Saturday 1 December 2012

நீர்ப்பறவை:



”தென் மேற்கு பருவக்காற்று” சீனு ராமசாமியின் அடுத்த படம். மீனவர்களைப் பற்றிய கதை என்பதால் இலங்கை கடற்படையால் கொல்லப்படும் தமிழக மீனவர்களைப் பற்றிய தகவல்கள் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் திரையரங்குக்கு சென்றால் ஏமாற்றமே மிஞ்சும்.. மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் சென்றால் ஒரு நல்ல திரைப்படத்தை கண்ட அனுபவம் கிடைக்கும்..

ஊருக்குள் கடன் வாங்கி குடித்துக் கொண்டு திரியும் நாயகன்… சுவிசேசம் செய்து கொண்டிருக்கும் நாயகி.. நாயகியின் மீது ஏற்பட்ட காதலால் நாயகன் திருந்தி, சொந்த போட் ஒன்றை வாங்கி வாழ்வின் நல்ல நிலைக்கு உயரும் வழக்கமான தமிழ் சினிமா கதைதான்… புதுசு என்னவென்றால் க்ளைமாக்ஸ் மற்றும் யாரும் தொட்டிருக்காத.. தொடத் தயங்கும் கதைக் களனை எடுத்தது.. அதற்காகவே சீனு ராமசாமியின் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கடலுக்கு போன தன் கணவன் (விஷ்ணு) திரும்பி வருவான் என்று   27 வருடமாக காத்திருக்கும் மனைவி (வயதான சுனைனா == நந்திதா தாஸ்). தன் மகன் வீட்டை விக்க முயலும் போதும் தன் கணவன் உயிரோடு திரும்பி வருவான்.. அவன் வரும் போது வாழ வீடு வேண்டும் என்று சொல்லி வீட்டை விற்க மறுக்கிறாள்.. அன்று இரவே தன் அப்பாவை அம்மாவே கொன்று புதைத்திருக்கிறாள் என்ற உண்மை மகனுக்கு தெரியவர… அதிர்ந்த மகன் போலீஸ்க்கு தகவல் சொல்ல… கோர்ட்டில் தன் கணவனை தாந்தான் கொன்றேன் என்று அவள் கோர்ட்டில் கூறுகிறாள்… ஏன் கொன்றால் என்கின்ற விவரணகதையாக அவர்களது கடந்தகால வாழ்க்கை விரியத் தொடங்குகிறது…

முதல்பாதி முழுவதும் கதாநாயகன் ஊரெங்கும் கடன் வாங்கி குடிப்பதும், ஊரில் இருப்பவர்களிடம் எல்லாம் அடிவாங்கி திரிவதுமாக இருக்க… ஒரு கட்டத்தில் கதாநாயகியை ஏமாற்றி பணம் பறித்து அவன் குடித்துவிட.. அதை தொடர்ந்து மீண்டும் பணம் கேட்டு வந்த அவன் தலைமேல் கைவைத்து ஜெபம் செய்து அனுப்ப… அவனுக்கு காதல் பைத்தியம் பிடிக்கிறது… தன் காதலி சொன்னால் என்ற ஒரே வார்த்தைக்காக அதுவரை எந்த வேலைக்கும் போகாதவன் சொந்தமாக படகு வாங்கி மீனவனாக உயர்கிறான்..

விஷ்ணு சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது.. இருப்பினும் குடிச்சிவிட்டு ஊதாரியாக சுற்றி திரியும் கேரக்டருக்கு அந்த உடல்வாகுவும் முகசாயலும் பொருந்தவில்லை… ”ஏய் சர்ச் பாப்பா… சர்ச் பாப்பா..” என்று சுனைனாவை கூப்பிட்டு லந்து செய்வது, உருட்டு கட்டையை எடுத்துக் கொண்டு சாராய பானைகளை உடைத்து எரிந்துவிட்டு.. “அப்பாலே போ சாத்தானே” என தம்பி ராமையா தலையில் கைவைத்து ஜெபம் செய்வது, பாவ மன்னிப்பு கேட்க போய் 20 ரூபாய் கடன் கேட்பது என நடிப்பதற்கு பல இடங்களில் வாய்ப்பு… சுனைனா உண்மையாகவே நன்றாக நடித்திருக்கிறார்… தன் வருங்கால கணவனின் வல்லத்தை பார்த்து விட்டு ஆனந்தத்தில் அழும் போதும், அருளப்பசாமியை “மிஸ்டர் அருளப்ப சாமி… மிஸ்டர் அருளப்பசாமி” என்று அழைக்கும் போதும்… பயந்து போய் “அப்பாலே போ சாத்தானே” என்று துரத்தும் போதும் கவனம் ஈர்க்கிறார்...

