணியிலான கதைகளாகவே இருந்தாலும் (ஆணின் காதலை ஏற்றுக் கொள்ளவா வேண்டாமா…? என்கின்ற ஒரு உச்சகட்ட குழப்ப நிலையில் அந்த பெண் கதாபாத்திரங்கள் புனையப்பட்டிருக்கும்…) அவை என்னை எப்போதும் சளிப்படையவோ அல்லது அயர்ச்சி அடையவோ செய்ததே இல்லை… சில நேரங்களில் இவரது படத்தை பார்த்துவிட்டு எனது நண்பர்களுடன் இதில் எதெல்லாம் இவரது வாழ்வில் நடந்திருக்கும் என்று மிகவும் காரசாரமாக விவாதித்து அதை நிருபிக்கும் முயற்சி வரைக்கும் நான் சென்றிருக்கிறேன்….

உதாரணமாக விண்ணை தாண்டி வருவாயாவில் ஹீரோ ஒரு உதவி இயக்குநர், அவனது காதலி ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாகவும், வீட்டில் சம்மதிக்காத காரணத்தாலும் பிரிந்து செல்கிறார். இந்த ஹீரோவான உதவி இயக்குநர், இயக்குநராகும் தனது முயற்சியில் தனது காதல்கதையையே தன் முதல் படமாக எடுக்கிறார். ஆனால் அதில் தன் காதலி பிரிந்து செல்லாமல் தன்னை திருமணம் செய்வது போன்று காட்சிப்படுத்தி இருப்பார். அதை பார்க்க தற்போது திருமணம் ஆகி இருக்கும் தன் பழைய காதலி ஜெஸியை அழைத்து வருவார். படம் பார்த்த ஜெஸி அழுது கொண்டே கூறுவார்…. “என்ன அழ வைக்காத கார்த்திக், நான் ஒண்ணும் அவ்வளோ நல்லவ இல்லியே…. நாந்தா உன்ன விட்டு போய்ட்டேனே” அதே திரைப்படத்தில் ஆரம்ப காட்சியில் திருமண கோலத்தில் இருக்கும் ஜெஸி, தன் காதலன் கார்த்திக்கின் நினைவால் திருமணத்தையே நிறுத்திவிடுவார்.

இப்போது அப்படியே கெளதமின் முதல் படத்திற்கு வாருங்கள்… “மின்னலே” இதில் க்ளைமாக்ஸ் காட்சியில் தனது திருமணத்தை நிறுத்தி விட்டு மாதவனுக்காக திரும்பி வருவார் ரீமாசென்… காதல் கைகூடிவிடும். இந்த மின்னலே என்கின்ற கெளதமின் முதல் படத்தை அவர் தன் காதலி (ஜெஸி=………………………………)க்கு காட்டி இருக்கலாம். அப்போது அவர் ஜெஸி கூறிய அதே வசனங்களை கூறி இருக்கலாம்.. “என்ன அழ வைக்காத கெளதம்.. நான் ஒண்ணும் அவ்ளோ நல்லவ இல்லையே… நாந்தா உன்னவிட்டு போய்ட்டேனே…” இப்படியெல்லாம் நான் வாதிட்டு இருக்கிறேன்… ஏனென்றால் இது போல் குழப்ப நிலையில் முடிவெடுக்க முடியாமல், சிறு சிறு சண்டைகளை மனதில் வைத்துக் கொண்டு வீம்பு செய்து கொண்டு தங்களையே தண்டித்துக் கொள்ளும் பெண்கள் எனக்கும் ஓரளவுக்கு பரிச்சயம். அவர்களது குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை இவரது படங்களை விட வேறு எந்த படங்களும் தெள்ள தெளிவாக காட்டியதே இல்லை….

சரி… உனக்கு என்னாயிற்று.. நீதானே என் பொன் வசந்தம் படத்துக்கு விமர்சனம் எழுதுறதா சொல்லிட்டு வேற எல்லா பட டயலாக்கையும் சொல்றீயேன்னு கேக்குறீங்களா…. அவுங்க பேசுன டயலாக் எல்லாம் இருக்கட்டும்…. நீதானே என் பொன் வசந்தம் பார்த்துவிட்டு நான் பேசிய டயலாக் என்ன தெரியுமா…. கண்களில் நீர் கோர்க்க…. “என்ன அழ வைச்சிட்டீங்களே கெளதம், நான் ஒண்ணும் அவ்ளோ கெட்டவன் இல்லயே…, படம் வேணான்னு சொல்லிட்டு என்னால தியேட்டர விட்டும் போக முடியாதே…”

கதையென்று பெரிதாக ஒன்றும் இல்லை… அதே காதல், அதே ஈகோ, அதே குழப்பம், கல்யாணத்தை நிறுத்தி க்ளைமாக்ஸ்….. இதில் புதியதாக நான்கு பருவ காதல். குழந்தை பருவம், பள்ளி பருவம், கல்லூரி பருவம், வேலை பார்க்கும் பருவம்.

இது ஏறத்தாழ விண்ணை தாண்டி வருவாயா படத்தின் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் வைத்த பதிவுதான்… ஆனால் VTVல் இருந்த அந்த 
அற்புதமான காதல், அழகான ஆழமான வசனங்கள், காதலின் வலி, மொத்தத்தில் அந்த திரைக்கதைக்கான உயிர், இவை எதுவுமே இல்லாத வெற்று எழும்புகூடாகவே காட்சியளிக்கிறது இந்த நீதானே என் பொன் வசந்தம்….

பல இடங்களில் எனக்கு சந்தேகமாகவே இருந்தது… இது கெளதம் படம்தானா என்று… கதை, காதல், விஸ்வல், வசனம் என எதிலுமே அவரது சாயல் தெரியவில்லையே என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.. நண்பன் தான் தெளிவு படுத்தினான்… இது கெளதம் படம்தான்… ”நன்றாக பார்.. தமிழ் வசனங்களுக்கு இணையாக ஆங்கில வசனங்களும் வருகிறதே..” என்று.. நான் ஆமோதிக்க வேண்டியதாயிற்று…. கெளதம் வாசுதேவ் மேனனின் படம் என்பதற்கான ஒரே ஒரு அறிகுறியுடன் வந்திருக்கும் இந்த படம்தான் ”நீதானே என் பொன் வசந்தம்…”

No comments:

Post a Comment