Saturday 13 October 2012

மாற்றான்


மாற்றான்:
    

சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் இரண்டாவது படம். ”கோ”வின் வெற்றி படத்தின் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருந்தாலும், கடந்த சில காலங்களாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிலவிவரும் ”இந்தபடம்” இந்த ஹாலிவுட் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்ற குற்றசாட்டுகளில் கேவியின் அயன் (MARIA FULL OF GRACE), கோ (STATE OF PLAY) போன்ற படங்களும் சிக்கிக்கொள்ள.. படத்தின் நாயகன் சூர்யாவும், டைரக்டர் கே.வி ஆனந்தும் சேர்ந்து மாற்றான் எந்த படத்தின் தழுவலும் இல்லை என்று பேட்டி கொடுக்கும் அளவுக்கு அவர்களை இழுத்துச் சென்றது. இருப்பினும் மாற்றானும் ஏதோ ஒரு படத்தின் (STUCK ON YOU) அப்பட்டமான தழுவல்தான் என்றும் ஒரு செய்தி கசிந்து கொண்டிருக்கிறது. அது உண்மையா..? அல்லது வதந்தியா..? என்பது எனக்கு இன்றுவரை தெரியவில்லை என்பதால் இப்போதைக்கு இதை முழுக்க முழுக்க கேவி.ஆனந்தின் படைப்பாகவே கருதி விமர்சனம் எழுத துணிகிறேன்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.. அதில் ஒருவன் கொல்லப்பட.. மற்றொருவன் கொன்றவர்களையும்… கொல்ல தூண்டியவர்களையும் கண்டுபிடித்து தண்டனை கொடுப்பதுதான் மாற்றானின் கதை. தமிழ்சினிமாவிற்கான யூஸ்வல் லைன் தான். ஆனால் அந்த இரட்டையரில் ஒருவன் எதற்காக இறக்கிறான்.. என்கின்ற காரணம் சற்று தமிழ் சினிமாவிற்கு கொஞ்சமே கொஞ்சம் புதுசு..

திரைக்கதையில் முதல் பாதியில் இருக்கின்ற முக்கியமான மூன்று முடிச்சுகள் மிகச்சிறப்பாக அமைந்திருக்கின்றன. அந்த தைரியத்தில் தான் இரண்டாம் பாதியைப் பற்றி கவலையே படாமல் அவர்கள் இஸ்டத்திற்கு ஏதோ தோன்றியதை எடுத்திருப்பார்கள் போல் இருக்கிறது. அது படத்திற்கு பெரிய மைனஸ். அது சரியாக அமைந்திருந்தால் படம் மிகப்பெரிய ஹிட். ஆனால் அது அப்படி அமையவில்லை என்பதுதான் உண்மை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

வழக்கமான தமிழ்சினிமாவின் வெகு சாதாரணமான இரண்டாம் பாதிதான் இங்கும். பழி வாங்கும் படலம். அதை சொல்வதற்கு எத்தனையோ விதமான முறைகள் உள்ளன. ஆனால் நான் புதிதாக ஒன்றை முயற்சி செய்கிறேன் என்ற எண்ணத்தில் இருப்பதிலேயே மொண்ணையான ஒரு முறையை கையாண்டிருப்பதுதான் மிகப்பெரிய குறை.

விமலன் அகிலன் என இரண்டு கதாபாத்திரத்தில் சூர்யா. நடிப்பில் சூர்யாவிற்கு இன்னோரு மைல்கல் என்று சொல்லலாம். ஆனால் அதற்கு திருஸ்டி போல் இரண்டாம் பாதியில் ஆரம்ப காட்சிகளை தவிர்த்து சூர்யாவின் நடிப்பு கொடுமை செய்கிறது. அதற்கு அவரை குற்றம் கூறி பிரயோசனம் இல்லை. அயனில் பிரபுவை கொன்றப் பிறகு கடைசி இருபது நிமிடங்களில் வரும் ஒரு அலட்டலான நடிப்பு குறிப்பாக பொன்வண்ணனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது இருக்கும் மேனரிசங்களும் உடல்மொழியும் அப்படியே தொடர்வது போன்ற எண்ணம் தோன்றுகிறது. இயக்குநர் அதை உற்று நோக்கி சற்று தவிர்த்திருக்கலாம்.