சரண்யா பொன்வண்ணனுக்கு பேர் சொல்லும்படி இன்னொரு படம்… அம்மணிக்கு அம்மா கேரக்டர் கைவந்த கலையாகிருச்சின்னு நினைக்கிறேன்.. நடிப்பு ரசிக்கும்படி இருந்தாலும் சில இடங்களில் களவாணி சாயல் தெரிவதை இயக்குநர் கவனித்து தவிர்த்திருக்கலாம்.. தங்கச்சி மடம் கிராமத்தில் வள்ளம் செய்து கொடுப்பவராக சமுத்திரக்கனி கதாபாத்திரம்.. தொழிலில் காட்டும் இறுக்கமும், உதவும் போது காட்டும் நெகிழ்வும் உருக வைக்கிறது.. இந்த உடல்மொழி சமுத்திரக்கனி நடிப்புக்கு புதிது.. அருளப்ப சாமிக்கு தயாராகும் வள்ளத்தை பார்க்க… வரும் எஸ்தரை உள்ளே அழைத்து அவர் பேசும் காட்சி ரசனை…

இப்படி பாராட்ட பல விசயங்கள் இருந்தாலும்.. பல இடங்களில் கதை நகராமல் அதே இடத்திலேயே நிற்பது சலிப்பை ஏற்படுத்துகிறது… இரண்டாம் பாதியில் வரும் உப்பள கதாபாத்திரம் அவரது தங்கை கதாபாத்திரமும் கதைக்கு எந்தவிதத்தில் பொருந்துகிறது என்றே தெரியவில்லை… உப்பள தொழிலில் உள்ள கஷ்டத்தையும் சேர்த்தே.. கூறிவிடுவோமென இயக்குநர் நினைத்தாரோ என்னவோ….? மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வேண்டிய க்ளைமாக்ஸ் காட்சிகள் மிகச் சாதாரணமாக கடந்து போவது பலவீனம்..

இதனை ஒரு கடலோர காதல்கதை என்று ஓரிரு வரிகளில் சொல்லிவிடலாம்… எந்தவித சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத சாதாரண திரைக்கதை… ஆரம்ப காட்சியில் நந்திதா தாஸை போலீஸ் கைது செய்யும் காட்சியும், ஹீரோ அருளப்பசாமிக்கு (விஷ்ணு) விரோதியாக மாறலாம் என்று யூகத்தை கிளப்ப ஜோடிக்கப்பட்ட சிலுவை கதாபாத்திரமும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்… மேலும் மனதை அரித்துக் கொண்டே இருந்த ஒரு கேள்வி…? இந்த படத்திற்கு நந்திதாதாஸ் எதற்கு..? அந்த காட்சிகளையும் சுனைனாவே செய்திருக்கலாமே…?

மீனவர்கள் என்பதால் பின்புலமாக கிறிஸ்துவ சமூகத்தை சேர்த்தது… பிறப்பால் மீனவனாக இல்லாதவனை இந்தியாவில் எந்த பகுதியிலும் கடலில் இறங்கி மீன்பிடிக்க அனுமதிக்கமாட்டார்கள்… என்பதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் 45 நாட்கள் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்ற தகவலும், படக்குழுவினரின் கள ஆய்வை சொல்கிறது.. கள ஆய்வில் கவனம் செலுத்தியது போல் சிறிது கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்…
வசனம் ஜெயமோகனும் சீனுவும். “அப்பாலே போ சாத்தானே” ”உங்க வலைய கடல்ல வீசுங்க… என்மேல வேணாம்” “இழவு சொல்ல வந்தவன்கிட்ட இவன் ஒரு இழவு சொல்லி காசு வாங்கிட்டானாம்…” “நம்மகிட்ட ஒற்றுமை இல்லையா… மீனவனுக்குன்னு ஒரு 30 தொகுதி இருந்ததுன்னா… நம்ம குரலும் வெளிய கேக்கும்…” “நீங்க நூறு பேரு சேந்து பண்ணா போராட்டம்… நாங்க பண்ணா தீவரவாதம்…” என ஆங்காங்கே வசனம் கடலளவு ஆழம்…

பாலசுப்ரமணியத்தின் கேமரா ராமேஸ்வரத்தின் கடல் சார்ந்த அழகை அள்ளி வந்திருக்கிறது… ரகுநந்தனின் இசையில் “பற பற பற.. பறவையொன்று…” ரசிக்கும் ரகம்… பிண்ணனியிசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை…
இன்றைய அரசியல் சூழலில் இலங்கை பிரச்சனை சார்ந்த கதையை பதிவு செய்து அதை திரையிடுவது என்பது மிக கடினம்தான்.. ஆனால் படத்தை பார்க்கும் போது அவர்கள் கடக்க நினைத்த தூரத்தில் பாதியை கூட கடக்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.. இருப்பினும் இது ஒரு நல்ல முயற்சி கண்டிப்பாக ஒருமுறை இந்த நீர் பறவையை கண்டு வரலாம்..  

No comments:

Post a Comment