Tuesday 2 October 2012

தாண்டவம்:



டைரக்டர் விஜயும் நடிகர் விக்ரமும் சேர்ந்து செய்த இரண்டாவது படம். எப்போதும் டைரக்டர் விஜயின் படங்களை எடுத்துப் பார்த்தோமானால் அந்த கதைக்களனில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அந்த கதைக்குரிய கரு சர்ச்சைக்குரிய விசயமாக இருந்தாலும்… அது வெளிநாட்டுப் படங்களின் நகல் என்று விவாதிக்கப்பட்டாலும் கூட அவரது படங்களில் ஒரு சுவாரஸ்யம் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக மதராஸ பட்டினத்தில் ஆர்யா உயிரோடு இருப்பாரா..? மாட்டாரா…? அவர்கள் காதல் வெற்றி பெற்றதா..? இல்லையா…? மேற் சொன்ன இரண்டு விசயங்களிலும் இரண்டு நிகழ்வுகளுமே நிகழ சாத்தியக்கூறுகள் உண்டு. அது போலவேதான் தெய்வதிருமகளும்.. சாராவும் விக்ரமும் சேருவார்களா இல்லையா… சேருவதற்கும் சேராமல் போவதற்குமான சாத்தியக்கூறுகள்  இரண்டுமே அதில் கலந்து இருக்கும். ஒரு லைவ்வான விளையாட்டின் முடிவைப் போலத்தான்…! வெற்றி தோல்வி இரண்டுமே சாத்தியமான அம்சங்கள். அந்த சுவாரஸ்யம்தான் பார்வையாளனை தொற்றிக் கொண்டு அவனுக்கு க்ளைமாக்ஸ் வரை எந்த அலுப்பும் ஏற்படாமல் இழுத்துச் செல்ல உதவும். அது இந்த தாண்டவத்தில் இல்லவே இல்லை.

உங்களுக்கு எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன். அவர் எங்கள் வீட்டுக்கு அருகில் குடி வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தது. ராமமூர்த்தி என்ற பெயர் கொண்ட மிக அற்புதமான மனிதர். ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தன் ஒரே மகனை ப்ரைன் டியூமர் நோய்க்கு பலி கொடுத்த சோகம் எப்போதும் அவர் முகத்தில் இருந்து கொண்டே இருக்கும். அவரது மகன் வயது குழந்தைகளிடம் பாசமாக நடந்து கொள்வார். கேட்காமலே எல்லாமே வாங்கிக் கொடுப்பார். நண்பர்களுக்கு என்ன உதவி என்றாலும் தயங்காமல் செய்பவர். அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ஒரு நண்பர் சண்முகம்.. அவரும் எனக்கு பரிச்சயமே.. இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். குடும்ப நண்பர்கள் போல பழகி வந்தவர்கள்.

ஒரு நாள் அவர்கள் நிதி நிறுவனத்தில் கொள்ளை நடந்து பேப்பரில் பிரசுரமாகி பெரிய பிரச்சனையாகிவிட்டது. பின்னர் ஒரு நாள் அவரே என்னிடம் பேசும் போது அந்த கொள்ளை சம்பவத்திற்கு காரணம் சண்முகம் தான்.. அலுவலகத்தில் கொள்ளையடித்து செல்லும் போது விபத்தில் அவன் ஒரு காலை இழந்துவிட்டான்… அவன் தான் திருடன் என்ற உண்மை தெரிந்து அவன் மனைவி அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிவிட்டாள். அவன் இப்போது ஜெயிலில் இருக்கிறான் என்றார். அவன் புத்தி ஏன் தான் இப்படி போனது என்றே தெரியவில்லை என்று பரிகாசப்பட்டார்.
     
இதை அவர் என்னிடம் சொல்லி ஒரு வாரத்தில் அதே கால் இழந்த சண்முகம் பெயிலில் வந்து அவரை கொன்றுவிட்டான். பின்பு தான் உண்மை தெரிய வருகிறது.. அந்த கொள்ளை சம்பவத்தை செய்தவரே ராமமூர்த்திதான்.. செய்ததும் அல்லாமல் தான் மாட்டாமல் இருக்க தன் நண்பரை மாட்டிவிட்டு இருக்கிறார் என்று…

மன்னிக்கவும்… நான் பொய்யுரைத்துவிட்டேன்.. இது உண்மை சம்பவம் அல்ல.. இதுதான் தாண்டவத்தின் கதை. ஆனால் இதில் நீங்கள் இருவரையுமே (ராமமூர்த்தி, சண்முகம்) கெட்டவராகவோ அல்லது நல்லவராகவோ முன்னமே தீர்மானித்திருக்க முடியாது. அதனால் உங்களுக்கு குறைந்த பட்ச சுவாரஸ்யமாவது இருந்திருக்கும். ஏனென்றால் அவர்கள் கதைமாந்தர்கள் மட்டுமே கதாநாயகர்கள் அல்ல.