காஜலை சூர்யாவின் கம்பெனியில் வேலை செய்பவள் என்று அறிமுகப்படுத்திவிட்டு கடைசிவரை சூர்யாவுடன் போகும் இடமெல்லாம் சுத்திக் கொண்டே இருப்பதை தவிர வேறு வேலையே அவரை செய்யவிடவில்லை. மரபியல் விஞ்ஞானி ராமசந்திரனின் (சச்சின் கண்டேல்கர்) கேரக்டரிலும் பல குழப்பங்கள்.. புறக்கணிப்பால் அவர் அப்படி நடந்து கொண்டார் என்றும் சொல்ல முடியாது.. ஏனென்றால் அது தொடர்பான காட்சிகள் வழுவற்றவை.. அடிப்படையில் கே.வி.ஆனந்த் ஒரு இளங்கலை வேதியியல் பட்டபடிப்பு முடித்தவர்.. எனவே கனா கண்டேன், அயன், எனத் தொடர்ந்து மாற்றானிலும் சில கெமிஸ்ட்ரி தொடர்பான சரக்குகள் உண்டு

அயனில் நம்ம டீம் எந்த வெளிநாட்டுக்கு போச்சி… ஓ காங்கோல்ல… அங்க இருந்து டையகோனலா ஒரு கோடு போட்டா எங்க போய் முட்டுது.. சோவியத் யூனியன்லயா… அப்ப அங்க சோவியத் யூனியன்ல இருந்து பிரிஞ்ச ஒரு கண்ட்ரி வச்சு கதை பண்ணிருவோம்னு யோசிச்சிருப்பாங்களோ… சத்தியமா படம் பாக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.

சினிமா இண்டஸ்ட்ரியில் அடுத்த சங்கர் ”கே.வி.ஆனந்த்” என்று பேசத் தொடங்கியதாலோ என்னவோ அவருக்கும் நாட்டுப்பற்று தொற்றிக் கொண்டது. கோ-வில் இளைஞர் சமுதாய அரசியலை சொ(கொ)ன்னவர்.. இங்கு சூர்யாவை வைத்து என் நாட்டுக் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று போராடி இருக்கிறார். அயனில் சூர்யாவிற்கு கஸ்டம்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை என்றால், இங்கு குடியரசு தலைவரின் விருது.

படத்தில் பல இடங்களில் லாஜிக்கே இல்லை. அதிலும் இந்த சைண்டிஸ்டின் அடியாட்கள் ஒரு நாட்டு ராணுவத்துடன் மோதுவது எல்லாம் உச்சபட்ச கொடுமை. அதிலும் சூர்யா மொழி தெரியாத நாட்டில் நுழைந்து அடிக்கும் லூட்டியும்(அது அகிலனின் கேரக்டரைசேசன்… என்று நீங்கள் சொன்னாலும்..) ராணுவ கேம்பில் இருந்து ஜஸ்ட் லைக் தெட் தப்பிப்பதும், ராணுவ அதிகாரியையே காப்பாற்ற அவரிடம் ஒரு சான்ஸ் கேட்டு அவரது உயிரையும் காப்பாற்றுவதும்…. என்னமோ போங்க என்று சொல்லத் தோன்றுகிறது.

அதுசரி… முக்கியமான ஒரு மர்மத்தின் முடிச்சை கண்டுபிடிக்க போகின்றவன் இப்படி கொஞ்சம் கூட சீரியஸே இல்லாமலா குழந்தைதனமாக அலைந்து கொண்டு இருப்பான். வோல்காவின் கதாபாத்திரம், வோல்காவுக்கும் காஜலுக்குமான உறவு, வோல்காவை முதலில் ரஞ்சித் ஏன் உள்ளே அனுமதிக்கிறான்.. என பல இடங்களில் லாஜிக் உறுத்தலுடன் காட்சிகள் அமைந்துள்ளன.. இவ்வளவு செய்கின்ற அந்த சைண்டிஸ்ட் வெளி நாட்டில் இருந்து ஏன் அந்த ஃபெர்டிலைசரை உணவுக்காக அல்ல என்று சொல்லி வாங்கி மாட்டுதீவணத்தில் பயன்படுத்த வேண்டும். அதை அவர் இங்கே தயாரித்துக் கொள்ள முடியாதா.. இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