நிதிநிறுவனத்திற்க்கு பதில் RAW (இந்திய உளவு அமைப்பு) சண்முகத்திற்கு பதில் சிவக்குமார்(விக்ரம்), ராமமூர்த்திக்கு பதில் சரத், கொள்ளைக்கு பதில் வெடிகுண்டு தயாரிக்கும் சாட், விபத்தில் கால் போவதற்கு பதில் கண், மனைவி தற்கொலைக்கு பதில் கொலை… இதுதான் தாண்டவத்தின் கதை. படத்தின் முதல் காட்சியிலேயே லண்டனில் 2011/1 ல் பிரிட்ஜ் மற்றும் சில பொது இடங்களில் குண்டு வெடிக்கிறது. அடுத்து ஒரு வருடம் கழித்து கண்பார்வை இல்லாத விக்ரம் ஒருவரைக் கொன்று மாடியில் இருந்து தூக்கி கீழே போடுகிறார். இதற்கு பின்னர் எல்லா பார்வையாளர்களும் விக்ரமிற்கு பின்னே செல்ல தொடங்கிவிடுவர்.. அவர் எதிராளியை கொல்ல ஒரு நல்ல காரணம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு…
பார்வையாளனுக்கு எல்லா முடிச்சுகளும் அந்த இடத்திலேயே அவிழ்ந்து விடும். அதற்கு பின்பு அதில் என்ன தான் சுவாரஸ்யம் இருந்துவிட முடியும்.. ஒவ்வொரு படத்திற்கும் விக்ரம் கொடுக்கின்ற உழைப்பு பிரமிப்பானது.. ஆனால் அது இப்படி விழலுக்கு இறைத்த நீராவதுதான் வருத்தம்.

”கண் பார்வை இல்லாத ஒருத்தர் ஒலிஅலைகளை எழுப்பி அவை எதிரே இருக்கும் பொருளில் பட்டு திரும்பிவருவதைக் கொண்டு எங்கே எந்த பொருள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்” என்கின்ற ஒரே ஒரு சிறப்பான அம்சம் கொண்ட கதாபாத்திரம் என்பதற்காகவே விக்ரம் இந்த கதையை தேர்வு செய்தார் என்றால் அவரை என்னவென்று சொல்வது… அவருடைய நடிப்பை அந்த கதாபாத்திரத்துக்கு 100% மேலேயே அவர் கொடுத்திருந்தாலும் இது போன்ற ஒரு சாதாரண கதைக்கு ஏன் இவர் இவ்வளவு மெனக்கெடுகிறார் என்று தான் தெரியவில்லை.

லண்டனில் குண்டு வெடித்ததனாலோ என்னவோ முதல் பாதியில் பாதி நேரம் ஆங்கிலம் பேசும் வெளிநாட்டவர் ஆங்கிலத்தில் கதைக்க, மறுபக்கம் நாசர் கொலையாளியை, சந்தோசமாக ஆங்கிரி பேர்ட் விளையாடிக் கொண்டே தேடிக் கொண்டு இருக்கிறார். கண் தெரியாத விக்ரமோ கொலை செய்து கொண்டும் பியானோ கச்சேரி வாசித்துக் கொண்டு இருக்க, மறுபுறம் எமி ஜாக்சனோ அழகிபட்டம் வாங்கினாலும் கண் தெரியாத விக்ரமை காதலிப்பதாக பின்னாலயே திரிகிறார். கொஞ்சமேனும் ஆறுதலிப்பது சந்தானம் மட்டுமே.

அடுத்து வரும் அனுஷ்காவுடனான கல்யாணம், நட்பு, காதல் காட்சிகளே படத்தை ஓரளவேனும் உயிரோட்டமுள்ளதாக ஆக்குகின்றன. படுக்கையறையில் இருவருமே மாறி மாறி அடுத்தவர் தூங்குவதை ரசிப்பதும், விக்ரம் அனுஷ்காவிற்காக நடத்தும் பெயிண்டிங் கண்காட்சியும், தன் கணவனை சப்-இன்ஸ்பெக்டர் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் வேலைக்கு சிபாரிசுக்கு வரச்சொல்லும் காட்சிகளும்(லாஜிக் மிஸ்ஸிங் என்றாலும் கூட..) கவித்துவமான காட்சிகள். பின்பு நடப்பதை எல்லாம் அதர பழசான காட்சிகள்.. ஒரு பத்து நிமிடம் நீங்கள் வெளியே சென்று வந்தாலும் கூட எதையுமே மிஸ் செய்ய மாட்டீர்கள்.

எம்.எஸ்.பாஸ்கரின் நகைச்சுவை ஆஹா.. பரவாயில்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்.. மீண்டும் மீண்டும் அதையே பேசியே வெறுப்பேற்றுகிறார். ஜி.வியின் சொதப்பலான இசை மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. நீரவ்ஷாவின் கேமரா வழக்கம் போல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும், கதையோடு ஏனோ ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது.
இனி வரும் காலங்களில் இது போன்ற கதையை வைத்துக் கொண்டு பெரிய ஆர்ட்டிஸ்டிகளின் தயவில் பிழைத்துக் கொள்ளலாம் என்று, இயக்குநர்கள் நினைப்பார்களானால் அது தமிழ் சினிமாவிற்கான சாபகேடு.

தாண்டவம்- 100ரூபாய் கொடுத்து படம் பார்த்தால் நீங்கள் ஆடத்தான் வேண்டும்.


No comments:

Post a Comment