படத்தில் வரும் கதாபாத்திரம் சம்பவங்கள் அனைத்துமே கற்பனை என்று சொல்கிறார்கள். ஆனால் 1992ம் ஆண்டு பிற நாடுகளை பின் தள்ளிவிட்டு ஒலிம்பிக்கின் பதக்க பட்டியலில் ரஷ்யா முன்னிலை பெற்றது உண்மை… அப்படி என்றால் அதிக மெடல் எப்படி வாங்கினார்கள் என்கின்ற கற்பிதம்  கற்பனையா..? விடை எனக்கு தெரியவில்லை.. அது உண்மையோ பொய்யோ.. ஆனால் இது போன்று காட்சியமைத்திருப்பது எப்படி ரஷ்ய நாட்டு தூதரக அதிகார்களுக்கு தெரியாமல் போனது என்று கேள்வி எழுகிறது.

வசனம் சுபா. முதல் முறை சுபாவுடன் கூட்டணி.. முதல் பாதியில் ஆங்காங்கே கவனிக்கும்படி இருக்கிறது வசனம். உதாரணமாக கம்யூனிசம் தொடர்பான வசனங்களை சொல்லலாம்… “ஏண்டா மொக்க மொக்க புக்கா படிச்சிட்டு வந்து அவ மேல வாந்தி எடுக்கிற..” “நெக்ஸ்ட் என்ன…. ம்ம்ம்.. புரோட்டா மாவு பிசஞ்சேல.. இப்ப சால்னா ஊத்து…” இரண்டாம் பாதியில் அவர் எழுதவே இல்லையோ என்று சந்தேகம் எழுகிறது. கே.வி ஆனந்துக்கு கம்யூனிசத்தின் மீது என்ன கோபமோ…? கோ-வைத் தொடர்ந்து இதிலும் பாய்ந்திருக்கிறார். வேறு யாரும் அவர் மீது பாய்ந்து விடக்கூடாது என்பதற்காக பேலன்ஸ் செய்யும் விதத்தில் சில வசனங்களும் உண்டு. உதாரணமாக “உனக்கு தின்ன உடுத்த எல்லா கிடைச்சா போதும்.. அடுத்தவன பத்தி எந்த கவலையும் இல்ல…” சொல்லலாம்.

பேக் ரவுண்ட் மீயூசிக் பல இடங்களில் சிறப்பாகவும், பல இடங்களில் மிக மோசமாகவும் அமைந்திருக்கிறது. இதில் இரண்டாம் பாதியில் சேசிங் காட்சியில் ஒரு குத்தாட்ட பாடலுக்கான பின்னணியிசை மனசாட்சியே இல்லாமல் போட்டிருக்கிறார்.. பாடல்கள் ஹரிஸுன் பழைய பாடல்களை நினைவு படுத்தினாலும் படத்தோடு பார்க்கும் போது ஒன்றிப்போவதால் பிரச்சனை இல்லை. குறிப்பாக “ரெட்டை கதிரே..” மாண்டேஜ் சாங் அருமை.. ”யாரோ யாரோ”(எம்மா எம்மா காதல் பொன்னம்மா ரீமிக்ஸ்) ”ராணி, கோணி” ஆகியவை ஒரு முறை கேட்கலாம் ரகம்.. கேமரா செளந்தர்ராஜன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை… அது போல் எடிட்டிங்கும் சில இடங்களில் மிக சுமாராகவே இருந்தது ஆச்சரியம் அளிக்கிறது. எடிட்டிங் ஆண்டனி..!

மொத்தத்தில் இந்த மாற்றான் ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதை அவர்களே விரும்பவில்லை போலும். எனவே இது சாதாரண வெற்றிப்பட வரிசையில் இடம் பெறும் என்பது என் அனுமானம். அதற்கு முழு முதற்காரணம் சூர்யாவின் நடிப்பும், முதல் பாதியும் மட்டுமே..

மாற்றான் தோட்டத்து மல்லிகையில் கொஞ்சம் மணம் உண்டு…

No comments:

Post a Comment